Friday 31 March 2023

நான், எனது மற்றும் என்னுடைய காலம். I, Me and Myself Times.

Narcissistic personality disorder is named for Narcissus, from Greek mythology, who fell in love with his own reflection. Freud used the term to describe persons who were self-absorbed, and psychoanalysts have focused on the narcissist's need to bolster his or her self-esteem through grandiose fantasy, exaggerated ambition, exhibitionism, and feelings of entitlement.
                     
                           ― Donald W. Black


வரலாற்றில் மனிதர்கள் எப்போதும் தங்களை பற்றி புறவயமாக இத்தனை அக்கறையோடு இது வரை இருந்ததில்லை. அது சுத்தம் பற்றிய அக்கறையோ, உடை, அணிகலன்கள் பற்றிய அக்கறையோ மட்டும் அல்ல. தன்னுடைய உருவம், நடை, உடை, பாவனை மற்ற மனிதர்களில் என்ன மாதிரியான உணர்வை உருவாக்க வேண்டும் என்பது வரை அந்த கவனம் நீள்கிறது. 

இணையம் வந்த பின்பு தன்னைத்தானே புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து நாம் தினம் சந்திக்க வாய்ப்பில்லாத உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முன் பின் தெரியாத ஆட்கள் வரை நம் இருப்பை தெரியவைத்துக்கொண்டிருக்கிறோம். முகப்புத்தகத்தில் "people you may know" sectionல் வரும் முகங்கள் நம்மில் எழுப்பும் முதல் எதிர்வினை என்ன? 

இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் சொந்த புகைப்பட கருவி, படச்சுருள் வாங்க பணம் இல்லாத பட்சத்தில் நீங்கள் ஒரு புகைப்பட நிலையத்திற்கு சென்று தான் எடுக்க வேண்டும். 

புகைப்படம் என்பது விழா நிகழ்ச்சிகள் அன்று எடுக்கப்பட்டு,  ஒரு தலைமுறை காலம் பாதுகாத்து, அவ்வப்போது எடுத்துப்பார்த்து, பழைய நினைவுகளில் மூழ்க வழிதரும் நினைவுச்சுரங்கமாக இருந்தது. இப்போது நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் 5 பேர் 5 கோணத்தில், 5 கருவிகளில் படம் பிடித்து எந்த ஒழுங்கும் இல்லாத புகைப்பட தொகுப்பே எஞ்சுகிறது. 

கைநிறைய இருக்கும் திறன் பேசி புகைப்படத்தை சல்லிசாக மாற்றி இருக்கிறது. நினைவுத்திறன் கொள்ளுமட்டும் புகைப்படம், காணொளி எடுக்கலாம், இணையத்தில் ஏற்றலாம், புகைப்படம் எடுத்த பின் மெருகேற்றலாம் இப்படி எண்ணிலடங்கா வசதிகள். 

இத்தனை புகைப்படம் எடுக்க கூடிய வசதி பல மனிதர்களை தங்களை தாங்களே காதலிக்க வைத்துள்ளது. ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் தங்கள் புகைப்படத்தை  மெருகேற்றுகிறேன் என்று  நாளெல்லாம் அதை பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் பலருக்கும் உருவாகியுள்ளது. 

ஒரு காலத்தில் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்கள் இப்போது புகைப்படமாக பார்க்கிறார்கள், பார்த்துவிட்டு போகட்டுமே என்று தோன்றலாம். அவர்கள் புகைப்படத்தை இணையத்தில் ஏற்றாத வரை அது அவரை தவிர யார் கண்ணிலும் படப்போவதில்லை தான். ஆனால் அவர்கள் நட்பு வட்டத்தில்  வந்து விட்ட காரணத்திற்காக நாம் எத்தனை முறை பார்க்க முடியும்?

அவர் Whatsappல் status வைப்பது முதல் facebook DP, Instagram DP வரை மாற்றி இணையத்தில் உலவும்  மனிதர்களின் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறார். அவருடைய முகம் சலிப்பாகும் போது அவரை பின்தொடர்வதை நிறுத்தி விடுவார்கள் அல்லது mute போட்டு விடுவார்கள். அவர் ஒரு கேலி சித்திரமாக மாறியது தெரியாமல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டே இருப்பார். 

புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்கிற மூடநம்பிக்கை எல்லாம் மறைந்து திருப்திகரமான புகைப்படம் வரும் வரை எடுத்து, அத்தகைய புகைப்படம் அமையாமல் அதனால் மனம் நொந்து போகும் மனநிலைக்கு ஆளாகும் முரணான காலத்தில் வாழ்கிறோம். 

தன்னை அறிதல் என்பது இவ்வுலகத்தில் நம் இருப்பிற்கான அர்த்தத்தை அறிவது தான். நாம் இங்கே ஆற்ற வேண்டிய செயல் என்ன என்று உணர்வது தான். அகவயமாக தன்னை அறிய இன்று பெரும்தடையாக இருப்பது புறவயமாக நாம் மற்ற மனிதர்களின் கண்ணில் எப்படி தெரிகிறோம் என்ற சிந்தனையை கைவிடமுடியாமல் இருப்பது தான். 

புகைப்படத்திற்கான எதிர்வினை, விருப்பக்குறிகள், அதனின் எண்ணிக்கை எல்லாம் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்கான சிரத்தையை அதிகரித்துள்ளது. சரியாக உறைந்த ஒரு நொடிப் பொழுதை படம்பிடிக்க கடிகாரம் பார்க்காமல் நேரத்தை செலவு செய்கிறார்கள். 

15 வருடங்களுக்கு முன் மதுரையை குலுங்க குலுங்க ஆட்சி செய்த அரசியல் பிரமுகரின் முகம் தாங்கிய பதாகையை நீங்கள் மதுரை எங்கும் காணலாம். அவரின் பிறந்த நாளின் போது உங்கள் முகம் உங்களுக்கு மறந்து போகும் அளவிற்கு அவருடைய முகத்தை பலவேறு பதாகைகளில் காண நேரிடும். 

அவரின் முகத்தை அச்சடித்து பணக்காரர்கள் ஆன அச்சக உரிமையாளர்கள் உண்டு. மனிதர்களிடம் உள்ள சுயமோகம் இதை எல்லாம் உள்ளூர ரசிக்கிறது. "பார் என் முகத்தை! என்னை தெரியாதவர்கள் இந்த ஊரில் இல்லை. நான் ஆண்டவனுக்கு நிகரானவன்." என்று தம்பட்டம் அடிக்கிறது. 

இந்த பதாகையை வைப்பவர்கள் தங்களுடைய புகைப்படத்தை ஒரு ஓரமாக போட்டுக்கொள்வார்கள். அல்லது பெயரையாவது போட்டுக்கொள்வார்கள். இவர்களுக்கு புகைப்படத்தில் இருக்கும் அந்த பெரிய உருவம் ஒரு பொருட்டே அல்ல. இவர்களின் உளவியல் அந்த புகைப்படத்தில் தன்னையே காணும். 

பெரிய உருவமாக பதாகையில் இடம் பிடித்து கொண்டிருப்பவர்கள் காலம் சென்ற பிறகு வைக்கப்படும் பதாகையில் வலது அல்லது இடது மூலையில் தபால் தலை அளவு புகைப்படமாக சுருங்கி விடுவார்கள். அவர்களுடைய அரசியல் வாரிசோ, ரத்தத்தின் ரத்தமோ அந்த இடத்தை எடுத்துக்கொண்டு விடும். இது ஒரு சுழற்சி. 

தன்னுடைய காலத்திற்கு பின் வரும் மனிதர்களின் மனதில் ஒரு தொன்மமாக எஞ்ச வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனில் இருக்கும் அந்தரங்க ஆசைகளில் ஒன்று. அந்த ஆசை செயலால் ஈடு செய்யப்படவில்லை என்றால் அந்த மனிதர் பகடிப் பொருளாகவே மதிப்பிடப்படுவார். 

கொஞ்சம் அதிகாரம், பண பலம் உள்ள, சுயமோகம் (narcissism) கொண்ட மனிதர்கள் தங்களை எப்போதும் வரலாறு சமைப்பவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். அது பெரும்பாலும் அவர்களை ஒரு megalomaniac ஆக மாற்றி விடுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் Donald Trump ஒரு சுயமோகம் கொண்ட Megalomaniac. இப்போது இந்த வார்த்தைக்கு உதாரணமாக வாழும் ஒரு உள் நாட்டு அரசியல் வாதி ஒருவர் உங்கள் நினைவுக்கு வந்திருப்பார். 

The megalomaniac differs from the narcissist by the fact that he wishes to be powerful rather than charming, and seeks to be feared rather than loved. To this type belong many lunatics and most of the great men of history.

                             - Bertrand Russell

இத்தகைய தலைவர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் தங்களையே முன் வைக்கிறார்கள். கொள்கை, திட்டம், செயல், மக்கள் நலன் எல்லாம் இரண்டாவது தான். இவர்கள் முகங்கள் ரட்சிக்க வந்த மாமனிதன் என்பதாக ஊடகங்கள் வழி நமக்கு காட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

இவர்கள் பல "வேடிக்கை மனிதர்களை" தங்கள் பால் ஈர்த்து விடுகிறார்கள். மக்கள் இத்தகைய தனி மனித வழிபாட்டு மனநிலையால் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். 
இந்த வேடிக்கைகைக்கு விழாத கேளிக்கை மனிதர்கள் புகைப்படம் முதல் 15 நொடி காணொளி வரை தங்களை பல விதமாக வெளிப்படுத்தி இணையத்தில் ஏற்றுகிறார்கள். அவர்களை போன்ற பிற கேளிக்கை மனிதர்கள் அவர்களை ரசிக்கிறார்கள். 

இப்படி தங்களை தாங்களே பிரதி எடுத்து பார்த்துக்கொள்ளும் மனிதர்கள், சீமான் குரலுக்கு ஆவேசமாக Tik Tok, Insta Reelsல் போல நடிக்கும் நபர்கள் இயல்பில் அதிகமான கூச்ச சுபாவமும், யாரையும் கண் பார்த்து பேச முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த புதிய காட்சி & கண்ணொளி மட்டும் ஊடகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஒரு தற்காலிக விடுதலையை அளிக்கிறது. அவர்களும் சன்னதம் வந்து ஆடுகிறார்கள்,  ஆனால் சன்னதம் இறங்கிய பின் அன்றாட கடமைகளை சரியாக கடைபிடிக்க முடியாத மனிதர்களாகவும் இருக்கிறார்கள். 

இப்படி தன்னோடு புறவயமாக நான், எனது மற்றும் என்னுடைய எனும் தன்முனைப்பில் நேரத்தை வீணடிப்பதால் ஆளுமை உருவாக்கம் நடக்காமல் போய்விடுகிறது. இதில் பிரபலமாகும் சிலர் இதன் வழி வருமானம் தேடிக்கொள்கிறார்கள். மற்றவர்கள் 'If you are not paying for it, you're not the customer; you're the product being sold.” என்ற உண்மையை உணர முடியாதவர்கள் அல்லது மறுக்கிறார்கள். 

புறவயமாக தங்களுடைய அகங்காரம் (ego) திருப்தி அடைய உழைத்து தன்னுடைய மனதில் உள்ள லட்சிய உருவத்தை ஒருவர் அடைந்து விடக்கூடும்.  இந்த முயற்சியில் உள்நோக்கி பார்க்கும் பழக்கம் அற்றுப் போவதால் உள்ளம் வளர்வது நின்று விடுகிறது. அகம்-புறம் சமநிலை பேணாத இத்தகைய மனிதர்கள் அதிகரிப்பது சமூக மற்றும் பொது வாழ்க்கையை சிக்கல் மிகுந்ததாக மாற்றி க்கொண்டிருக்கிறது. 

***

Saturday 25 March 2023

15 நொடி முடிவிலி. 15 Second Infinity.

“In the future, everyone will be world-famous for 15 minutes.”
- Andy Warhol (He said that in the Year 1968)

மனிதன் பணம், அதிகாரம் தவிர்த்து ஒன்றை அடைய பெரும்பாடு படுகிறான் என்றால் அது இறவாப்புகழுக்காக தான். அது மனிதராக பிறப்பவரில் வெகு சிலருக்கே அருளப்படுகிறது. புகழை அடைந்து அதை தக்க வைக்க முடியாமல் போவது போன்ற  துயரம் வேறில்லை. 

இறவாப்புகழ் என்பது தன் காலம் தாண்டியும் மக்கள் மனதில் நிலைத்திருப்பது. மக்களின் அன்றாட பேச்சில் தவிர்க்க முடியாத படிமங்களை உருவாக்கியிருப்பது. கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள், பாரதி போன்ற பெரும்கவிஞர்களுக்கு தான் அது சாத்தியம் ஆகியிருக்கிறது.  

பாரதி இறந்த அன்று அவருடைய ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 8 பேர். பாரதி காலத்தில் பிரபலமாக வாழ்ந்த பலர் இன்று வெறும் பெயர் மட்டுமே. வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு. 
ஆனால் இன்று பாரதி தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத அடையாளம். அவர் எழுதிய வரிகளில் இருந்து தான் ஒரு இனமாக நமது கனவுகள், லட்சியங்கள் எழுகின்றன. 

பாரதி எந்த அங்கீகாரமும் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து விட்டு சென்றுவிட்டார். பிரபலம் ஆவதற்கு மெனக்கிடவில்லை. கவிதை அவரது தொழில் என்று சொல்லிவிட்டு அதன் படியே வாழ்ந்து மறைந்தார். நாம் பின்னோக்கி பார்த்து அவரின் பங்களிப்பின் இன்றியமையாத தன்மையை புரிந்து கொள்கிறோம். அவரை கொண்டாடுகிறோம். 

21ம் நூற்றாண்டில் மனிதராக பிறந்த அனைவரும் இறவாப்புகழை அடையாவிட்டாலும் 15 நொடி பிரபலமாக வலம் வருவதற்கான வாய்ப்பை இணையம் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. 15 நிமிடங்கள் அல்ல 15 நொடி. 

பிரபலம் என்பது ஈசலின் ஆயுளை விட குறைவான ஆயுளை கொண்டது என்பதை அந்த 15 நொடி பிரபலங்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதி தன்னுடைய கடிதம் வெளியிடப்பட்டால் அதைக்கண்டு புளங்காகிதம் அடைந்தவர்கள் தான் நாம். திருமண பத்திரிக்கையில் பெயர் போடவில்லை என்று சண்டையிட்டவர்கள் தனி ரகம். 

பின்னர் அது தொலைக்காட்சியில் தோன்றுவதாக பரிணமித்தித் தது. இன்று நிறுவன ஊடகங்கள் யாருக்கும் தேவை இல்லை. சமூக ஊடகங்கள் வழி தன்னை பிரபலப்படுத்தி கொள்ளும் வழி ஒன்று திறந்திருக்கிறது. கையில் திறன் பேசியும், பிரபலம் ஆகும் எண்ணமும் உள்ள அனைவரும் அங்கே வந்து கடை திறக்கின்றனர். 

இணைய, சமூக ஊடகங்கள் வழி பிரபலம் ஆகும் சிலரை தொலைக்காட்சி, சினிமாக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மாநிலம் அறிந்த முகமாகும் வாய்ப்பு கிடைக்கிறது. 

இந்த இணைய பிரபலங்கள் அப்படி என்ன செய்கிறார்கள்? 2வது முறை அல்ல முதல் முறையே முழுதாக பார்க்க தகுதியில்லாத தமிழ் சினிமாவிற்கு விமர்சனம் செய்கிறார்கள், ஏற்கனவே உள்ள சினிமா பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள், wiki pedia வில் உள்ளதை படித்து விட்டு Oxford சென்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த உண்மை என்பது போல பேசுகிறார்கள்.

ஊரில் எங்கே சாப்பாடு கடை திறந்தாலும் போய் தின்று விட்டு ஆகா என்கிறார்கள். Below the belt joke சொல்லி சிரிக்க வைக்கிறார்கள். சுருக்கமாக தன்னுடைய மூடத்தனத்தை கேளிக்கையாக சமூக ஊடகங்களில் பரப்பி தினமும் என்னை கவனி என்கிறார்கள். 

இணையம் வந்த பிறகு நம்முடைய நேரம் நிறைய மிச்சம் ஆகியிருக்கிறது. அப்படி மிச்சம் ஆன நேரம் அனைத்தையும் இணையமே எடுத்துக்கொள்கிறது. விளைவாக நாளின் இறுதியில் எதையுமே உருப்படியாக செய்யாத உணர்வுக்கு ஆளாகிறோம். 

சமூக ஊடகங்களால் எப்படி நம் சமூக வாழ்க்கை மேம்பட்டு விடவில்லையோ அதே போல அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதால் குறைந்தும் போகப்போவதில்லை. 

நம் திறன் பேசியில் இருக்கும் எண்ணற்ற செயலிகள் நம்முடைய கவனத்தை கோரிக்கொண்டே இருக்கின்றன. அதை நாம் ஒவ்வொரு முறை கையில் எடுக்கும் போதும் என்ன காரணத்துக்காக எடுத்தோம் என்பது மறந்து போகும் அளவுக்கு அது நம் கவனத்தை சிதறடித்து கொண்டிருக்கிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் திறன் பேசி பயன்படுத்தும் அனைவரும் இந்த 15 நொடி முடிவிலியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என்று இணையத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்.  இதிலிருந்து வெளியேறும் வழியும் யாருக்கும் புலப்படவில்லை. 

இந்த முடிவிலியில் சிக்கிக்கொண்டதால் நாம் இழப்பது என்ன? 

முதலாவதாக நம்மால் கேளிக்கையை கூட கவனச்சிதறல் இல்லாமல் அனுபவிக்க முடிவதில்லை. திரைப்படத்திற்கு போனால் கூட அதை அனுபவித்து பார்க்காமல், படம் பார்க்க போனதை இணையத்தில் அறிவித்து கொண்டே இருக்கிறோம். அந்த அறிவிப்புக்கு வந்த எதிர்வினை என்ன என்று 5 நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொள்கிறோம்.

செய்தித்தாள் படிப்பதை விட்டுவிட்டோம். உருப்படியான விவாதம் எதுவும் நிகழாமல் அனைத்தும் 15 நொடி காணொளியாக, meme ஆக சுருங்கிக்கொண்டிருக்கிறது. வாரப்பத்திரிக்கைகள் எந்நேரமும் நிறுத்தப்படலாம் என்கிற அளவிலேயே வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

சினிமா பாடலை கூட முழுதாக கேட்பது இல்லை. அடுத்து அடுத்து என்று தாவி செல்கிறோம். Fear of Missing Out Factor நம்மை இணையத்தில் கட்டிப் போடுகிறது. நம்மை விட்டு விட்டு உலகத்தில் முக்கியமான ஏதோ ஒன்று நடந்து விடும் என்பது போல் நாமும் "stay connected" ஆக இருக்கிறோம்.  

செவ்வியல் இலக்கியம் அல்ல செவ்வியல் சினிமாவை பார்ப்பதற்கே இன்று ஆட்கள் இல்லை. இந்த கவனச்சிதறலை வென்று ஒரு இயக்குனரின் அனைத்து படங்களையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட Genre ல் உள்ள classic படங்களையோ பார்க்கும் திறன் உள்ளவர்களை காண்பது அரிதாகி வருகிறது. 15 நொடிகளாக நாளுக்கு 5 மணி நேரத்தை இணையத்தில் செலவு செய்பவர்களால் ஒரு 3 மணி நேர சினிமாவை பார்க்க முடியவில்லை. 

இணையத்தில் மாய்ந்து மாய்ந்து வாசிப்பவர்கள் fragmented reading, cursory reading வழி ஒரு fragmented personality ஆகி விடுகிறார்கள். அவர்கள் வாசித்த தகவல்களை கொண்டு ஒரு தர்க்கத்தை உருவாக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். நிறைய வாசித்து எதுவும் எஞ்சாமல் ஆகி விடுகிறது. 

இதற்கான மாற்று 24 மணி நேர இணையம் கிடைப்பதற்கு முன்னால் நம்முடைய நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்தோம் என்று யோசிப்பது தான். பதின் பருவத்தினராக நம்முடைய "hobby" என்னவாக இருந்தது என்று நினைவுறுத்திக்கொள்வது தான். அதில் மீண்டும் ஈடுபட முடியுமா என்று பார்க்கலாம்.

அதை கடந்து வந்து விட்டவர்கள் அவரவர் தேர்வுக்கு ஏற்ப ஒரு துறையை கண்டடைந்து, அது குறித்து கற்று, அறிந்து கொள்வதில் நேரத்தை செலவிடலாம். மனதை ஓரிடத்தில் குவிய வைக்கும் செயல்களில் ஈடுபட முடியாதவர்கள் "பல வேடிக்கை மனிதர்களாக" மாறி குடி, போலி ஆன்மீகவாதிகள், அதீத அரசியல் நிலைப்பாடு என்று எங்காவது போய் அடைக்கலம் ஆகிவிடுகிறார்கள். 

***

Friday 17 March 2023

RX100 முதல் R15 வரை

இரு சக்கர வாகனங்கள் மீது மோகம் இல்லாத இளைஞன் உலகில் உண்டா? இரு சக்கர வாகனத்தில் நெடும்பயணம் போக வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞனும் தனது வாழ்வில் ஒரு முறையாவது நினைத்திருப்பான். அப்படி தன் நண்பனுடன் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தான் Ernesto Guevara "Che" Guevara வாக பரிணமிக்கிறார். அவருடைய லத்தீன் அமெரிக்க பயணம் The Motorcycle Diaries எனும் நூலாக வெளிவந்து இன்றும் அதிகம் வாசிக்கப்படும், விற்கப்படும் புத்தகங்களில் ஒன்றாக உள்ளது. 

Motorcycle பயணம் பற்றிய மற்றுமொரு மிகப்பிரபலமான புத்தகம் Zen and The Art of Motorcycle Maintenance. உலகெங்கும் நெடிய Motorcycle பயணம்  செய்யும் கலாச்சாரம் இந்த புத்தகத்தால் உருவானது தான். 

இந்த புத்தகத்தை எழுதிய Robert M. Pirsig சொல்கிறார் "In a car you’re always in a compartment, and because you’re used to it you don’t realize that through that car window everything you see is just more TV. You’re a passive observer and it is all moving by you boringly in a frame.

On a cycle the frame is gone. You’re completely in contact with it all. You’re in the scene, not just watching it anymore, and the sense of presence is overwhelming.”

Motorcycle பயணம் ஒரு ஆன்மீகமான அனுபவத்தை தரவல்லது என்பது அவருடைய துணிபு. ஆனால் இந்த பின்புல வாசிப்பு எதுவும் இல்லாமல் காட்சி ஊடகம் வழியாக அறிந்தவற்றை கொண்டு அதை போலி செய்யும் வகையில் bike ஓட்டுபவர்களை என்ன செய்வது? இவர்களில் சிலர் லடாக் மாதிரியான இடங்களுக்கு கூட பயணம் செய்து வருகின்றனர். பயணத்தின் போதே புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் தங்களை விளம்பரம் செய்து கொண்டு செல்கின்றனர். 

கடந்த 10 ஆண்டுகளில் சந்தையில் வாகனம் விற்கும் வேகமும், வாகனத்தின் வேகமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2010ம் ஆண்டு 100cc திறன் கொண்ட  Splendor வாங்க வேண்டும் என்றால் நீங்கள் 2 மாதம் காத்திருக்க வேண்டும். ஆனால் இன்று எண்ணற்ற வாகனங்கள் சந்தையில் உள்ளன. 2010ல் 50ஆயிரம் ரூபாய்க்கு விற்ற வண்டி இன்று 1 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது. 

இன்று சராசரியாக 150cc திறன் கொண்ட வண்டிகளையே மாணவர்கள், இளைஞர்கள் அதிகம் வாங்குகிறார்கள். 250cc, 350cc வாங்குபவர்கள் எண்ணிக்கை மிகவிரைவாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அது போலவே விபத்துகளும். 

தூத்துக்குடி போன்ற ஒரு மாநகரத்தில் தோண்டப்படாத ஒரு அங்குல இடம் கூட மிச்சம் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக இந்த ஊரில் எங்கேனும் தோண்டிக்கொண்டு தான் இருக்கிறார்களாம்.  பத்திரிக்கையில் மின் பராமரிப்பு பணிக்காக மின் வெட்டு குறித்த அறிவிப்பு வருவது போல சாலை எங்கே தோண்டப்பட்டு கொண்டிருக்கிறது என்கிற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்கிற அளவில் நிலைமை மோசமாக உள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளில் வாகன எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு சாலை வசதிகள் சீரமைக்க படவில்லை. சாலைகள் பெரிதாக வில்லை, புதிய  வேகத்தடைகளும், அதிகமான போக்குவரத்து siganalகளுமே உருவாகி உள்ளன. முக்கியமாக இரு சக்கர வாகனங்களுக்கு தனி lane அமைக்கப்படவில்லை. இருக்கும் ஒரே சாலையில் அனைத்து வாகனங்களும் போட்டி போட்டு, முட்டி மோதி சென்று கொண்டிருக்கின்றன. 

இத்தகைய சூழ்நிலையில் Gen Z தலைமுறையான ஈராயிர குழவிகள் (2k kids) சாலை சம்மந்தமான எந்த அறிதலும், சாலையில் பின்பற்ற வேண்டிய குறைந்த பட்ச விதிகள், நாகரீகம், கலாச்சாரம் எதுவும் தெரியாமல் மிக அதிகமான cc திறன் கொண்ட வண்டியை கொண்டு Circus கூண்டுக்குள், மரணக்கிணற்றுக்குள் ஓட்டுவது போல் நினைத்து வாகனத்தை செலுத்துகின்றனர். 

80களில் பிறந்த பலருக்கும் சொந்த இரு சக்கர வாகனம் என்பது ஒரு கனவு. அது வேலைக்கு சென்ற பின்பே 99 சதவீதம் பேருக்கு சாத்தியமானது. அன்றெல்லாம் வகுப்பிற்கு ஒரு மாணவரிடம் bike இருந்தால் அதிகம். அன்று எந்த பெற்றோரும் கடன் பெற்று வாகனம் வாங்கித்தர துணியவில்லை. மேலும் வாகனம் என்பது இடம் Aவில் இருந்து இடம் Bக்கு செல்வதற்கான ஒரு கருவி மட்டும் தான். அது அதிக mileage தர வேண்டும். எரிபொருள் சிக்கனம் அவசியம். 

இன்று நிலைமை தலைகீழ். Mileage இருக்காது என்கிற காரணத்தால் விற்காமல் கிடந்த Yamaha company வண்டிகள் இன்று அதிகம் விற்கின்றன. தீனி போட முடியாது என்று சொல்லப்பட்ட Royal Enfield வண்டிகள் புதிய வாகனங்களை 6 மாதத்திற்கு ஒரு முறை அறிமுகப்படுத்துகின்றன. 

கடன் அன்பை முறிக்கும் என்பது சுலப தவணை என்பதாக மாறியிருக்கிறது. சராசரி ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு கீழே உள்ளவர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வண்டியை தம் பிள்ளைகளுக்கு வாங்கித் தருகிறார்கள். ஒரு 18 வயது பையன் அவன் வயது நண்பர்கள் மத்தியில் பந்தா செய்வதற்காக 2 லட்ச ரூபாய் கடனாளி ஆகிறான். 

இப்படி உருவான கடனை அடைப்பதற்கு பகுதி நேர வேலைக்கு செல்கின்றனர். அதில் வரும் வருமானம் காணாமல் போகவே மேலதிக வாய்ப்புகளை தேடுகின்றனர். இதன் கடைசி பகுதியாக படிப்பில் ஆர்வத்தை இழந்து நோக்கமில்லாமல் சுற்றித் திரிகின்றனர். 

Gig economy உருவாக்கும் வேலை வாய்ப்பு கானல் நீர் போன்றது. வெயில் இறங்கிய உடன் காணாமல் போய் விடும். இதன் உபவிளைவான நுகர்வு வெறி கடனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கும். 2020ம் ஆண்டு பொங்கலுக்கு வண்டி வாங்கிய பலர் அதை தீபாவளி வரை கூட பயன்படுத்த இயலாமல் வண்டி வாங்க கடன் கொடுத்த நிறுவனத்திடமே திரும்ப கொடுத்துவிட்டனர். 

மனிதன் நுகர்வால் ஒரு போதும் மன அமைதி அடைவதில்லை. இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் 6 மாதத்தில் பழையவை என்று சொல்லப்பட்டு அதன் அடுத்த வடிவம் (version) சந்தைக்கு வருகிறது. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்து bike வாங்கிய மறுநாள் அடுத்த version அறிமுகம் செய்யப்பட்டால் பழைய வண்டியை வாங்கிவிட்டதாக 2k kid நினைக்கிறார். 

2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வண்டியை 50 ஆயிரம் முன்பணம் கொடுத்து வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த முன்பணம் முழுவதும் வட்டி கணக்கில் வைக்கப்படும். அசல் தொகை 2 லட்சத்திற்கு அவர் மாதம் 5000 தவணை கட்ட வேண்டும் என்றால் அதுவே 40 மாதங்கள் வரும். இதற்குள் கல்லூரி படித்து முடித்திருப்பார். பட்டம் வாங்கியிருப்பாரா என்பது வேறு கட்டுரைக்கான கேள்வி. 

ஒரு 18 வயது பையன் மாதம் தவணை கட்டுவதற்கு 5000 ரூபாய் சமபாதிக்க வேண்டும் என்றால் அவருக்கு கல்வியில் கவனம் குவியுமா? உணவு, உறக்கம் மறந்து கல்வி கற்று அகவயமாக தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டிய வயதில் புறவயமான சுகங்களுக்காக தன்னுடைய நேரத்தை கொடுப்பார் என்றால் கல்வி கற்பதில் அவருடைய ஈடுபாடு எந்த அளவில் இருக்கும்? 

அவர் வெற்றிகரமாக கல்வி கற்று வேலைக்கு சேர்ந்தாலும் ஒரு கலை, அறிவியல் பட்டதாரிக்கு அதிக பட்ச ஆரம்ப சம்பளம் மாதம் 15000ல் இருந்து தான் தொடங்கும். இந்த சம்பளத்தில் அவர் தவணை கட்டியது போக மீதியை குடும்பத்திற்கும், கொஞ்சம் சேமிப்பிற்கும் ஒதுக்குவார் என்றால் பிழைத்துக்கொள்வார். தான் ஏன் ஒரு i Phone வாங்கக்கூடாது? என்று நினைத்தால் அவர் காலத்துக்கும் உழைத்து EMI கட்டும் model வாழ்க்கைக்கு தன்னை ஒப்புக்கொடுகிறார். 

இது வரை வண்டியை வாங்காதவர்கள் வண்டி வாங்க முன்பணம் செலுத்த வேலைக்கு செல்கின்றனர். வண்டி வாங்க வேண்டும் என்கிற வெறியில் பணம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வகுப்பிற்கு மட்டம் போடுகின்றனர். கல்வியில் இல்லாத peer pressure பொருட்களை அடைவதில் ஏற்பட்டிருக்கிறது. 

வண்டியின் அடிப்படை தேவை இங்கே மறக்கப்பட்டு அது மிக நவீனமான, வேகமான கருவி என்பதாக மாறிவிடுகிறது. Petrol, maintenanceக்கு ஆகும் செலவு என எதையும் கணக்கிலெடுக்காமல் வண்டியை வாங்கிய அவர் ஓரிரு மாதங்களிலேயே விழி பிதுங்க ஆரம்பித்து விடுவார். 

எத்தனை வேகமாக செல்லக்கூடிய வண்டியாக இருந்தாலும் நாம் வாழும் ஊரில் அதில் அதிகபட்சம் 40ல் தான் செல்ல முடியும். 5 gear உள்ள வண்டியில் நகரத்திற்குள் நீங்கள் 4வது gearக்கு மேல் பயன்படுத்த தேவை இருக்காது. பின்னர் எதற்கு இத்தனை விலை கொடுத்து அதிகமான திறன் கொண்ட வண்டியை வாங்குகிறார்கள்? 

2K kids வண்டியை சாலையில் வண்டியை செலுத்தும் விதம் பலரின் ஆழ்மனதில் புதைந்துள்ள கெட்ட வார்த்தைகளை வெளியே கொண்டு வரக்கூடியது. 

ஒரு 2K Kid status வைக்கிறார்"ஒரு Bike இருந்தா பல பொண்ணு கிடைக்கும் ஆனா ஒரு பொண்ணு இருந்தா பல bike கிடைக்குமா?" எனக்கு தெரிந்து இந்த மாதிரி பையன்களை பெற்ற அம்மாக்களே அவன் பின்னால் வண்டியில் செல்ல துணிவதில்லை. 

பொதுமைப்படுத்தி அனைவரையும் இப்படித்தான் என்று சொல்ல முடியுமா என்றால் இல்லை தான். ஆனால் இன்று ஊடகம் செயல்படும் விதம் மாணவர்கள் அனைவரையும் சராசரி ஆக்கி அவர்களை இந்த நுகர்வு சுழலுக்குள் சிக்க வைத்து விடும். இதிலிருந்து தப்பிப்பிழைப்பவர்கள் தான் இந்த புதிய நூற்றாண்டின் முன்னோடி மனிதர்கள் ஆகப்போகிறார்கள். 

***


Saturday 11 March 2023

திறன் பேசி நமது ஈராயிர குழவிகளை அசடுகள் ஆக்கிவிட்டதா? (Has Smart Phone made our 2K kids dumb?)

முதலாமாண்டு படிக்கும்  மூன்று வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியரிடம் அவர்கள் அதிகம்  பயன்படுத்தும் செயலிகள் (apps) குறித்தும் அதன் வழி அவர்கள் அடைந்தது என்ன? என்பது குறித்தும் தமிழில் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அதிகம் வேண்டாம், ஒரு 10 வரி எழுதுங்கள் என்பதே இறுதி வேண்டுகோளாக இருந்தது. 

பல்வேறு கேள்விகள் முளைத்தன. Smart Phoneஐ  தமிழில் எப்படி சொல்வது என்று தொடங்கி, appக்கான தமிழ் வார்த்தை என்ன? WhatsApp, Instagram போன்றவற்றை தமிழில் எப்படி அழைப்பது? அல்லது எழுதுவது? Televisionஐ தொலைக்காட்சி என்று அழைப்பது போல Youtubeற்கு ஏதேனும் வார்த்தை உள்ளதா? 

அதன் பின்னர் அவர்கள் எழுதுவதை நான் மட்டும் வாசிப்பேனா? அல்லது வேறு பலருமா? என்று கேட்டனர். நான் வகுப்பிலே வாசித்து உடனே உங்கள் கைகளில் தந்து விடுவேன் என்று கூறினேன். மற்றவர்கள் கேட்கும்படி வாசிப்பீர்களா என்பது அடுத்த கேள்வி. இல்லை என்று பதில் அளித்தேன். 

வகுப்பில் மூன்றில் ஒரு பங்கு மாணவ, மாணவியர் ஒரு வரி கூட எழுதவில்லை. அவர்கள் எவரும் தங்கள் நோட்டுப்புத்தகத்தை கூட திறக்கவில்லை என்பது தான் அபத்த/அவல நகைச்சுவை.  இதில் விதிவிலக்கில்லாமல் கடைசி இரு வரிசை மாணவ, மாணவியர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்கள் நோட்டு புத்தகங்கள் எதுவும் இன்றி கல்லூரிக்கு வந்துவிட்டு செல்கின்றனர். 

எழுதியவர்கள் பலரும், இதற்கு ஏதேனும் மதிப்பெண் உண்டா, இதை எழுதுவதால் எங்களுக்கு என்ன பயன் என்றெல்லாம் வினவினர். அவர்கள் அதிகமும் Youtube, Instagram, Sharechat போன்ற செயலிகளை பயன்படுத்துவதாகவும், அதனால் சில சமயம் தகவல்களை தெரிந்து கொள்வதாகவும் மற்றபடி பொழுதுபோக்கே பிரதானம் என்று தெரிவித்தனர். 

பின்னர் இந்த சோதனையை மேலும் சில வகுப்புகளுக்கு நீட்டித்தேன். சினிமா, பொழுதுபோக்கு என்று சூரியனுக்கு கீழே உள்ள எதை பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று சொன்னேன். 

இது வரை இரண்டு மாணவர்கள் மட்டுமே சினிமாவை பற்றி எழுதினார்கள். சிலர் தோட்டம் வளர்ப்பதை பற்றி எழுதினர். சினிமா பாடல்களை தப்பும் தவறுமாக எழுதிய மாணவர்கள் சிலர். தங்களுடைய சிறு வயது அனுபவம், நாய் வளர்த்தது, பூனை மற்றும் அணில் வளர்த்தது என்று சிலர் எழுதினர். எழுதிய அனைவருமே பிழை விட்டனர். பிழையை பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். 

ஒரு மாணவர் பிழை விடுவதில் என்ன பிழை இருக்கிறது என்கிற ரீதியில் கேட்டார். அவர் எழுதிய ஒரு வரி "எங்கள் குட்டுக்குடும்பத்தில் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக்கொல்வார்கள்."

மாணவர்களின் தமிழ் மொழி அறிவு கண்டு எனக்கு பெரிய அதிர்ச்சி. இவர்களிடம் இருமொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை என்று நடக்கும் அரசியலை எப்படி புரியவைப்பது? தாய் மொழியே இந்த அழகு என்றால் மற்ற மொழிக்கற்றல், பயன்பாடு எந்த அழகில் இருக்கும்? 

பெருந்தொற்று காலத்தில் கற்றலின் தொடர்ச்சி அறுந்து போனதால் உருவான நிலைமையா இது? 2 வருடத்திற்கும் மேல் கற்றலில் ஏற்பட்ட தொடர்ச்சியின்மை, திரை வழி கற்றல், மெய் நிகர் வகுப்பறை, திறன் பேசி பெருக்கம் மாணவர்களை இவ்வாறு ஆக்கிவிட்டதா? 

ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தங்களது திறன் பேசியில் கோலம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அது Instagram, Whatsapp, Snap Chat, Youtube என்று பல செயலிகள் வழியாக அவர்களின் நேரத்தை 15 நொடிகளாக திருடிக்கொண்டிருக்கிறது. 

மாணவர்கள் துப்பாக்கி சத்தம் அதிகம் கேட்கும் வெவ்வேறு விளையாட்டுகளை நாளெல்லாம் ஆடுகின்றனர். உண்மையில் ஒரு துப்பாக்கியை கூட தொட்டு பார்த்திராத இவர்கள் பல துப்பாகிகளின் பெயர் சொல்கின்றனர். Video game விளையாடுவதையே செயற்கரிய காரியம் செய்து விட்டது போல் நம்பிக் கொண்டுள்ளனர். அதை விளையாடி மன நலம், உடல் நலம் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர்.

அப்படியென்றால் 2K Kids மிக நவீனமான பாமரர்கள் மட்டும் தானா? 

தொழில்நுட்பம் அன்றாட வாழ்கையில் வாசிக்க, எழுத வேண்டிய தேவை இல்லாமல் செய்து விட்டது. நீங்கள் யாருக்கும் கடிதம் எழுத வேண்டாம், யாரும் உங்களுக்கு எழுதிய கடிதத்தை வாசிக்கவும் வேண்டாம். Whatsappல் audio message அனுப்பினால் போதும்.

Voice command வழி எழுதும் செயலிகள் உள்ளன. Voice search வழி call செய்வது முதல் youtube video வரை தேடி எடுக்கலாம். இதை இன்று 5 வயது குழந்தை கூட செய்கிறது. இதனால் பரீட்சைக்கு வெளியே எழுத வேண்டிய தேவை இல்லாமல் ஆகிவிட்டது. இணைய வழி கொள்குறி வினா (Objective Type) முறைக்கு மாறி விட்டால் எழுதவும் தேவை இல்லாமல் ஆகும். 

எதையும் வாசிக்க வேண்டியதில்லை, அது அவசியமற்றது மற்றும் நேர விரயம் என்கிற ஆழமான (மூட)நம்பிக்கை தமிழ் சமூகத்தில் எப்போதும் உள்ளது. இவர்கள் Youtubeல் காணொளிகளை கண்டு அதில் சுருக்கமாக சொல்லப்படும் தகவல்களை வைத்து பரீட்சை எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி எழுதி தேறினாலும், பட்டம் வாங்கிய உடன் என்ன ஆட்சியர் வேலையா கிடைத்துவிடும்? அவர்கள் ஆட்சியர் பணிக்கெல்லாம் கனவு காணவில்லை. 

சொந்தமாக ஒரு வரி கூட எழுத படிக்க தெரியாத மாணவர் ஒருவர் தன்னம்பிக்கை மிளிர சொன்னார் "2 லட்சம் கொடுத்தா _______ factoryல வேலை வாங்கி தருவாங்க சார், அது central government factory சார்" அவர் தொடர்ந்தார் "3 லட்சம், 4 லட்சத்துக்குலாம் வேலை இருக்கு சார், அது எங்க ஊர்ல இருந்து ரெம்ப தள்ளி இருக்கிற இடங்கள்ல இருக்கு, அதனால இதை பேசி வச்சிருக்கோம். Degree pass பண்ணா போதும் சார்." 

நான் கேட்டேன் "நீங்க ரெண்டு லட்சம் தரும் இடத்தில் வேறு ஒருத்தர் 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் வேலையை அவருக்கு கொடுத்து விடுவார்களே?" 

"அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க சார், ஒரு முக்கிய பிரமுகர் கூட மாமா touchல இருக்கார், இந்த வேலைகள் எங்க ஊருக்கு தான்னு fix பண்ணி வச்சிருக்காங்க" 

"எல்லாம் சரி, நீங்க அதுக்கு degree pass பண்ணனுமே?" 

"ஆமா, சார் எப்படியாவது pass பண்ணனும் சார்."

இப்படி தெளிவான திட்டம் வைத்திருக்கும் இந்த 2K kid வகுப்பிற்கு வெறுங்கையை வீசிக்கொண்டு வந்து விட்டு செல்கிறார். 

"தம்பி பெரிய பண்ணையாரா இருப்பீங்க போலையே? உங்க அப்பா என்ன செய்றாங்க?"

"அப்பா கிடையாது, சார்."

நான் அரண்டு விட்டேன். "என்ன தம்பி சொல்றீங்க, என்ன ஆச்சு?"

"எனக்கு ஒரு வயசா இருக்கும் போதே தவறிப்போய்ட்டார் சார், எனக்கு எதுவும் நியாபகம் இல்லை."

பையனின் அம்மா சத்துணவு கூடத்தில் சோறாக்கி போட்டு இவனை படிக்க வைக்கிறார். அவனுடைய அக்கா Nursing படித்து விட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவர் இதையெல்லாம் உணர்ந்து கொண்டு நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. நான் வழக்கமான ஆசிரியராக மாறி அடுத்த கேள்வியை கேட்டேன். 

"ஏம்பா, நீ இது எதை பத்தியும் கவலைப்படாம இப்படி இருக்கியே?" என்றேன். 

பையன் மந்தகாசமாக புன்னகைத்து கொண்டிருந்தான். 

***