Saturday 24 December 2016

Wild Tales - கடவுள் பாதி மிருகம் பாதி


Hollywood ல் 3 Act structure என்று திரைக்கதைகான ஒரு இலக்கணம் வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் இதை அடியொற்றியே திரைக்கதை எழுதப்பட்டு அது படமாகும்.

Richard Linklater, Coen Brothers, Paul Thomas Anderson போன்ற இயக்குனர்கள் விதிவிலக்கு. வணிக வெற்றி தாண்டி யோசிக்கும் போது புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை பெரிய வெற்றி அடைவதும் உண்டு.

திரைக்கதை எழுதுவதிலும் புதிய புதிய முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் Pulp Fiction ஒரு trend setterபடம். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள், அவைக்கு பொதுவான ஒரு சரடு என்று non linear பாணி கதை. அதாவது 1,2,3 என்று வரிசையாக கதை நகராமல் 4,2,1,3,7,5  என்று நகரும். சீட்டு கட்டை கலைத்து போட்டு விளையாடுகிறோம். ஆனாலும் நமக்கு விளையாட்டு புரிகிறது தானே, அதே போல் இந்த non linear பாணியும். பார்த்து முடிக்கும் போது ஒரு அனுபவமாக மாறி விடும். எது மாதிரியும் இல்லாத ஒரு அசலான படம் என்று உணர்வோம்.

இப்படி non linear பாணியில், Magnolia, Memento, Amores Perros, Babel போன்றவை உலக புகழ் பெற்ற ஆக்கங்கள்.

இங்கே நாம் பார்க்க போகும் Wild Tales திரைப்படம் இதிலிருந்து ஒரு படி மேலே என்று கூறத்தக்க படம். படத்தில் மொத்தம் 6 குறும்படங்கள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரு பொதுவான மையம் உள்ளது ஆனால் ஒரு கதையில் வரும் கதா பாத்திரங்கள் வேறு எந்த கதையிலும் வர மாட்டார்கள்.  இது linear பாணி கதை என்பது கூடுதல் சிறப்பு.

ஒன்று: Pasternak
ஒரு நவீன உடை அணிந்த பெண் விமானத்திற்கான பயணச்சீட்டு  வாங்கிக்கொண்டு அது தன்னுடைய பயணம் செய்த தூரக் கணக்கில் சேருமா என்று விசாரித்து விட்டு விமானத்தில் சென்று ஏறுகிறாள். அருகில் இருந்த நபருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய முன்னாள் காதலன் Gabriel Pasternak குறித்து அவருக்கு தெரியும் என்பதை கேட்டு ஆச்சரிய ப்படுகிறாள். அந்த விமானத்தில் பயணம் செய்யும் மேலும் இருவர் தங்களுக்கும் Pasternak அறிமுகம் தான் என்று சொல்கிறார்கள். மீதியை திரையில் பாருங்கள்.

இரண்டு: The Rats

மழை பெய்யும் ஒரு இரவில் வாடிக்கையாளர் யாரும் இல்லாத உணவு விடுதிக்கு ஒருவர் வருகிறார். பணிப்பெண் ஓடி வந்து வரவேற்கிறாள். என்ன வேணும் என்று விசாரிக்கிறாள். Order எடுத்து கொண்டு உள்ளே செல்கிறாள். ஆனால் இதற்குள் கடைக்கு வந்திருக்கும் அந்த நபர் தனது தந்தை தற்கொலை செய்து கொள்ள காரணமானவர் என்றும் தனது தாயை மான பங்க முயற்சி செய்தவர் என்றும், இவருக்கு பயந்தே இடம் பெயர்ந்து இங்கு வந்ததாகவும் சமையலை கவனிக்கும் நடுத்தர வயது பெண்ணிடம் கூறுகிறாள். வந்தவர் அரசியல் புள்ளி என்றும் கூறுகிறாள். நடுத்தர வயது பெண் அவருக்கு சமைத்து கொண்டே அதில் எலி விசத்தை கலந்து விடவா என்று கேட்கிறாள். அடுத்தவர்களை சுரண்டி வாழும் ஆட்கள் உலகுக்கு தேவை இல்லை என்று தர்க்கத்தை அடுக்குகிறாள்.

மூன்று: Road to Hell

நீங்கள் Speilberg இயக்கிய Duel படம் பார்த்திருக்கிறீர்களா?! அதனுடைய 20 நிமிட பிரதி தான் இந்த மூன்றாவது கதை. Audi Car, Suit, Boot என்று பணக்கார ஆள் ஒருவர் சாலையில் தனக்கு வழிவிட தாமதம் ஆக்கிய நபரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு விரைந்து செல்கிறார். வண்டி puncture ஆகி விடுகிறது. வசவுகளை வாங்கிய நபர் அங்கு வந்து சேர்கிறார். அதன் பின் நடப்பவை ரணகளம், அதகளம்.

நான்கு: Bombita

இது வரை மனிதனுக்கும் மனிதனுக்குமான முரண் பாடு, பகை, வன்மம், குரோதம், பழிவாங்கும் உணர்ச்சி என்று பேசிய கதைகள் இங்கே ஒரு தனி மனிதனுக்கும் அமைப்புக்கும் ஏற்படும் முரண்பாட்டை முன்வைக்கிறது. ஒரு வகையில் இந்தியன், அந்நியன், எவனோ ஒருவன் பாணி என்று எளிமை படுத்தி சொல்லலாம்.

இதன் நாயகன் பழைய கட்டிடங்களை வெடி வைத்து தகர்க்கும் நிபுணன். அவர் எதையும் ஒரு கச்சித தன்மையோடு செய்பவர். அன்று பிறந்த நாள் கொண்டாடும் மகளுக்கு cake வாங்க கடைக்கு செல்கிறார். திரும்பி வரும்போது தன்னுடைய car, towing vehicle மூலம் அகற்ற பட்டிருப்பது கண்டு சினம் கொள்கிறார். அபராதம் கட்ட வேண்டிய இடத்தில் விளக்கம் கோருகிறார். மரியாதையாக நடத்த வேண்டுகிறார். எல்லாம் முடிந்து பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்கிறார். இது மனைவியுடன் ஒரு கசப்புணர்வான ஒரு உரையாடலுக்கு இட்டு செல்கிறது. மறுநாள் அபராதம் கட்ட போகும் போது மேலும் விளக்கம் கேட்டு தன்னுடைய boiling point யை அடைந்து விடுகிறார். எதிர்வினையாற்றுகிறார்.

ஐந்து: The Deal

முன்பாகம் சேதமடைந்த ஒரு BMW கார். நகரின் பணக்காரர் ஒருவரின் மகனுடையது. ஒரு கர்ப்பிணி பெண்ணை இடித்து விட்டு நிறுத்தாமல் வந்து விட்டான். ஆயிரம் இருந்தாலும் மகன் இல்லையா?!! அவனது அப்பா மகனை காப்பாற்ற தனது வக்கீலை அழைக்கிறார். பேரங்கள் ஆரம்பிக்கின்றன. 15 வருடமாக தன்னிடம் வேலை பார்க்கும் தோட்டக்காரரை பழியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார். எரிகிற வீட்டில் பிடிங்கின வரை லாபம் என்று பல கணக்குகள் முளைக்கின்றன.

ஆறு: Till Death Us Do Part

மிக கலகலப்பாக ஆரம்பிக்கும் இந்த பகுதி புதிதாக திருமணம் ஆன தம்பதியின் விருந்து நிகழ்ச்சி கொண்டாட்டங்களை காட்டுகிறது. விருந்திற்கு வந்திருக்கும் ஒரு பெண்ணுடன் தன்னுடைய கணவருக்கு தொடர்பு இருக்கிறது என்று மனைவி கண்டுபிடிக்கிறாள். ஒரு பெண்ணின் சமநிலை குலையும் போது...

நாம் நாகரீகம் கருதி பல சமயங்களில் பல விசயங்களில் விட்டு கொடுத்து விடுகிறோம். சில சமயம் எதிர்கால நலன் கருதி யாரையும் பகைக்க கூடாது என்று தெளிவாக ஒரு கோட்பாட்டை உருவாக்கி செயல்படுகிறோம். பொய்யாக கோபப்படுவது ஒரு கலை. அதை சிறப்பாக செய்பவர்கள் நம்மூரில் ஆட்சியாளர்களாக இருப்பார்கள். ஆறுவது சினம் என்பது அவ்வை. ரௌத்திரம் பழகு என்பது பாரதியார் வாக்கு. எங்கே நம் சினம் செல்லுபடி ஆகுமோ அங்கே தான் காட்ட முடியும். வேண்டும். இது வள்ளுவர்.

இந்த 21ம் நூற்றாண்டு மனித உரிமைகளை முன்னிறுத்தும் நூற்றாண்டு என்றாலும் நமக்குள் இருக்கும் மிருகம் விழித்துக்கொள்ள ஒரு சிறு பொறி போதுமானதாக இருக்கிறது.

70 வருடம் வாழ்ந்த மனிதனிடம் அவருடைய வாழ்க்கையை பத்தி கேட்டால் அவர் ஒரு மணி நேரத்தில் சொல்லி விடுவார் என்று ஓஷோ சொல்வாராம். வெவ்வெறு மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் உச்சகட்ட கோபம், பயம், சினம், எரிச்சல், பழி வாங்கும் உணர்ச்சி, துரோகம் என்று எதிர்மறை குணங்களை வெளிப்படுத்தம் நிமிடங்கள் இங்கே ஆறு கதைகளில் விரிகின்றன.

இந்த கதைகளில் அங்கதத்திற்கும் குறைவில்லை. Ensemble Cast என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். Argentina நாட்டு திரைப்படமான இதில் Ricardo Darin போன்ற புகழ் பெற்ற நடிகர்களும் இருக்கிறார்கள். அனைத்து கதையிலும் அனைத்து நடிகர்களும் சிறப்பான ஒரு வெளிப்பாட்டை நிகழ்த்துகின்றனர்.  எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு வெளியிடுவது போல இங்கே இயக்குனர் ஆறு குறும்படங்கள் எழுதி அதை இயக்கி ஒரே படமாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். இது போல முயற்சிகள் உலகெங்கும் நடக்கின்றன. பல இயக்குனர்கள் இணைந்து உருவாக்குவார்கள். தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் முயன்றார். ஆனால் Wild Tales ஒரே இயக்குனரின் கைவண்ணம்.

படத்தின் titles ரகளையான பின்னணி இசையுடன் அசரடிக்கும் visuals உடன் வரும் போது 'இது ஏதோ புதுசான படமா இருக்க போது போல' என்று மனம் எதிர்பார்க்க தொடங்கி விடும்.

ஒவ்வொரு கதைக்கும் வித விதமான நிறம், பின்புலம், இசை என்று விருந்து படைக்கிறார்கள். ஒரு கதை ஆகாயத்தில் என்றால், அடுத்த கதை இரவில், மழை நாளில். அடுத்த கதை பாலைவனம் போன்ற வறண்ட நிலத்தில். குடும்பம் சார்ந்து இரண்டு கதைகள். இறுதியாக திருமண விழா விருந்து பின்புலத்தில் ஒன்று.

மனிதர்கள் உணர்ச்சிகளை, கோபத்தை, சினத்தை, அறச்சீற்றத்தை அடக்கி கொள்ள நிர்ப்பந்திக்க படுகிறார்கள். சமூக அமைப்பு கோபப்படுபவனை, உண்மை பேசுபவனை, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்க்கிறது. காரியம் ஆக வேண்டும் என்றால் சினம் தவிர் என்கிறது. அதில் சில வெடிப்புகள், உடைப்புகள் ஏற்படும் போது அவை Wild Tales ஆகும்.

Thursday 1 December 2016

ஓரு கூர்வாளின் நிழலில் - விழலுக்கு இறைத்த குருதி


இங்கே, தமிழ் நாட்டில் 1988ம் வருடம் பிறந்த நான் விவரம் தெரிந்த நாளில் இருந்து விடுதலை புலிகளின் வீர சாகச கதைகளை கேட்டு வளர்ந்தேன். 5 வயது இருக்கும் போது பள்ளியில் சேட்டை செய்ததாக என்னை அடித்த ஒரு ஆசிரியையிடம் 'இரு வவுனியாவுல இருக்க துப்பாக்கியை எடுத்திட்டு வர சொல்லுதேன், ஒரு குண்டுல இந்த பள்ளிக்கூடம் தரை மட்டம் ஆகிடும்' என்று மிரட்டல் விட பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர், முதல்வர் வரை கூடிவிட்டனர்.

5 வயதுக்கு கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் நான் இப்படி பேசும் அளவுக்கு இங்கே விடுதலை புலிகள் பற்றி குடும்பங்களில் பேசி கொண்டிருந்தனர். இயக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்று, மதிப்பு, நம்பிக்கை கொண்டிருந்தனர். போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆன பின்னர் கூட 40, 50 வயதுகளில் உள்ளோர் இயக்கம் மீது எந்த விமர்சனத்தை ஏற்று கொள்ள தயாராக இல்லை.

25 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு 99% இயக்கம் குறித்தோ அங்கே நடந்து முடிந்த சண்டை குறித்தோ, மரணித்த மக்கள் குறித்தோ கவலையோ, சிந்தனையோ இல்லை. மேலும் ஈழம் குறித்து பேசுபவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பல முறை கேட்டு சலித்த விடயத்தை தான் பேசுவார்கள். அங்குள்ள மக்களுக்கு இதனால் புல் முனை அளவு கூட பிரயோசனம் கிடையாது.

தற்செயலாக அ. முத்துலிங்கத்தின் கதைகள் வாசிக்க ஆரம்பித்து, ஷோபா சக்தி, சயந்தன் என்று ஈழ எழுத்தாளர்களின் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் பொருட்டு முன்னாள் இயக்க போராளி, தற்போது காலம் சென்ற தமிழினி அவர்களின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' வாசித்தேன்.

அய்யா முத்துலிங்கம் இயக்கம் உருவாகும் முன்பே வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டதால் அவருடைய கதைகளில் பெரும்பாலும் இங்கே நடந்த போர் குறித்த சித்திரம் இருக்காது. ஆனால் புலம் பெயர்ந்த மக்கள் குறித்த கதைகள் அனேகம். ஒரு கதையில் வீட்டை விட்டு இயக்கத்திற்கு செல்லும் மகள் குறித்து எழுதிய நினைவு. தலைப்பு நினைவில் இல்லை.

ஷோபா சக்தியின் கொரில்லா, ம் நாவல்களும், சிறுகதைகளும் இயக்கம் மீது விமர்சனம் வைக்க தவறுவதில்லை. அதே சமயம் இலங்கையின் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணராமலும் இல்லை.

சயந்தனின் ஆறா வடு மற்றும் பெயரற்றது மட்டுமே வாசித்துள்ளேன். ஆதிரை வாங்கியாகி விட்டது வாசிக்க தொடங்க வேண்டும்.

மேற்சொன்ன மூவரும் புனைவு எழுத்தாளர்கள். அவர்கள் எழுத்தில் நான் காணும் ஒற்றுமை அங்கதமும் அபத்தமும். ஷோபா சக்தியின் சமீபத்திய சிறுகதை 'மிக உள்ளக விசாரணை' சிறந்த உதாரணம்.

நான் பெரும்பாலும் சுய சரிதை வாசிப்பதை தவிர்த்து விடுவேன். காந்தியின் சுய சரிதை வாங்கி பத்து வருடம் ஆகிறது. ஒவ்வொரு முறையும் 10 அத்தியாயம் தாண்டாது. பிறகு கிடப்பில். The Diary of Anne Frank அதனாலேயே வாங்கவே இல்லை. The Story of Helen Keller மட்டும் வாங்கி வாசித்தும் விட்டேன்.

ஏதோ ஒரு உந்துதலில் 'ஒரு கூர்வாளின் நிழலில்' ஒரு சுய சரிதை என்று தெரிந்தும் வாசிக்க எடுத்து விட்டேன். வாசித்தும் விட்டேன். நான் புனைவில் வாசித்தது எந்த அளவு உண்மை என்று அறிய விரும்பினேனா? இயக்க தலைவருக்கு என்ன ஆனது என்று அறியும் ஆவலா? இலங்கை ராணுவம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கவா? இது எல்லாம் சேர்ந்தா இல்லை ஒரு வீர சாகச கதையை எதிர் பார்த்தேனா என்று தெரியவில்லை.

ஆனால் ஈழம் குறித்த எழுத்துக்களை வாசிக்க தொடங்கிய பின் இயக்கம் மீது உள்ள விமர்சனங்களின் நியாமும் புரிகிறது. இதை சொன்னதற்கு என் மீது நீங்கள் கல்லெறியும் முன் இயக்கம் குறித்து அன்ரன் பால சிங்கம் என்ன சொன்னார் என்று புத்தகத்தில் ஒரு இடத்தில் தமிழினி சொல்கிறார், அதை வாசித்து விட்டு வாருங்கள்.

தமிழினி இந்திய படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பிறகு இயக்கத்தில் இணைகிறார் 2009ல் போர் முடியும் வரை இயக்கத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். ஆனால் நேரடியாக யுத்தத்தில் கலந்து கொண்ட அனுபவம் மிக குறைவே. அரசியல் பிரிவில் அதிகமும் பணியாற்றியிருக்கிறார்.

சமாதான பேச்சு வார்த்தைக்கு முன்பாக புலிகள் மிக வலுவான நிலையில் இருந்தது தெரிகிறது. ஆனாலும் இழப்புகள் ஏராளம் தான். 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு உலக நாடுகள் போராளிகள், தீவிரவாதிகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை கண்டு கொள்ள மறுத்ததால் சமாதான பேச்சு வார்த்தை 2006ல் முறிந்த போது புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.

தமிழினி இதற்கு இயக்க தலைவர் புரிந்த எதிர்வினை பற்றி புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதை வாசிக்கும் நமக்கு அதில் இருந்தே இயக்கம் தோல்வியை நோக்கி நகர்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அரசியல் பேசி சாதிக்க வேண்டியதை துப்பாக்கியால் சாதிக்க முயன்றதன் பின்னால் மாண்ட மக்கள் எத்தனை? இதை இயக்க தலைவருக்கு எடுத்துரைக்க ஆட்கள் யாரும் இல்லை. அன்ரன் பாலசிங்கம் தவிர்த்து வேறு எவரும் தலைவர் சொல்லுக்கு மறுப்பேதும் பேசாமல் அவரை சர்வாதிகாரி போல ஆக்கி விட்டனர் என்பது தெரிகிறது.

2006க்கு பின்னர் இருந்த இயக்கம் என்பது ஒரு இயக்கமாக இல்லாமல் ஒரு கட்டு பெட்டி தனமான ராணுவ அமைப்பாக மாறிவிட்டதென்பது புத்தகத்தை வாசிக்கும் போது உணர முடிகிறது. முன்னைய வெற்றிகள் தந்த மிதப்பு நடைமுறையை புரிந்து கொள்ள விடாமல் அவர்களை தடுத்து விட்டது.

கருணா போன்ற போராளிகள் விலகி சென்றது இயக்கத்தை வலுவிழக்க செய்தது. மேலும் ராணுவம் புலிகளின் போர் முறை, ஆயுதம் பொருத்திய இடங்கள், அவர்களின் நிலைகள் என அனைத்தையும் நவீன கருவிகள் மூலமாக கண்டு கொண்டதாக தமிழினி சொல்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை ராணுவ தரப்பில் யாராவது எழுதினால் தான் தெரியும்.

ராணுவத்திடம் சரண் அடைந்து அவர்கள் விடுவிக்கும் வரை சிறை வாழ்க்கையில் தன்னுடைய நம்பிக்கை சிதைந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வரும் தமிழினி, ராணுவம் மற்ற போராளிகளை நடத்திய விதம் குறித்து எதுவுமே சொல்ல வில்லை.

இலங்கை மீது எந்த புகாரையும் வைக்க வில்லை. ராணுவம் குறித்து மிக குறைவாகவே கூறுகிறார். தன்னுடன் நல்ல விதத்தில் பழகிய சிங்கள அதிகாரிகள் குறித்து நினைவு கூறுகிறார். ஆனால் குற்றம் இழைத்த அதிகாரிகள் குறித்து எதையும் சொல்ல வில்லை.

போர் இறுதி கட்டத்தை நெருங்கிய பின் புலிகள் செய்ததாக தமிழினி சொல்லும் விடயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இயக்கத்தின் தவறுகளை பற்றிய பதிவுகளில்   தயக்கம் இல்லாத போது ராணுவம் குறித்த பதிவுகள் censor செய்ய பட்டது போல் தெரிகிறது.

இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை வந்தே சரண் அடைகிறார். ஆனால் முள்ளிவாய்க்கால் குறித்து உலகமே பேசிக்கொண்டிருக்கும் போது அதை பற்றி மிக குறைவாக கூறி கடந்து செல்கிறார்.

ஜனநாயக தன்மை இல்லாத ஒரு அமைப்பு நாளடைவில் எப்படி நொறுங்கும் என்பது புத்தகத்தை வாசிக்கும் போது தெரிகிறது. தமிழினம் அனுபவித்த இந்த பெருந்துயருக்கு இயக்கத்தில் ஜனநாயக தன்மை இல்லாதது முக்கிய காரணம்.

இயக்கத்தில் நிலவிய சாதி வேறுபாடுகள் அல்லது ஈழ சமூகத்தில் நிலவிய வேறுபாடுகள் குறித்து ஒன்றும் அறிய முடியவில்லை. ஷோபா சக்தி, சயந்தன் எழுத்துக்களில் இயக்கம் மற்றும் சமூகத்தில் நிலவிய சாதிய படிநிலைகள் சரிந்து விடாமல் இருக்க மக்கள் செய்யும் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புத்தகம் மீதும், தமிழினி மீதும் பெரும்பாலும் எதிர் மறையான விமர்சனங்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சுய சரிதை நிச்சியம் முக்கியமான ஆக்கம்.  புலிகள் தரப்பு குறித்தும், அமைப்பு உருவாகிய பின் ஈழ மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விமர்சனத்தோடு பலரும் எழுதும் போது நாம் இன்னும் இந்த போராட்டத்தை பற்றி புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். போலவே இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய மனசாட்சி உள்ள ஆட்களை வைத்து அவர்கள் தரப்பு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.

ஆமாம் சரத் பொன்சேகா என்ன ஆனார்?! இறுதி யுத்தத்தில் நடந்ததை அவர் வெளிய சொல்லி விடுவார் என்று தான் அவரை சிறையில் அடைத்தவர் ராஜ பக்ச?

ராஜீவ் கொலை குறித்தும், அதற்காக சிறை வைக்க பட்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி குறித்தும் தமிழினி ஒன்றும் சொல்ல வில்லை. மேலும் ராஜீவ் கொலைக்கு புலிகள் இயக்கம் பொறுப்பேற்று கொண்டதா என்ன?

தமிழினியின் சுய சரிதையில் இதையெல்லாம் தேடக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் இயக்கத்தில் பெண்களுக்கு கொடுக்க பட்ட பொறுப்புகள், அவர்களை தலைவர் நடத்திய விதம் பற்றி நிறைய தகவல்களை தருகிறார். ஆனாலும் இயக்கத்தில் இருந்த முக்கியத்துவம் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு இல்லாமல் போனதையும், போர் முடிந்து எஞ்சிய பெண்போராளிகள் அனுபவித்த துன்பத்தையும், சமூகம் அவர்களை நடத்திய விதத்தையும் சொல்கிறார். பெண்கள் சமாதான பேச்சு வார்த்தையில் அதிகமாக பங்கெடுக்கும் போது சுமூகமான தீர்வுகள் சீக்கிரமே எட்டப்படும் என்றும் நினைக்கிறார்.

இந்த சுய சரிதையை அனைத்து தமிழ் பெண்களும் வாசிக்க வேண்டும். தமிழ் இளைஞங்கர்களும் தான். புத்தியை தீட்டுவதை விட்டு விட்டு எல்லா வெட்டி வேலையும் செய்வதில் நிபுணர்கள் ஆகி கொண்டிருக்கும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.
அரசியல் என்றால் வாக்களிப்பது மட்டுமே என்றும் அதையும் செய்ய தேவை இல்லை என்றும் நினைக்க ஆரம்பித்து விட்ட ஒரு தலைமுறை.

தமிழக மக்கள், இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு அற்றவர்கள் என்பது இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு வசதியாக போய் விட்டது. ஈழத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்து விட்டனர். இங்குள்ள அரசியல் தலைவர்கள் ஈழ மக்களுக்காக செய்தது என்ன என்பதும் விரிவாக எழுதப்பட வேண்டும்.

இரண்டாம் உலக போருக்கு பின்னர் யூதர்கள் தங்களை ஒரு சக்தி மிகுந்த சமூகமாக உருவாக்கி கொண்டனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை இலக்கியத்தில் பதிவு செய்தனர், திரைப்படங்கள் ஆக்கினர். இன்று வருடத்திற்கு ஒரு படமாவது போரில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து வருகிறது. இந்த இலக்கிய கலாச்சார பின்புலம் அவர்களை சர்வதேச அரங்கில் வலிமையுடைய மக்களாக நிறுவி இருக்கிறது.

தமிழினத்திற்கு இலக்கிய கலாச்சார பின்புலத்திற்கு ஒரு குறைவும் இல்லையென்றாலும் ஈழம் குறித்த எழுத்துக்கள் தமிழ்  மக்களிடமும் (தன் மொழியில் தற்காலத்தில் எழுதப்படும் எது குறித்தும் எதுவும் அறியாத அப்பாவி இனம் தமிழினம்) மொழிபெயர்த்து உலக வாசகர்களிடமும் எடுத்து செல்ல பட வேண்டும். விமர்சிக்க பட வேண்டும். விமர்சனம் செய்து மேலும் முன்னகர வேண்டும். தமிழ் மொழிக்கான இருக்கைகளை சர்வேதச பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்த வேண்டும். ஒரு அறிவு சார்ந்த, பொருளியல் சக்தியாக தமிழ் மக்கள் எழுந்து நிற்கும் போது நமக்குறியதை யாரும் மறுக்க முடியாது.

பின் குறிப்பு:

அங்கங்க ரெம்ப உணர்ச்சி வச படுற மாதிரி தெரிஞ்சா அது தான் தமிழ் பேசும் மக்களை வாழ வைக்குது இல்லாட்டி லத்தீன், கிரேக்க கலாச்சாரத்துல தமிழும் சேர்ந்திருக்கும்.