Monday 29 May 2017

The Show Must Go On - புலி வால்

Gangster பற்றிய படமென்றால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் நிதர்சனத்தில் ஒரு gangster நிம்மதியாக வாழ முடியுமா?! எப்போதும் போலீஸ் பயம். எதிர் அணி குறித்த அச்சம். கூடே இருப்பவர்கள் காட்டி குடுத்து விடலாம். முதுகில் குத்தி விடலாம். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

படங்களில் ஒரு Gangster கதா நாயகனாக வரும் போது சில template விசயங்கள் இருக்கும். அதை தாண்டி படத்தில் என்ன இருக்கிறது என்பது தான் நினைவில் வைக்க வேண்டிய Gangster படமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.

The Show Must Go On நடுத்தர வயதை அடைந்து விட்ட ஒரு Gangster பற்றிய படம்.  குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும், பிள்ளைகளை கனடா அனுப்பி படிக்க வைக்க வேண்டும், தண்ணிர் தீடீர் என்று நின்று போகாத அளவுக்கு ஒரு வசதியான வீடு வேண்டும் என்று நாயகனுக்கு தேவைகள் எறும்புகள் போல வரிசை கட்டி வருகின்றன.

கதா நாயகன் In-goo தனது Boss உத்தரவின் பேரில் ஒரு கட்டிட காண்ட்ராக்ட் உரிமையை ஏலம் எடுத்தவரிடம் இருந்து அடித்து வாங்குகிறான். இதில் வரும் பணத்தில் நிம்மதியாக settle ஆவது திட்டம். ஆனால் அதில் ஆயிரம் பிரச்சினைகள் முளைக்கின்றன.

Boss ன் தம்பி In-goo விடம் பங்கு கேட்கிறான். வேலையும் தொடர்ந்து நடக்காமல் தொய்வடைகிறது. இதற்கிடையில் எதிர் அணியை சேர்ந்த ஆனால் In-goo வின் நெருங்கிய நண்பன் contract குறித்து In-goo விடம் விசாரிக்கிறான். தன்னோடு வந்து விடுமாறும் அழைக்கிறான்.

In-goo மீது ஒரு கொலை முயற்சி நடக்க வாழ்க்கை தலை கீழாக மாறி விடுகிறது. தன் மீது தனது மனைவி, மகள் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது என்பதை உணர்கிறான். வயதாகி வருவதையும் இளம் வயதில் மல்லுகட்டி சண்டை போட்டது போல இப்போது முடியவில்லை என்பதையும் உணர்கிறான்.

In-goo தோன்றும் காட்சிகள் பெரும்பாலும் In-goo தூங்கி விழுவது போன்றே ஆரம்பிக்கின்றன. போதுமான ஓய்வு இல்லை, Boss, பணம், குடும்பத்தின் மீது இருக்கும் அக்கறை தன் மீது இல்லை. ஏன் தன்னுடைய Boss மீது அத்தனை விசுவாசம் என்பதை தனது நண்பனிடம் சொல்கிறான். ஆனால் விசுவாசத்திற்கு மதிப்பு இல்லை என்று உணரும் நாள் வரும் என்பதை In-goo அறிவதில்லை.

கொரியா படங்களில் சிறப்பம்சமான காட்சியமைப்பு இந்த படத்தின் பெரும்பலம். Action காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

In-goo வாக நடித்திருக்கும் Sang Kang-ho தற்கால தென் கொரிய நடிகர்களில் மிக பிரபலமானவர். Gangster ஆக நடித்தாலும் பார்வையாளர்களை கண்ணில் நீர் வர சிரிக்க வைக்கும் காட்சிகளிலும் வெளுத்து வாங்குவார். குடும்ப தலைவனாக நம் கண்களை குளமாக்குவார்.

The Show Must Go On நிச்சயம் ஒரு தனித்துவமான Gangster படம். கதா நாயகன் In-gooவை சுற்றியே கதை நகர்கிறது. In-goo வின் செயல்களும் அதன் எதிர் வினைகளுமே படம். ஆனாலும் In-goo வின் மனைவி, மகள், நண்பன், Boss மற்றும் அவருடைய தம்பி என்று திரையில் தோன்றும் அனைவரும் அட்டகாசமான ஒரு performance குடுத்து விட்டு போகிறார்கள்.

புலிவாலை பிடித்தவன் அவ்வளவு எளிதாக அதை விட்டு விட முடியாது. ஒரு Gangster என்பவன் புலிவாலை பிடித்து கொண்டிருப்பவன். அமைதியாக வாழ வேண்டும் என்ற கனவு கானல் நீர் போல தோன்றி மறையும். இங்கே In-goo எதை இழந்து எதை பெற்றார் என்பதே The Show Must Go On.




Sunday 28 May 2017

The Salesman - இன்னா செய்தாரை...


Revenge is a dish best served cold என்று Kill Bill படம் துவங்கும் போது ஒரு மேற்கோள் வரும். Tarantino பாணி என்று உலகம் முழுதும் படம் எடுக்கும் அளவுக்கு Tarantino வின் புகழ் நிலைத்து நிற்பதற்கு அந்த இரண்டு Kill Bill படங்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஆனால் அந்த படங்கள் நன்றாக திட்டமிட்டு எடுக்க பட்ட grand spectacle தானே தவிர்த்து அவற்றில் ஆன்மா இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இங்கே ஈரான் நாட்டு திரைப்படமான The Salesman ல் ஒரு பழி வாங்கும் கதை உள்ளது ஆனால் படத்தின் மையம் அதுவல்ல.

Rang De Basanti படத்தில் வரும் கதா பாத்திரங்கள் படத்திற்குள்ளே எடுக்கப்படும் படத்தில் மைய கதா பாத்திரங்களாக நடிக்க அது அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். Birdman படத்திலும் மேடை நாடகமும் அதை இயக்கி நடிக்க நினைக்கும் நடிகரின் வாழ்க்கையும் பின்னி பிணைந்து நகரும்.

The Salesman படத்தில் America வாழ்க்கையை பிரதிபலிக்கும் Death of a Salesman என்ற மேடை நாடகத்தில் படத்தின் மைய கதா பாத்திரங்கள் நடிக்கின்றனர். மேடை நாடக காட்சிகளும் அவர்களின் வாழ்க்கையும் மாறி மாறி வருகின்றன.

கதா நாயகன் Emad கல்லூரி ஆசிரியர். நாடகத்தில் நடிப்பதை ஒரு hobby யாக செய்கிறார். அவரது மனைவிக்கும் நாடகத்தில் நடிப்பதில் விருப்பம் என்பதால் இருவரும் சேர்ந்து பங்கு கொள்கிறார்கள்.

மேல்நடுத்தர வகுப்பை சேர்ந்த அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு அருகில் நடக்கும் கட்டிட வேலை காரணமாக அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விரிசல் விடுகிறது. நாடகக்குழு நண்பர் தன்னிடம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு இருப்பதாக கூறி அவர்களை அங்கே குடியமர்த்துகிறார். அந்த வீட்டில் ஒரு அறை அடைத்து வைக்க பட்டிருக்கிறது. அதில் முன்னே இருந்தவரின் பொருள் இருப்பதாகவும் அவர் விரைவில் வந்து எடுத்து கொள்வார் என்றும் நண்பர் சொல்கிறார்.

ஆங்கிலத்தில் Pandora's Box என்று சொல்வார்கள். அந்த அறை Pandora's Box ஆக உருக்கொள்கிறது. அதாவது அதை திறக்க போக அதில் இருந்து பல பிரச்சினைகள் முளைக்கின்றன. அந்த அறையில் இருந்த பொருளை அப்புறப்படுத்தி இவர்கள் பொருட்களை அடுக்கி வைக்கிறார்கள்.

அடுத்த நாள் யாரும் எதிர்பார்க்காத அசம்பாவிதம் நடந்து விடுகிறது. கணவனும் மனைவியும் இதை யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஆனாலும் கணவனால் அதை கடந்து போக முடியவில்லை.

அசம்பாவிதத்திற்கு காரணமான நபரை கண்டு பிடிக்க அத்தனை வழிகளிலும் முயற்சி செய்கிறான். இது அவர்கள் வாழ்க்கையில் குழப்பத்தை கொண்டு வருகிறது.

ஈரான் நாட்டு படங்கள் எப்போதும் இயல்பிற்கு பக்கத்திலேயே இருக்கும். The Salesman படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் Death of a Salesman மேடை நாடகம், 3Act Structure என்று இருக்கும் reference மேற்குலக பார்வையாளர்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. குறிப்பாக Oscar விருதுகள். ஆனால் படத்தின் இயக்குனர் விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கும் அளவிற்கு அமெரிக்க அரசியல் மாறியது நகை முரண்.

படம் மெதுவாக நகர்ந்தாலும் இருக்கையின் நுனியில் அமரவைக்கும் காட்சிகளும், அவற்றில் நடிகர்களின் gripping performance ம் உண்டு. படத்தில் Emad ஆக நடித்திருக்கும் நடிகர், அவரின் மனைவி Rana வாக நடித்திருக்கும் நடிகையும் சமகால ஈரானிய சினிமாவின் பிரபல முகங்கள்.

இயக்குனர் Asghar Farhadi ஏற்கனவே தன்னுடைய A Separation படத்திற்காக Oscar விருது பெற்றவர். About Elly, The Past போன்றவை குறிப்பிட தகுந்த படங்கள். அனைத்தும் பெண்களின் துன்பங்களையே பேசுகின்றன. ஆனால் நம் நெடுந்தொடர் கொடுமையெல்லாம் இல்லை. தனக்கு நேர்ந்த அநீதியை வெளியில் சொல்ல தயங்கும் நிலையை உருவாக்கிய கலாச்சார வறுமையை அவை பதிவு செய்கின்றன. இது ஏன் இப்படி நடக்கிறது என்று நம்மை சிந்திக்க வைக்கின்றன.

The Salesman படத்தில் மௌனமான காட்சிகள் கதைகளை சொல்கின்றன. நடக்க போகும் நிகழ்வுகளை முன்னறிவிப்பதாக அவை வருகின்றன. வன்முறை நடந்து முடிந்த இடம் மட்டுமே நமக்கு காண்பிக்க படுகிறது. வன்முறை அல்ல.

The Salesman திரைப்படத்தோடு நம் நாட்டில் இருந்து விசாரணை படமும் போட்டி போட்டது. விசாரணை The Salesman படத்தோடு எந்த வகையிலும் குறைந்த படமில்லை என்றாலும் ஈரானிய படங்களுக்கு முன்னோடிகள் அமைத்து தந்த பாதை இருப்பதால் அவர்கள் வெற்றியை நோக்கி எளிதாக சென்று விடுகிறார்கள். மேலும் அவர்கள் அனைத்து வயது பார்வையாளர்களுக்கும் ஏற்ற மாதிரியும் படம் எடுக்கிறார்கள்.

Asghar Farhadi தற்கால ஈரானிய சமூகத்தில் கணவன் மனைவிக்கிடையே நிகளும் முரண்பாடுகள், அதனால் எழும் சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள், பெண்களின் மனப் போராட்டம் ஆகியவற்றையே படங்களாக எடுக்கிறார். குழந்தைகளை மைய கதா பாத்திரங்களாக வைத்து படங்கள் எடுத்து சர்வ தேச சமூகத்தை திரும்பி பார்க்க வைத்தவர்கள் இப்போது தங்களது சமூகத்தின் சிக்கலான பக்கங்களை படங்களாக எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

Saturday 27 May 2017

கங்காணி

'மிஸ்டர் ராஜா, இங்க வாங்க'

கல்லை கையில் வைத்திருப்பவனிடம் நாய் பம்முவதை போல கொஞ்சம் பம்மிய ராஜா 'சொல்லுங்க சார்'

'அப்புறம் கிளாஸ்லாம் எப்படி போகுது?'

'நல்லா போகுது சார், ஆனா எப்படியும் பாதிக்கு பாதி arrear வைக்க போறாங்க'

'என்ன ராஜா இப்படி சொல்றீங்க?! அவங்க arrear வச்சா மெமோ உங்களுக்கு தான்'

'ஆமா, சார்'

'Essay எல்லாம் குடுத்து மனப்பாடம் பண்ணி எழுத வைங்க'

'வச்சிட்டு தான் சார் இருக்கேன்'

'பசங்க கிட்ட ரெம்ப friendlyயா இருக்கீங்க போல?!'

'அப்படியெல்லாம் இல்லையே சார்!'

'ராஜா சார், இங்க உள்ள பசங்கள கிளாஸ்ல வச்சி அவமான படுத்தனும், அசிங்க படுத்தனும், அப்ப தான் அவன் ஒழுங்கா இருப்பான். பிள்ளைங்க முன்னாடி அசிங்க பட்ருவோம் அப்டின்னு ஒரு பயம் இருக்கும். அதே மாதிரி பிள்ளைங்களையும் நல்லா திட்டணும் அப்போ தான் சும்மா சும்மா பல்லை காட்டாமா ஒழுங்கா இருப்பாங்க.'

'அது, அது நான் திட்ட தான் செய்யிறேன் சார், ஆனா'

'ராஜா, பயப்படக்கூடாது, பயந்தா வேலை பார்க்க முடியாது'

இவருடன் பேசும் போதெல்லாம் மனுசனை கிறுக்காக்கிறார் என்று நினைத்து கொண்டு, வாறேன் சார் என்று நடையை கட்டினார் ராஜா. 

மேற்கண்ட உரையாடலில் நீங்க சந்தித்த அந்த மற்றுமொரு ஆளுமை,
மூக்கு தூக்கி. கூஜா தூக்கி தெரியும் அது என்ன மூக்கு தூக்கி?! ஐந்தரை அடி உயர போண்டாவை நினைவு படுத்தும் உருவத்தை உடைய மேதகு பேராசிரியர் பாண்டிக்குமார் அவர்களின் பட்டை பெயர்களில் ஒன்று தான் மூக்கு தூக்கி. குள்ள நரி, போண்டா, DSP, PPK, ஆட்டு உரல் போன்றவை வெவ்வேறு மாணவர்களால் வெவ்வேறு காலங்களில் சூட்டப்பட்ட பெயர்கள். இன்னும் பல உண்டு அவற்றை நீங்கள் யூகித்து கொள்ளவும்.

தீக்குச்சி முனையில் இருக்கும் மருந்து அளவுக்கு கூட மானம் அவமானம் இல்லாத ஒரு குணச்சித்திரம் பாண்டிக் குமாருடையது. அவரை போல நாலு பேரை சேர்த்தால் இதிகாசம் எழுதலாம் தான் ஆனால் இது Mr. மூக்கு தூக்கியை பற்றிய சிறு குறிப்பு மட்டுமே.

மாணவர்கள் வாயில் தண்ணீரை வைத்து கொப்பளித்து கொண்டு இருக்கும் போது வாய்க்குள் என்ன என்று கேட்பார். பல்வழியில் ஒரு பக்கம் வாய் வீங்கியவனை அழைத்து வீங்கிய இடத்தில் ஆள் காட்டி விரலை வைத்து அழுத்தி 'உள்ள போயலை வச்சிருக்கியா' என்பார். ஒழுக்கம் தான் ஒருவனை உயர்த்தும் என்று பேசி விட்டு டீக்கடை சந்தில் நின்று வெள்ளைப்பீடி குடிப்பார்.

வேலை செய்யும் கல்லூரியில் பல நூதனமான, மாணவர்கள் மொழியில் கேனைத்தனமான விதிமுறைகளை அமுல் படுத்துவதற்கு கண் அயராமல் உழைப்பவர். பேராசிரிய புள்ளிகளுக்கு Whatsapp group ஆரம்பித்து அதில் துறை தலைவர்களை மட்டும் admin ஆக்குவார். 'Hierarchy maintain' பண்ணனும் என்று சாணக்கியத்தனம் செய்வார். கல்லூரி முதல்வர், செயலர் என்று வெள்ளை சட்டையை பார்த்த உடன் தண்டால் எடுப்பார். அவர்களின் கார் டயருக்கு கீழ் எலுமிச்சைக்கு பதில் தன் தலையை வைக்க தயாராக இருப்பதாக (பொய் தான்) சொல்லி வைப்பார்.

சுற்றலா சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை குரூப்பில் பகிர்ந்து விட்டு யாரெல்லாம் என்னலாம் பதில் போடுகிறார்கள் என்று பார்ப்பார். பின்னர் புகைப்படத்தை பார்த்தவர்கள் எத்தனை பேர் பதில் போட்டவர்கள் எத்தனை பேர் என்று புலன் விசாரணை செய்வார். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு வைத்திருப்பார். இல்லை தீர்வுகளை கைவசம் வைத்துக்கொண்டு பிரச்சினைகளை உருவாக்குவார்.

மைக் கையில் கிடைத்தால், பாட்டு பாடுவது, சொற்பொழிவு, செய்தி வாசிப்பது, பிச்சை கேட்பது என்று குரலை ஏற்றி இறக்கி பேசுவார். ரத்த தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தனது வாழ் நாள் லட்சியமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருப்பதாக காட்டிக்கொள்வார். ரத்தம் தேவை என்றால் தனது கிட்னியில் ஒன்றை கொடுத்தாவது நாம் கேட்ட ரத்த பிரிவை கொண்டு வந்துவிடுவார். இந்த ஒரு குணத்திற்காக இவருடைய பிற பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்தில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பெஞ்சில் சினிமா நடிகன், நடிகை பேருக்கு பதிலாக தங்களது அம்மா பெயரை மாணவர்கள் எழுத வேண்டும் என்று விபரீத யோசனைகள் சொல்வது இவருக்கு மூச்சு விடுவது போல மிக எளிதாக தோன்றக் கூடிய விசயங்கள். சினிமா, நெடுந்தொடர், பட்டி மன்றம், சூப்பர் சிங்கர் என்று அனைத்தையும் பார்ப்பதால் இவர் பேசும் போது ஏதோ டிவி நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இருக்கும். சில நிகழ்ச்சிகளில் பேச முயற்சி செய்ததாகவும் அங்கே இவரை விட மண்டை குறைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க படுவதை கண்டு கொதித்தெழுந்து இனிமேல் இப்படி நிகழ்ச்சிகளுக்கு முயற்சி செய்வது இல்லை என்று முடிவு எடுத்ததாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் சொல்கின்றனர்.

மாணவர்கள் தன்னை எப்படி புகழ வேண்டும் என்று எதிர்பார்கிறாரோ அது போலவே கல்லூரியில் தனக்கு மேலே உள்ள புள்ளி ராஜாக்களை புகழ்ந்து பேசுவார். கல்லூரியின் நலனை காக்க ஒரு வித தற்கொலை தன்மையுடன் செயல் படுவார். இல்லை, அப்படி காட்டிக் கொள்வார். தன் அளவுக்கு கல்லூரியில் உள்ள மற்ற பேராசிரியர்கள் மாணவர்களை 'நல்வழி படுத்துவதில்' அக்கறை காட்டுவதில்லை என்று புறம் கூறுவார். நேரில் கூறி யாரும் மூக்கை உடைத்து விட்டால் என்ற முன் யோசனை தான்.

அப்படியே யாரேனும் மூக்கை உடைத்தால் கூட மறுநாள் பார்த்த உடன் ஒரு வணக்கம் சொல்வார். பணிந்து பணிந்து ஒருவனை ஒன்றும் இல்லாமல் ஆக்குவது அவருக்கு காலையில் இட்லி சாப்பிடுவது போல எளிதான ஒன்று.

மற்றவருடன் பேசுவாறே தவிர உரையாடல் என்பது பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. அவருடைய பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள் என்பதற்கும் அவர் இப்படி ஆனதிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று யாராவது ஆராய்ச்சி செய்வது மனிதகுலத்திற்கு புதிய வகை சிந்தனையை உருவாக்க உதவியாக இருக்கும்.

தனக்கு தெரியாத விசயம் இல்லை, தான் பிடித்த நாய்க்கு ஐந்து கால் என்று கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருப்பார். இந்த விசயத்தில் அவர் 'பால் வண்ணம் பிள்ளை'க்கு பங்காளி. நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு நான் சொல்வது மிகச்சரி என்று நிறுவிக்கொண்டே இருப்பார். மறுத்து பேசுபவர்களை, மாற்று கருத்து உடையவர்களை, சுயமாக சிந்திக்க கூடியவர்களை கண்டால் பருந்தை கண்ட காக்க கதறுவது போல கதறுவார். அப்படி சிந்திப்பவர்கள் கல்லூரியின் கலாச்சாரத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள் என்று கோட்பாடுகளை உருவாக்குவார்.

தன்னுடைய துறையில் தனக்கு கீழ் பணியாற்றும் பேராசிரியர் தன் சொல் கேட்டு நடக்கும் படி பார்த்துக்கொள்வார். அதாவது அந்த நபர் இவருக்கு தெரியாமல் ஒன்றுக்கு கூட போக முடியாது. அப்படி வளைந்து குடுக்க தெரியாத யாராவது வந்தால் 'உனக்கு இந்த கல்லூரியில் பேராசிரியர் ஆகும் தகுதி இல்லை' என்று தன்னம்பிக்கையை குலைக்கும் வேலையை பார்ப்பார். கீழ்ப்படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தேடி வரும் என்று விவேகானந்தர் சொன்னதாக மேற்கோள் காட்டி புத்தி ஜீவி வேசம் கட்டுவார்.

இவருக்கு கீழ் துறையில் இருக்கும் அனைவருக்கும் இவர் மீது கொலை வெறியில் இருந்தாலும் வேறு வழியில்லாமல் ஆமாம் போட்டு கொண்டு இருப்பார்கள். நிர்வாகத்துடன் தான் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக பிரமையை உருவாக்குவார். நிர்வாகம் என்பது தனக்கு துதி பாடும் நபர்களை அருகில் வைத்து கொண்டு செயல்படும் ஒரு அபத்த நாடக அமைப்பு. அதில் போண்டா போன்ற ஆட்களுக்கு குணச்சித்திர வேசம் என்பது ஒரு உலக உண்மை. கதா நாயகன் என்பவன் சினிமாவில் மட்டும் தான் இங்கே எல்லாரும் குணச்சித்திரம் தான்.

ஆண்கள் மட்டும் குழிமியிருக்கும் போது இவர் பேசுவதை பதிவு செய்து இவரது மனைவியிடம் காட்டினால் அவர் கேட்ட அடுத்த நொடி இவரை விவாகரத்து செய்ய விட முடிவு எடுத்து விடுவார். அப்படி செய்யவில்லை என்றால் மறுநாள் தினத்தந்தியில் மூன்றாம் பக்கத்தில் கலர் போட்டோவுடன் செய்தி எதிர்பார்க்கலாம்.  இவருடைய நண்பர்களின் பேச்சின் பதிவு அவர்களின்  மனைவியையும் அத்தகைய முடிவை எடுக்க வைக்கும்என்பதை இங்கே கூற தேவையில்லை. பிறகு தினத்தந்தி காட்டில் அடை மழை.

காதல் விவகாரங்களை பஞ்சாயத்து செய்வது என்பது கரும்பு சாப்பிடுவது போல கடித்து, சுவைத்து, ரசித்து, ருசித்து செய்வார். எந்த பையானவது போன் கொண்டு வந்து மாட்டிக்கொண்டால் உடனே whatsapp, facebook எல்லாத்தையும் check செய்வார். சக மாணவியிடம் பையன் பேசினால் அவனுக்கு facebook account இருக்கிறதா என்று கேட்டு அதன் id மற்றும் password கேட்பார். அதற்கு அந்த பையன் இவரை என்ன மாதிரி கேள்வி கேட்டாலும் அசர மாட்டார்.

பையன் தன் சாதி என்றால் ஒரு மாதிரியும் பிற சாதி என்றால் வேறு மாதிரியும் நடத்துவார். கொஞ்சம் அரசியல் தொடர்புள்ள மாணவர்கள் என்றால் அப்படியே பம்முவார். டிவியில் வரும் சாதி சார்ந்த நிகழ்ச்சிகளில் தனது மாணவர்கள் படம் வந்தால் அறச்சீற்றம் கொள்வார். தனது ஏரியா கோயில் சமாச்சாரங்களில் தனது பங்களிப்பு இருப்பது எல்லாருக்கும் தெரியும் படி பார்த்துக் கொள்வார்.

மாணவிகளை அண்ணனோ, தம்பியோ அழைக்க வந்தால் 'நீ அண்ணன், தம்பிங்கிறது எங்களுக்கு எப்படி தெரியும்?!, அந்த பெண்ணை கூப்பிடுங்க ஒரு enquiry போட்டா தான் சரி வரும்' என்று ஊதி பெரிசாக்கி அவர்கள் 'நீ வெளிய வா உன்னை மாறு கால் மாறு கை வாங்குறோம்' என்று மிரட்டும் அளவுக்கு பெரிதாக்குவார்.

உடன் வேலை பார்க்கும் சக பேராசிரியர்கள் அது நடக்கும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த போண்டா யாருடனாவது சிலுவை இழுக்கும் போது முதல் அடியை யாராவது அடிக்க மாட்டார்களா என்று மொத்த கல்லூரியும் எதிர் பார்க்கும்.

மாணவர்கள் footboard அடிப்பது பற்றி வாய் கிழிய பேசி அனைத்து பேராசிரியர்களும் footboard அடிக்கும் மாணவர்களை கையும் களவுமாக photo எடுத்து வர வேண்டும் என்று கல்லூரியில் இருக்கும் cctv யை பேராசிரியர்கள் வாங்கி வைத்திருக்கும் சீன போனுக்கும் extend பண்ணுவார். மாணவர்கள் படம் பிடிக்க பட்டது தெரிந்து உடனே சட்டையை பிற துறை மாணவருடன் மாற்றி விட்டு 'பாருங்க போட்டோல நான் இந்த சட்டையா போட்ருக்கேன்?!' என்று தப்புவார்கள்.

பேராசிரியர்களுடன் மாணவர்கள் நெருங்கி பழகினாலோ, காணும் போது எல்லாம் வணக்கம் சொன்னாலோ அந்த பேராசிரியர் மாணவர்களுக்கு அதிக இடம் தருவதாக கருத்து சொல்வார். இப்படி ஆசிரியர் மாணவருடன் பழகினால் 'discipline problem' வரும் என்று விளக்குவார்.

இப்படி பட்ட பாண்டிக்குமார் அன்று காலை மாணவர்களை மேய்க்கும் வேலையில் மும்முரமாக ஈடு பட்டிருந்தார். அப்போது முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் Dany பைக்கில் இருந்து இறங்கி தன்னைப்போல வகுப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தான். பையன் கொஞ்சம் style பேர்வழி. கொஞ்சம் hippy போல தலை முடி வைத்து அரும்பு மீசையை முறுக்கி விட்ருந்தான். அது அவன் முகத்துக்கு ஒரு நகைச்சுவை தன்மையை கொடுத்தாலும் மிஸ்டர் மூக்கு தூக்கியின் கண்களுக்கு 'விதி மீறலாக' பட்டது.

Hitler போன்ற நபர்களை கொண்டாடும் இந்திய சமூகத்தில் பாண்டிக்குமார் போன்ற ஆட்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு நிர்வாக அளவில் முழு அங்கீகாரம் பெறுகின்றனர். 'அப்ப காந்தி' என்று உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை. ஒரு தனி நபரின் கெட்ட வார்த்தை இருப்பை கண்டு பிடிக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவரிடம் காந்தியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க வேண்டியது மட்டுமே.

இப்படி மயிர் விசயம் வரை கவனிக்கும் மூக்கு தூக்கி Dany யை நிப்பாட்டி விசாரிக்க தொடங்கினார்.

"இங்க வா, உன் பேர் என்ன?"

"Dany, சார்"

"இது என்ன முடி இவ்ளோ style அ இருக்கு?"

"வெட்டணும் சார்"

"அது என்ன முறுக்கு மீசை?"

இதற்குள் Dany முகமெல்லாம் படரும் சிரிப்பை மறைத்துக்கொண்டு, "எடுக்கணும் சார்"

"எந்த department?"

"MA English"

"உங்க departmentla இதெல்லாம் கேக்க மாட்டாங்களா?"

இலக்கியம் படிச்சவங்க இங்கிதம், நுண்ணுணர்வு உள்ளவங்க உன்னைய மாதிரியா மயிர் ஆராய்ச்சி பண்ணுவாங்க என்று நினைத்து கொண்டு "சொன்னாங்க சார், இந்த Sunday எடுத்திருவேன் சார்"

"திங்கள் கிழமை நான் வந்து பார்ப்பேன்"

"சரி, சார்"

Dany நடையை கட்ட, போண்டா நேராக அருகில் உள்ள நூலகத்தில் இருந்த intercom நோக்கி நடந்தார். ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படும் என்று தெரிந்திருந்தால் இதை நான் கண்டு பிடித்தே இருக்க மாட்டேன் என்று வருந்தும் அளவுக்கு இந்தியர்கள் அக்கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதில் நிபுணர்கள்.

நேராக சென்று பேசக்கூடிய அளவுக்கு இது ஒரு விஷயமல்ல என்று மிஸ்டர் போண்டாவிற்கு தெரியும் அதனால் தான் intercom. போனை எடுத்து ஆங்கில துறை நம்பரை அழுத்தினார். மறுமுனையில் ஆங்கில துறை பேராசிரியர் கருப்பசாமி பேசினார்.

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் குரலில் தேர்தல் நேர தீவிரத் தன்மை போல பாண்டிக்குமார் புகார் சொல்வதற்கு, புரணி பேசுவதற்கு, யாராவது அடிக்க வரும் போது சமாளிப்பதற்கு என்று வெவ்வேறு குரல் வைத்திருக்கிறார்.

இதில் முதல் வகை குரலோடு

"சார், நான் பாண்டிக்குமார் பேசுறேன்"

"சொல்லுங்க சார், நான் கருப்பசாமி"

"உங்க departmentல" என்று மொத்த கதையை மிக தீவிரமான ஒரு தொனியில் சொல்லி முடித்தார்.

"நான் சத்தம் போடுறேன், சார்" என்று கருப்பசாமி போனை வைத்தார்.

இப்ப அந்த பையன் முடியை எடுக்காட்டி நாளப்பின்ன நடக்கிற hod மீட்டிங்ல போண்டாவுக்கு பேசு பொருள் இது தான் என்று கருப்பசாமி யோசித்தார். சரி நாமளும் சொல்லிட்டு class incharge மதன் குமார் கிட்டயும் சொல்லி சொல்ல சொல்லுவோம் என்று முடிவு செய்து விட்டு வேலையில் மூழ்கினார்.

விசயம் கேள்விப்பட்ட மதன் "ஆமா பிள்ளைக ரெண்டு அடி நீளத்திற்கு முடி வளர்க்கும் போது நம்ம பய ரெண்டு இஞ்சு கூட வளர்த்தா என்ன?" என்று கடுப்பு காட்டினார். Dany யிடம் "அந்த ஆள் எப்ப கேட்டாலும் மொட்டை போட முடி வளர்க்கிறேன் அப்டின்னு சொல்லு, கேக்கும் போதெல்லாம் சொல்லு"
சரியென்று விட்டு Dany நகர்ந்தான்.

"ஏன் மதனு, இந்த 'ஆமை' மாதிரி ஆட்களை என்ன பண்றது?!"

"என்ன சிலையா வைப்பாங்க?!, என்னைக்காவது எந்த பையானவது கல்லைக்கொண்டி எறியப்போறான்"

"ஒரு உப்பு கல்லுக்கு பெறாத விசயம்"

"குறைகுடம் கூத்தாடும்னு நம்ம ஆட்கள் சும்மாவா சொல்லிட்டு போயிருக்காங்க"

"சரி நம்மள பத்தி இந்த மூக்கு தூக்கி என்னலாமோ சொல்லிட்டான், இதென்ன மயிர் விசயம்"

"ஆமா, விட்டுத்தள்ளுங்க"

இதற்கிடையில் போண்டா யாரையாவது ரெண்டு பேரை fine கட்ட வைக்கணும் என்று மாணவர்களின் கழுத்து, தலை, கை என்று 'ஒழுக்க விதிகளை மீறும்' கயிறு, செயின், மோதிரம் என்று துருவும் போது இரண்டு மாணவிகள் நூலகம் நோக்கி வருகின்றனர்.

"ஹல்லோ, இங்க வாங்க"

"குட் மார்னிங் சார்" என்று ஒரே குரலில் வணக்கம் செலுத்தினர்.

"ID கார்டை கொண்டங்க"

"எதுக்கு சார்?!"

"நீங்க dress code violation, நீங்க free hair அதுக்கு தான்"

"சார், நான் இப்ப rest room போய் shawl v shapela போட்டு pin குத்திடுவேன், சார்!!!"

"சார், தலை காயவும் ஜடை பின்னுடுவேன் சார்"

"அதெல்லாம் எனக்கு தெரியாது, ஒழுங்கா கார்டை கழட்டி குடுத்துட்டு போய் fine கட்டுங்க"

இப்படி ஒரு சந்தர்பத்திற்கு காத்திருந்தது போல மாணவிகளில் ஒருத்தி, "என் தலைல பேன் பாருங்க, நான் வேணா அதுக்கு சம்பளம் தாறேன்" என்று ஒரு வீசு வீசினாள்.

கண்கள் சிவக்க, காது, கன்னம் துடிக்க பாண்டிக்குமார், "ஏம்மா, ஒரு staff கிட்ட பேசுற மாதிரியா பேசுற???"

"நீங்க மட்டும் ஒரு ஸ்டுடன்ட்டை நடத்திற மாதிரியா நடத்துறீங்க"

"இதெல்லாம் சரி வராது, எந்த dept நீ?"

"எந்த department அ இருந்த என்ன?, அது என்ன பொம்பள பிள்ளைக shawl, தலை முடி பத்தி நீங்க கேக்குறது, எத்தன மேடம் இருக்காங்க அவங்க கிட்ட சொல்லி கேக்க வேண்டியது தான?"

"என்னமா ரெம்ப பேசுற? College rulesலாம் தெரியாத உனக்கு?"

"எல்லாம் எங்களுக்கு தெரியும், நீங்க முதல்ல ஒழுக்கமா நடந்துக்கோங்க"

"ஓ, ஒழுக்கத்தை பத்தி எனக்கு நீ சொல்லி தாரியா?!!!"

"நீங்க என்ன ஒழுக்கத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா??!!"

"என்னமா" என்று போண்டா குரலை உயர்த்த அந்த பெண் குனிந்து ஒரு செருப்பை கழட்டுகிறார்.

***முற்றும்***

பின் குறிப்பு: இக்கதையில் நீங்கள் படித்த யாவும் கற்பனையே. உயிருடனோ, ஆவியாகவோ, கொள்ளி வாய் பிசாசாகவோ இருக்கும் யாராவது உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அது உங்களுடைய கற்பனை தானேயன்றி எழுதியவர் உருவாக்கியது அல்ல. :) ;) :P :D