Monday, 25 December 2023

The Element Chapter 4 - The Deluge

The Element


Chapter 4 - The Deluge 


தூங்கிய பின் எத்தனை முறை மின் வெட்டு ஏற்பட்டது என்று தெரியவில்லை. அல்லது வெட்டப்பட்ட இணைப்பு மீளவில்லையா என்றும் தெரியவில்லை. இரவில் முழிப்பு வந்த போது மழை ஒரே ராகத்தில் பாடிக்கொண்டிருந்தது. 


காலை 5 மணி அளவில் house owner கீழே ஏதோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது. அப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது. 


நான் கீழே சென்று பார்த்தேன். ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த கோட்டில் கிடந்தது இப்போது இந்த கோட்டில் கிடக்கிறது என்று மழை நீரின் அளவை காலை வைத்து தொட்டு காட்டினார். 


அடுத்த கோடு தாண்டினால் தண்ணீர் வண்டிகளை நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு வந்து விடும். 18ம் தேதி காலையில் இருந்து மழை அருவி மாதிரி இறைந்து கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சென்று தண்ணீரின் அளவை பார்த்துவிட்டு வண்டிக்கு பிரச்சினை இல்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்துவிடுவேன். 


Cricket Score, பங்குச்சந்தை நிலவரம் பார்ப்பது போல மழை அளவை குறித்து கொண்டிருந்தேன். 


குடை பிடித்துக்கொண்டு வீட்டின் மாடியில் இருந்து சுற்றி பார்த்தால் நீர் அனைத்து குழிகளையும் நிரப்பி சாலையை நிரப்பி வீடுகளை நிரப்பிக் கொண்டிருந்தது. 


சிறு துளி பெருவெள்ளம் என்பது இது தானா? என்று மண்டைக்குள் சிந்தனை வேறு ஓடிக்கொண்டிருந்தது. கடல் கிழக்கே இருக்கிறது. இந்த தண்ணீர் மேற்கில் இருந்து தானே வருகிறது. அப்படியென்றால் கடல் நீர் ஊருக்குள் வந்துவிடவில்லை. ஆனாலும் ஓரிரவில் பெய்த மழைக்கு இப்படி தாமிரபரணி தெருவில் ஓடும் என்பது நம்ப முடியாததாகவும் இருந்தது. 


கொரோனா காலத்தின் ஆரம்பத்தில் மக்கள் ஒரு வித  கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். கறி சாப்பிட்டு, கதை பேசி, இணையத்தில் அளவளாவி என்று குஷியாக இருந்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கதி கலங்கிப்போய் கிடந்தனர். 


அது போல 18ம் தேதி காலை முதல் அக்கம் பக்கத்தினர் மழையில் நனைந்தபடி முழங்காலுக்கு மேலே ஓடிய தண்ணீரில் வடக்கு தெற்காக தெருவில் நடந்து கொண்டிருந்தனர். என்னது இவனுங்க theme park வந்த மாதிரி இவ்வளவு jollyயா இருக்காங்க என்று பயந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். 


The Element Chapter 3 - The Electricity

The Element 


Chapter 3 - The Electricity 


16/12/2023 அன்று காலை washing machine போட்டிருந்ததால் தொட்டி தண்ணீர் குறைவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போதே 17/12/2023 அன்று current போகவும் வரவுமாக இருந்தது. 


பரவா இல்லையே இந்த ஊரில் இப்போது current போனால் உடனே திரும்ப வருகிறதே, அதுவும் மழை பெய்யும் போது என்று ஒரு 10 நிமிடம் தண்ணீர் motorஐ ஓட விட்டேன்.  


பையன் பகல் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தான். Cell phoneல் charge இருந்தது. முதல் நாள் இரவு ஜிகர்தண்டா XX Netflixல் பார்க்க தொடங்கியிருந்தேன். அதை தொடர்ந்து பார்த்து முடித்தேன். முதல் ஜிகர்தண்டா விற்கு இது பல படி மேல். Head phoneஐ காதில் இருந்து எடுத்தால் வெளியில் மழை ஊற்றிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கும். நம்ம பாக்காத மழையா என்று தொடர்ந்தேன். 


அன்று இரவு வரை மழை தொடர்ந்தது. 16 அன்றும் மழை விட்டு விட்டு பெய்திருந்ததால் துவைத்து போட்ட துணிகள் 2 நாட்கள் மழையில் கிடந்து ஊறிக்கொண்டிருந்தன. இனி விட்டால் அவை வீணாகி விடும் என்று one time rinse போட்டா ஓரளவு உலர்ந்து வந்து விடும்,  வீட்டிற்குள் காயப்போடலாம் என்று மீண்டும் washing machine ஐ ஓட விட்டேன். அதற்குள் இரண்டு முறை current போய் வந்தது. 


Phoneல் மீண்டும் charge போட்டு இரவு உணவை முடித்து விட்டு, கமலி from நடுக்காவேரி படம் பாதியோடு நிற்கிறதே. கொஞ்சம் நல்லா இருந்ததே, தூக்கம் வரும் வரை அதை பாப்போம் என்று அதை தொடர்ந்தேன். 


இதற்கிடையில் மின் இணைப்பு போகவும் வரவுமாக இருந்தது. வீட்டில் UPS கிடையாது. மழை பெய்து குளிர்ந்து விட்டதால் fan சுத்தினாலும் சுத்தா விட்டாலும் ஒன்றும் வித்தியாசம் தெரியவலில்லை. மனைவியும் மகனும் தூங்கி விட்டார்கள். 


11 மணிக்கு படம் முடிந்தது. இன்னும் 2 நாளில் college reopen ஆகப்போகுது, இந்த vacation இப்படி முடிந்தது என்று எண்ணிக்கொண்டே தூங்க சென்றேன். அப்போது மின் இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது.

The Element Chapter 2 - The Rains

The Element 


Chapter 2 - The Rains


10 வருடத்திற்கும் மேலாக ஞாயிறு காலை  எழுந்தவுடன் கறிக்கடை வாசலில் போய் நிற்பதை தவிர்த்து வருகிறேன். ஞாயிறு தவிர எந்த நாளில் அசைவம் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அன்று வாங்கிக்கொள்வோம். 


ஒன்று கடையில் இருக்கும் எக்கச்சக்க கூட்டம். இன்னொன்று மற்ற நாளில் இருக்கும் பொறுமை கறி வெட்டுபவருக்கு இருக்காது. இதனால் ஏன் இன்னைக்கு போய் கறி வாங்கினோம் என்று நொந்து கொள்ள வேண்டியது இல்லை. 


அது மட்டுமல்ல ஞாயிறு பொது இடங்களான கடற்கரை, பூங்கா, theatre, உணவகம் என்று எங்கே செல்வதையும் தவிர்த்து விடுவேன். எங்கு போனாலும் கூட்டம். Bike park பண்ணி எடுக்க முடியாது. Auto கிடைக்காது. பொது போக்குவரத்து பற்றி கேட்க வேண்டாம். இதையே திங்கள் மாலையோ, புதன் மாலையோ செய்தால் எந்த இடையூறும் இன்றி எளிதாக செய்து விடலாம். சந்தேகம் என்றால் ஒரு செவ்வாய் மாலை உங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு கடற்கரை, பூங்கா என்று எங்காவது சென்று பாருங்கள். 


அது போல காய்கறி வாங்கவும் ஞாயிறு காலை 11 மணி அல்லது மதியம் 2 மணி வாக்கில் தான் செல்வேன். பையன் பிறப்பதற்கு முன் மனைவி காய்கறி பார்த்து வாங்கி விடுவார், நான் பையை சுமப்பேன். இப்போது 3 பேரும் கிளம்பி சென்று வந்தால் அரை நாள் ஆகும். அதுவும் பையனை வெயிலில் கூட்டி செல்ல முடியாது. மாலை தான் செல்ல முடியும். அதற்குள் காய்கறி கடைசி மிச்சம் தான் கிடைக்கும். அதனால் வெயில் என்று பாராமல் 11 மணிக்கு சென்று விடுவேன். 


17/12/2023 அன்று காய்கறி வாங்க கிளம்பும் போது மழை கொட்டியது. சரி மதியம் 2 மணிக்கு போவோம் என்று வீட்டில் இருந்து விட்டேன். மதியம் 2 மணிக்கும் மழை அடித்து விளாசியது. நாளைக்கு வாங்கிக்கொள்வோமா என்றேன். இருப்பதை வைத்து நாளை கூட சமாளிக்கலாம் என்று மறுமொழி கிடைத்தது. 


சரி ஒரு black teaய போடு என்று சொல்லி விட்டு ஜன்னலோரம் ஒரு Chairல் உட்கார்ந்து கொண்டு கால்களுக்கு ஒரு stoolஐ எடுத்துப்போட்டு நன்றாக நீட்டி உட்கார்ந்து கொண்டேன்.

The Element Chapter 1 - The Warning

The Element 


Chapter 1 - The Warning 


தூத்துக்குடியில் அந்த ஆலையை முடிய பிறகு நன்றாக மழை பெய்வதாக ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் 2015 சென்னை வெள்ளத்துக்கு பின் "Red Alert" "Orange Alert" போன்ற சொற்கள் மக்கள் மொழியில் பரவலாக பயன்படுத்தப் படுகின்றன. 


இந்த ஆன்டு நவம்பரில் கண மழை என்று ஒரு அறிவிப்பு. அன்று வெயில் வெளுத்து வாங்கியது. அதே போல இந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை மழை வெள்ளத்துக்கு பிறகு அதை விட பெரிதாக ஒன்று தூத்துக்குடிக்கு வரப்போகிறது என்று ஒரு வானிலை அறிக்கை. நவம்பர் 11, 2023 அன்று இரவு 9 மணிக்கு மேல் இந்த கண மழை அறிவிப்பை என்னிடம் தெரிவிக்க எனது நண்பரின் தந்தை தொலை பேசினார். 


நான் அதெல்லாம் வராது என்று விட்டேத்தியாக பதில் சொல்ல வேண்டாம் என்று சரி அப்பா வேணும்கிற பொருள் வாங்கி வச்சுட்டு வீட்டுல safeஅ இருந்துக்கிறோம்ன்னு சொல்லிட்டேன். 


அன்று மழை பெய்யவில்லை. மேக மூட்டம் மட்டும் தான். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அவரை நேரில் சந்தித்த போதும் அதை பற்றி வாய் திறக்கவில்லை. அவர் எனக்கு தகவல் சொன்னது நான் முன் தயரித்துக்கொள்ள தான். அதனால் நீங்கள் சொல்லி மழை வரலைன்னு சொன்னதாக இருக்க வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டேன். 


கண மழை எச்சரிக்கை அனைத்தையும் மறந்து 6 நாட்கள் ஆகியிருந்தது. 17ம் தேதி எழுந்து இன்று செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்று யோசித்துக்  கொண்டிருந்தேன். அந்த மழை  அன்று காலை தொடங்கியது.

Tuesday, 25 April 2023

The Banshees of Inisherin - Hell is Other People

உங்களிடம் எத்தனை பேரின் தொலைப்பேசி எண் உள்ளது? அதில் எத்தனை பேரை நீங்கள் கடந்த ஒரு வருடத்திற்குள் ஒரு முறையாவது அழைத்து பேசியுள்ளீர்கள்?

முகப்புத்தகத்தில் எத்தனை நண்பர்கள் உள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் உண்மையில் உங்கள் நண்பர்கள்?

Instagram, Twitter போன்ற தளங்களில் எத்தனை பேரை தொடர்கிறீர்கள்? எத்தனை பேர் உங்களை தொடர்கிறார்கள்?

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? எத்தனை பத்திரிக்கை அச்சடித்து உறவினர்களை அழைத்தீர்கள்?

தொழில்நுட்பம், வாகனத்தின் வேகம் என கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் நான் முன்னெப்போதை விடவும் மிகக்குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறோம் அல்லது புதிய நண்பர்களை சந்திக்கிறோம்.

இப்போது எந்த குழந்தைகள் தாத்தா - பாட்டி, மாமா - அத்தை, சித்தி - சித்தப்பா வீடுகளுக்கு விடுமுறைக்கு செல்கிறார்கள்?

கல்லூரி காலம் முடிந்து, வேலை அமைந்து, திருமணமும் ஆகிவிட்டால் நாம் தினம் ஒரு 100 மனிதர்களுக்குள்ளேயே புழங்க வேண்டியுள்ளது. தினம் புதியவர்களை சந்திக்கும் வாய்ப்போ, 5 வருடங்களுக்கு ஒரு முறை வேலை, ஊர் என அனைத்தையும் மாற்றிக்கொள்ளும் தைரியமோ அனைவருக்கும் வருவதில்லை.

நம் முன் உள்ள எண்ணற்ற சாத்தியங்களை சோதித்து பார்க்காமல் ஊர், குளம், கோத்திரம் என்று உட்கார்ந்து விடுகிறோம். அப்படி அமைந்த பின் அன்றாடம் உரையாடும் ஒரு நண்பர் உண்டு என்று கொள்வோம் அவர் ஒரு நாள் தீடீர் என்று "இன்றிலிருந்து என்னுடன் நீ பேச வேண்டாம், நீ என்னை பேசியே bore அடிக்கிறாய் எனக்கு அது பிடிக்கவில்லை" என்று சொல்கிறார் என்றால் நாம் அதை எப்படி எதிர்கொள்வோம்?

The Banshees of Inisherin படத்தின் ஆதார முரண் அல்லது மையம் இரு நண்பர்களிடைய உருவாகும் இந்த விரிசல் தான். Inisherin தீவில் வாழும் Colm மற்றும் Pádraic என்று இரண்டு நண்பர்கள். இந்த கற்பனை தீவு Ireland அருகில் உள்ளதாக படத்தில் வருகிறது.

இருவர் இடையே இருந்த நட்பை Colm தான் முறிக்கிறார். Colm வயதில் Padraicஐ விட வயதில் பெரியவர். நட்பை முறிப்பதற்கு அவர் சொல்லும் காரணம் அற்பமாக தோன்றும் ஆனாலும் அதன் தீவிரத்தை படம் செல்ல செல்ல அனைவரும் உணர்வோம்.

Padraic மாடுகள் வளர்க்கும் ஒரு விவசாயி, பால் வியாபாரம் செய்கிறான், திருமணம் செய்து கொள்ளவில்லை, அவனுக்கு உலகில் மீதமிருக்கும் ஒரே ரத்த உறவு அவனது சகோதரி மட்டுமே. அவளும் திருமணம் செய்து கொள்ளாததால் இருவரும் அவர்களது பூர்வீக வீட்டில் தான் வசிக்கிறார்கள். செல்லமாக ஒரு கழுதை வளர்க்கிறார்கள்.

Colm ஒரு இசைக்கலைஞன். Fiddle அவர் வாசிக்கும் இசைக்கருவி. அவர் Padraic உடனான நட்பு எந்த வகையிலும் ஒரு கலைஞனாக தனக்கு உதவ வில்லை என்று அறிந்து அவன் நட்பை புறக்கணித்து அந்த நேரத்தில் அழியா இசையை உருவாக்கம் செய்யப் போகிறேன் என்கிறார்.

Padraic இதை மிக புதிராக உணர்கிறான். அவனுக்கு பெரிய லட்சியங்களோ, கனவுகளோ, ஆசைகளோ இல்லை. கதை நடக்கும் காலம் 1923. 100 வருடங்களுக்கு முன்னர் கூட மிக நிதானமான வேகத்தில் இன்றைய பரபரப்பு எதுவும் இல்லாமல் வாழ்ந்த்திருக்கிறார்கள்.

Colm இனி தான் எத்தனை ஆண்டுகள் வாழ்வோம் என்று தெரியாது என்றும் அதனால் Padraic தன்னை தொந்திரவு செய்யாமல் விட்டு விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். Padraic உடன் செலவிடும் நேரம் வீண் என்றும் தான் காலம் தாண்டி நிற்கும் இசையை உருவாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

தீவில் உள்ள சில நூறு பேர் மத்தியில் அனைத்தும் காட்டு தீயென பற்றி விடுகிறது. இந்த  நட்பு முறிவு பேசு பொருளாகிறது.

Padraic தீவில் உள்ள மற்ற நண்பர்கள் மூலம் நிலைமையை சரி செய்ய முயல்கிறான் ஆனால் நிலைமை கையை மீறி செல்கிறது.

Colmன் தீவிரத்தன்மை கண்டு அனைவரும் கொஞ்சம் மிரண்டு போகிறார்கள். இந்த உச்ச நிலைக்கு Colmஐ தள்ளியது எது என்று குழம்புகிறார்கள்.

மிக குறைந்த உறவே மிக நல்ல உறவு என்று சொல்வார்கள். எந்த ஒரு உறவிலும் ஒருவர் எல்லை உணர்ந்தே பழக வேண்டும். ஒவ்வொரு நபரும் தனக்கான அந்தரங்க வாழ்க்கை உண்டு அதில் யாரையும் ஈடுபடுத்தக் கூடாது என்பதையும் உணர வேண்டும்.

மனிதன் இசை, ஓவியம், இலக்கியம் என்று பலவிதமாக வெளிப்படுவது அவனது தனிமையை வெல்ல தான். உடனிருக்கும் மனிதர்கள் உடனான உரையாடல் போதாமல் தான் அவன் புதிதாக படைக்க விழைகிறான். அத்தகைய படைப்பு மனம் கொண்ட ஒருவன் மிக சராசரியான ஒருவரை தொந்திரவாக கருத்தக்கூடும். இது அந்த சராசரி மனிதருக்கு புரியாமல் போகும் போது நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படம்.

படத்தில் உள்ள தீவிரத்தன்மைக்கு இணையாக தீவிரமான நகைச்சுவை பகுதியும் உள்ளது. Desperate Dark Comedy வகை.

உறவை வேண்டாம் என்று சொல்லும் மனிதர்களை போல புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யும் மனிதர்களும் அந்த தீவில் இருக்கிறார்கள். இந்த தீவை விட்டு வெளியேறாமல் வாழ்க்கை இல்லை என்று வெளியேறி செல்பவர்களும் இருக்கிறார்கள்.

மனிதர்களின் இருப்பிற்கு என்ன தேவை? எனும் கேள்வியை இந்த படம் எழுப்புகிறது. மனிதர்கள் எந்த அளவிற்கு வெளிப்படையாக இருக்கலாம்? எங்கே மனதில் உள்ளதை வெளியே சொல்லக்கூடாது என்று ஒரு simulator அனுபவத்தை அளிக்கிறது.

படம் நடக்கும் காலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை, இரு நண்பர்கள் வாழ்வில் உள்ள விலங்குகள், கதையில் வரும் மற்ற கதா பாத்திரங்கள் என்று அனைத்தும் மிக நுட்பமாக காட்சி படுத்தப்பட்டுள்ளன. பின்னணி இசை மிக சிறப்பாக அமைந்துள்ளது.

மனித வாழ்வின் முரண்களை திரைப்படமாக பார்க்க விரும்புபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமிது. மிக நிதானமாக தொடங்கி நம் மனதில் ஆழமாக செல்லக்கூடிய ஒரு கதை.  

Friday, 31 March 2023

நான், எனது மற்றும் என்னுடைய காலம். I, Me and Myself Times.

Narcissistic personality disorder is named for Narcissus, from Greek mythology, who fell in love with his own reflection. Freud used the term to describe persons who were self-absorbed, and psychoanalysts have focused on the narcissist's need to bolster his or her self-esteem through grandiose fantasy, exaggerated ambition, exhibitionism, and feelings of entitlement.
                     
                           ― Donald W. Black


வரலாற்றில் மனிதர்கள் எப்போதும் தங்களை பற்றி புறவயமாக இத்தனை அக்கறையோடு இது வரை இருந்ததில்லை. அது சுத்தம் பற்றிய அக்கறையோ, உடை, அணிகலன்கள் பற்றிய அக்கறையோ மட்டும் அல்ல. தன்னுடைய உருவம், நடை, உடை, பாவனை மற்ற மனிதர்களில் என்ன மாதிரியான உணர்வை உருவாக்க வேண்டும் என்பது வரை அந்த கவனம் நீள்கிறது. 

இணையம் வந்த பின்பு தன்னைத்தானே புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து நாம் தினம் சந்திக்க வாய்ப்பில்லாத உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முன் பின் தெரியாத ஆட்கள் வரை நம் இருப்பை தெரியவைத்துக்கொண்டிருக்கிறோம். முகப்புத்தகத்தில் "people you may know" sectionல் வரும் முகங்கள் நம்மில் எழுப்பும் முதல் எதிர்வினை என்ன? 

இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் சொந்த புகைப்பட கருவி, படச்சுருள் வாங்க பணம் இல்லாத பட்சத்தில் நீங்கள் ஒரு புகைப்பட நிலையத்திற்கு சென்று தான் எடுக்க வேண்டும். 

புகைப்படம் என்பது விழா நிகழ்ச்சிகள் அன்று எடுக்கப்பட்டு,  ஒரு தலைமுறை காலம் பாதுகாத்து, அவ்வப்போது எடுத்துப்பார்த்து, பழைய நினைவுகளில் மூழ்க வழிதரும் நினைவுச்சுரங்கமாக இருந்தது. இப்போது நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் 5 பேர் 5 கோணத்தில், 5 கருவிகளில் படம் பிடித்து எந்த ஒழுங்கும் இல்லாத புகைப்பட தொகுப்பே எஞ்சுகிறது. 

கைநிறைய இருக்கும் திறன் பேசி புகைப்படத்தை சல்லிசாக மாற்றி இருக்கிறது. நினைவுத்திறன் கொள்ளுமட்டும் புகைப்படம், காணொளி எடுக்கலாம், இணையத்தில் ஏற்றலாம், புகைப்படம் எடுத்த பின் மெருகேற்றலாம் இப்படி எண்ணிலடங்கா வசதிகள். 

இத்தனை புகைப்படம் எடுக்க கூடிய வசதி பல மனிதர்களை தங்களை தாங்களே காதலிக்க வைத்துள்ளது. ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் தங்கள் புகைப்படத்தை  மெருகேற்றுகிறேன் என்று  நாளெல்லாம் அதை பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் பலருக்கும் உருவாகியுள்ளது. 

ஒரு காலத்தில் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்கள் இப்போது புகைப்படமாக பார்க்கிறார்கள், பார்த்துவிட்டு போகட்டுமே என்று தோன்றலாம். அவர்கள் புகைப்படத்தை இணையத்தில் ஏற்றாத வரை அது அவரை தவிர யார் கண்ணிலும் படப்போவதில்லை தான். ஆனால் அவர்கள் நட்பு வட்டத்தில்  வந்து விட்ட காரணத்திற்காக நாம் எத்தனை முறை பார்க்க முடியும்?

அவர் Whatsappல் status வைப்பது முதல் facebook DP, Instagram DP வரை மாற்றி இணையத்தில் உலவும்  மனிதர்களின் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறார். அவருடைய முகம் சலிப்பாகும் போது அவரை பின்தொடர்வதை நிறுத்தி விடுவார்கள் அல்லது mute போட்டு விடுவார்கள். அவர் ஒரு கேலி சித்திரமாக மாறியது தெரியாமல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டே இருப்பார். 

புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்கிற மூடநம்பிக்கை எல்லாம் மறைந்து திருப்திகரமான புகைப்படம் வரும் வரை எடுத்து, அத்தகைய புகைப்படம் அமையாமல் அதனால் மனம் நொந்து போகும் மனநிலைக்கு ஆளாகும் முரணான காலத்தில் வாழ்கிறோம். 

தன்னை அறிதல் என்பது இவ்வுலகத்தில் நம் இருப்பிற்கான அர்த்தத்தை அறிவது தான். நாம் இங்கே ஆற்ற வேண்டிய செயல் என்ன என்று உணர்வது தான். அகவயமாக தன்னை அறிய இன்று பெரும்தடையாக இருப்பது புறவயமாக நாம் மற்ற மனிதர்களின் கண்ணில் எப்படி தெரிகிறோம் என்ற சிந்தனையை கைவிடமுடியாமல் இருப்பது தான். 

புகைப்படத்திற்கான எதிர்வினை, விருப்பக்குறிகள், அதனின் எண்ணிக்கை எல்லாம் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்கான சிரத்தையை அதிகரித்துள்ளது. சரியாக உறைந்த ஒரு நொடிப் பொழுதை படம்பிடிக்க கடிகாரம் பார்க்காமல் நேரத்தை செலவு செய்கிறார்கள். 

15 வருடங்களுக்கு முன் மதுரையை குலுங்க குலுங்க ஆட்சி செய்த அரசியல் பிரமுகரின் முகம் தாங்கிய பதாகையை நீங்கள் மதுரை எங்கும் காணலாம். அவரின் பிறந்த நாளின் போது உங்கள் முகம் உங்களுக்கு மறந்து போகும் அளவிற்கு அவருடைய முகத்தை பலவேறு பதாகைகளில் காண நேரிடும். 

அவரின் முகத்தை அச்சடித்து பணக்காரர்கள் ஆன அச்சக உரிமையாளர்கள் உண்டு. மனிதர்களிடம் உள்ள சுயமோகம் இதை எல்லாம் உள்ளூர ரசிக்கிறது. "பார் என் முகத்தை! என்னை தெரியாதவர்கள் இந்த ஊரில் இல்லை. நான் ஆண்டவனுக்கு நிகரானவன்." என்று தம்பட்டம் அடிக்கிறது. 

இந்த பதாகையை வைப்பவர்கள் தங்களுடைய புகைப்படத்தை ஒரு ஓரமாக போட்டுக்கொள்வார்கள். அல்லது பெயரையாவது போட்டுக்கொள்வார்கள். இவர்களுக்கு புகைப்படத்தில் இருக்கும் அந்த பெரிய உருவம் ஒரு பொருட்டே அல்ல. இவர்களின் உளவியல் அந்த புகைப்படத்தில் தன்னையே காணும். 

பெரிய உருவமாக பதாகையில் இடம் பிடித்து கொண்டிருப்பவர்கள் காலம் சென்ற பிறகு வைக்கப்படும் பதாகையில் வலது அல்லது இடது மூலையில் தபால் தலை அளவு புகைப்படமாக சுருங்கி விடுவார்கள். அவர்களுடைய அரசியல் வாரிசோ, ரத்தத்தின் ரத்தமோ அந்த இடத்தை எடுத்துக்கொண்டு விடும். இது ஒரு சுழற்சி. 

தன்னுடைய காலத்திற்கு பின் வரும் மனிதர்களின் மனதில் ஒரு தொன்மமாக எஞ்ச வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனில் இருக்கும் அந்தரங்க ஆசைகளில் ஒன்று. அந்த ஆசை செயலால் ஈடு செய்யப்படவில்லை என்றால் அந்த மனிதர் பகடிப் பொருளாகவே மதிப்பிடப்படுவார். 

கொஞ்சம் அதிகாரம், பண பலம் உள்ள, சுயமோகம் (narcissism) கொண்ட மனிதர்கள் தங்களை எப்போதும் வரலாறு சமைப்பவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். அது பெரும்பாலும் அவர்களை ஒரு megalomaniac ஆக மாற்றி விடுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் Donald Trump ஒரு சுயமோகம் கொண்ட Megalomaniac. இப்போது இந்த வார்த்தைக்கு உதாரணமாக வாழும் ஒரு உள் நாட்டு அரசியல் வாதி ஒருவர் உங்கள் நினைவுக்கு வந்திருப்பார். 

The megalomaniac differs from the narcissist by the fact that he wishes to be powerful rather than charming, and seeks to be feared rather than loved. To this type belong many lunatics and most of the great men of history.

                             - Bertrand Russell

இத்தகைய தலைவர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் தங்களையே முன் வைக்கிறார்கள். கொள்கை, திட்டம், செயல், மக்கள் நலன் எல்லாம் இரண்டாவது தான். இவர்கள் முகங்கள் ரட்சிக்க வந்த மாமனிதன் என்பதாக ஊடகங்கள் வழி நமக்கு காட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

இவர்கள் பல "வேடிக்கை மனிதர்களை" தங்கள் பால் ஈர்த்து விடுகிறார்கள். மக்கள் இத்தகைய தனி மனித வழிபாட்டு மனநிலையால் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். 
இந்த வேடிக்கைகைக்கு விழாத கேளிக்கை மனிதர்கள் புகைப்படம் முதல் 15 நொடி காணொளி வரை தங்களை பல விதமாக வெளிப்படுத்தி இணையத்தில் ஏற்றுகிறார்கள். அவர்களை போன்ற பிற கேளிக்கை மனிதர்கள் அவர்களை ரசிக்கிறார்கள். 

இப்படி தங்களை தாங்களே பிரதி எடுத்து பார்த்துக்கொள்ளும் மனிதர்கள், சீமான் குரலுக்கு ஆவேசமாக Tik Tok, Insta Reelsல் போல நடிக்கும் நபர்கள் இயல்பில் அதிகமான கூச்ச சுபாவமும், யாரையும் கண் பார்த்து பேச முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த புதிய காட்சி & கண்ணொளி மட்டும் ஊடகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஒரு தற்காலிக விடுதலையை அளிக்கிறது. அவர்களும் சன்னதம் வந்து ஆடுகிறார்கள்,  ஆனால் சன்னதம் இறங்கிய பின் அன்றாட கடமைகளை சரியாக கடைபிடிக்க முடியாத மனிதர்களாகவும் இருக்கிறார்கள். 

இப்படி தன்னோடு புறவயமாக நான், எனது மற்றும் என்னுடைய எனும் தன்முனைப்பில் நேரத்தை வீணடிப்பதால் ஆளுமை உருவாக்கம் நடக்காமல் போய்விடுகிறது. இதில் பிரபலமாகும் சிலர் இதன் வழி வருமானம் தேடிக்கொள்கிறார்கள். மற்றவர்கள் 'If you are not paying for it, you're not the customer; you're the product being sold.” என்ற உண்மையை உணர முடியாதவர்கள் அல்லது மறுக்கிறார்கள். 

புறவயமாக தங்களுடைய அகங்காரம் (ego) திருப்தி அடைய உழைத்து தன்னுடைய மனதில் உள்ள லட்சிய உருவத்தை ஒருவர் அடைந்து விடக்கூடும்.  இந்த முயற்சியில் உள்நோக்கி பார்க்கும் பழக்கம் அற்றுப் போவதால் உள்ளம் வளர்வது நின்று விடுகிறது. அகம்-புறம் சமநிலை பேணாத இத்தகைய மனிதர்கள் அதிகரிப்பது சமூக மற்றும் பொது வாழ்க்கையை சிக்கல் மிகுந்ததாக மாற்றி க்கொண்டிருக்கிறது. 

***

Saturday, 25 March 2023

15 நொடி முடிவிலி. 15 Second Infinity.

“In the future, everyone will be world-famous for 15 minutes.”
- Andy Warhol (He said that in the Year 1968)

மனிதன் பணம், அதிகாரம் தவிர்த்து ஒன்றை அடைய பெரும்பாடு படுகிறான் என்றால் அது இறவாப்புகழுக்காக தான். அது மனிதராக பிறப்பவரில் வெகு சிலருக்கே அருளப்படுகிறது. புகழை அடைந்து அதை தக்க வைக்க முடியாமல் போவது போன்ற  துயரம் வேறில்லை. 

இறவாப்புகழ் என்பது தன் காலம் தாண்டியும் மக்கள் மனதில் நிலைத்திருப்பது. மக்களின் அன்றாட பேச்சில் தவிர்க்க முடியாத படிமங்களை உருவாக்கியிருப்பது. கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள், பாரதி போன்ற பெரும்கவிஞர்களுக்கு தான் அது சாத்தியம் ஆகியிருக்கிறது.  

பாரதி இறந்த அன்று அவருடைய ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 8 பேர். பாரதி காலத்தில் பிரபலமாக வாழ்ந்த பலர் இன்று வெறும் பெயர் மட்டுமே. வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு. 
ஆனால் இன்று பாரதி தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத அடையாளம். அவர் எழுதிய வரிகளில் இருந்து தான் ஒரு இனமாக நமது கனவுகள், லட்சியங்கள் எழுகின்றன. 

பாரதி எந்த அங்கீகாரமும் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து விட்டு சென்றுவிட்டார். பிரபலம் ஆவதற்கு மெனக்கிடவில்லை. கவிதை அவரது தொழில் என்று சொல்லிவிட்டு அதன் படியே வாழ்ந்து மறைந்தார். நாம் பின்னோக்கி பார்த்து அவரின் பங்களிப்பின் இன்றியமையாத தன்மையை புரிந்து கொள்கிறோம். அவரை கொண்டாடுகிறோம். 

21ம் நூற்றாண்டில் மனிதராக பிறந்த அனைவரும் இறவாப்புகழை அடையாவிட்டாலும் 15 நொடி பிரபலமாக வலம் வருவதற்கான வாய்ப்பை இணையம் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. 15 நிமிடங்கள் அல்ல 15 நொடி. 

பிரபலம் என்பது ஈசலின் ஆயுளை விட குறைவான ஆயுளை கொண்டது என்பதை அந்த 15 நொடி பிரபலங்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதி தன்னுடைய கடிதம் வெளியிடப்பட்டால் அதைக்கண்டு புளங்காகிதம் அடைந்தவர்கள் தான் நாம். திருமண பத்திரிக்கையில் பெயர் போடவில்லை என்று சண்டையிட்டவர்கள் தனி ரகம். 

பின்னர் அது தொலைக்காட்சியில் தோன்றுவதாக பரிணமித்தித் தது. இன்று நிறுவன ஊடகங்கள் யாருக்கும் தேவை இல்லை. சமூக ஊடகங்கள் வழி தன்னை பிரபலப்படுத்தி கொள்ளும் வழி ஒன்று திறந்திருக்கிறது. கையில் திறன் பேசியும், பிரபலம் ஆகும் எண்ணமும் உள்ள அனைவரும் அங்கே வந்து கடை திறக்கின்றனர். 

இணைய, சமூக ஊடகங்கள் வழி பிரபலம் ஆகும் சிலரை தொலைக்காட்சி, சினிமாக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மாநிலம் அறிந்த முகமாகும் வாய்ப்பு கிடைக்கிறது. 

இந்த இணைய பிரபலங்கள் அப்படி என்ன செய்கிறார்கள்? 2வது முறை அல்ல முதல் முறையே முழுதாக பார்க்க தகுதியில்லாத தமிழ் சினிமாவிற்கு விமர்சனம் செய்கிறார்கள், ஏற்கனவே உள்ள சினிமா பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள், wiki pedia வில் உள்ளதை படித்து விட்டு Oxford சென்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த உண்மை என்பது போல பேசுகிறார்கள்.

ஊரில் எங்கே சாப்பாடு கடை திறந்தாலும் போய் தின்று விட்டு ஆகா என்கிறார்கள். Below the belt joke சொல்லி சிரிக்க வைக்கிறார்கள். சுருக்கமாக தன்னுடைய மூடத்தனத்தை கேளிக்கையாக சமூக ஊடகங்களில் பரப்பி தினமும் என்னை கவனி என்கிறார்கள். 

இணையம் வந்த பிறகு நம்முடைய நேரம் நிறைய மிச்சம் ஆகியிருக்கிறது. அப்படி மிச்சம் ஆன நேரம் அனைத்தையும் இணையமே எடுத்துக்கொள்கிறது. விளைவாக நாளின் இறுதியில் எதையுமே உருப்படியாக செய்யாத உணர்வுக்கு ஆளாகிறோம். 

சமூக ஊடகங்களால் எப்படி நம் சமூக வாழ்க்கை மேம்பட்டு விடவில்லையோ அதே போல அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதால் குறைந்தும் போகப்போவதில்லை. 

நம் திறன் பேசியில் இருக்கும் எண்ணற்ற செயலிகள் நம்முடைய கவனத்தை கோரிக்கொண்டே இருக்கின்றன. அதை நாம் ஒவ்வொரு முறை கையில் எடுக்கும் போதும் என்ன காரணத்துக்காக எடுத்தோம் என்பது மறந்து போகும் அளவுக்கு அது நம் கவனத்தை சிதறடித்து கொண்டிருக்கிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் திறன் பேசி பயன்படுத்தும் அனைவரும் இந்த 15 நொடி முடிவிலியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என்று இணையத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்.  இதிலிருந்து வெளியேறும் வழியும் யாருக்கும் புலப்படவில்லை. 

இந்த முடிவிலியில் சிக்கிக்கொண்டதால் நாம் இழப்பது என்ன? 

முதலாவதாக நம்மால் கேளிக்கையை கூட கவனச்சிதறல் இல்லாமல் அனுபவிக்க முடிவதில்லை. திரைப்படத்திற்கு போனால் கூட அதை அனுபவித்து பார்க்காமல், படம் பார்க்க போனதை இணையத்தில் அறிவித்து கொண்டே இருக்கிறோம். அந்த அறிவிப்புக்கு வந்த எதிர்வினை என்ன என்று 5 நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொள்கிறோம்.

செய்தித்தாள் படிப்பதை விட்டுவிட்டோம். உருப்படியான விவாதம் எதுவும் நிகழாமல் அனைத்தும் 15 நொடி காணொளியாக, meme ஆக சுருங்கிக்கொண்டிருக்கிறது. வாரப்பத்திரிக்கைகள் எந்நேரமும் நிறுத்தப்படலாம் என்கிற அளவிலேயே வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

சினிமா பாடலை கூட முழுதாக கேட்பது இல்லை. அடுத்து அடுத்து என்று தாவி செல்கிறோம். Fear of Missing Out Factor நம்மை இணையத்தில் கட்டிப் போடுகிறது. நம்மை விட்டு விட்டு உலகத்தில் முக்கியமான ஏதோ ஒன்று நடந்து விடும் என்பது போல் நாமும் "stay connected" ஆக இருக்கிறோம்.  

செவ்வியல் இலக்கியம் அல்ல செவ்வியல் சினிமாவை பார்ப்பதற்கே இன்று ஆட்கள் இல்லை. இந்த கவனச்சிதறலை வென்று ஒரு இயக்குனரின் அனைத்து படங்களையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட Genre ல் உள்ள classic படங்களையோ பார்க்கும் திறன் உள்ளவர்களை காண்பது அரிதாகி வருகிறது. 15 நொடிகளாக நாளுக்கு 5 மணி நேரத்தை இணையத்தில் செலவு செய்பவர்களால் ஒரு 3 மணி நேர சினிமாவை பார்க்க முடியவில்லை. 

இணையத்தில் மாய்ந்து மாய்ந்து வாசிப்பவர்கள் fragmented reading, cursory reading வழி ஒரு fragmented personality ஆகி விடுகிறார்கள். அவர்கள் வாசித்த தகவல்களை கொண்டு ஒரு தர்க்கத்தை உருவாக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். நிறைய வாசித்து எதுவும் எஞ்சாமல் ஆகி விடுகிறது. 

இதற்கான மாற்று 24 மணி நேர இணையம் கிடைப்பதற்கு முன்னால் நம்முடைய நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்தோம் என்று யோசிப்பது தான். பதின் பருவத்தினராக நம்முடைய "hobby" என்னவாக இருந்தது என்று நினைவுறுத்திக்கொள்வது தான். அதில் மீண்டும் ஈடுபட முடியுமா என்று பார்க்கலாம்.

அதை கடந்து வந்து விட்டவர்கள் அவரவர் தேர்வுக்கு ஏற்ப ஒரு துறையை கண்டடைந்து, அது குறித்து கற்று, அறிந்து கொள்வதில் நேரத்தை செலவிடலாம். மனதை ஓரிடத்தில் குவிய வைக்கும் செயல்களில் ஈடுபட முடியாதவர்கள் "பல வேடிக்கை மனிதர்களாக" மாறி குடி, போலி ஆன்மீகவாதிகள், அதீத அரசியல் நிலைப்பாடு என்று எங்காவது போய் அடைக்கலம் ஆகிவிடுகிறார்கள். 

***