Thursday 28 December 2023

The Element. Chapter 13 - The Unperturbed

The Element


Chapter 13 - The Unperturbed


நாங்கள் இந்த சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது குறித்து கொஞ்சம் கூட பதடப்படாத, நிதானத்தை இழக்காத, இதிலிருந்து மீண்டுவிடுவோம் என்று அறிந்த ஒரு நபர் என் அப்பா தான். 


சின்ன பையனை வச்சிக்கிட்டு ரெண்டு பேரும் கஷ்டப்படப்போறாங்க எப்படியாவது போய் கூட்டிட்டு வாங்க என்று என் அம்மா பயந்த போது, முதல் மாடில வீடு, தண்ணி அது வரை உயரலை, 2 நாளைக்கு சமாளிக்க காய்கறி, மளிகை இல்லாமலா இருப்பான்? பாத்துக்கிடலாம் என்று சொல்லி விட்டார். 


எனக்கு 8 வயதிற்கு முன்பே நீச்சல் அடிக்க சொல்லி கொடுத்து அதில் நான் தேரிய பின் முதலில் சொன்ன விஷயம் தெரிஞ்ச ஊரில் பேய்க்கு பயப்படணும், தெரியாத ஊரில் தண்ணிக்கு பயப்படணும் என்பது தான். 


நான் பேய்க்கு பயப்படுறேனோ இல்லையோ, நாய்களுக்கு பயப்படுகிறேன். அது போல நீரில் சிக்கியயவரை காப்பாற்றும் போது பின்னால் இருந்து தலைமுடியை பிடித்து தான் இழுக்க வேண்டும் என்று சொன்னார். 


பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை swimming poolல் நண்பன் ஒருவன் பரிதவிக்க நான் தண்ணீரில் குதித்து அவனை கைப்பிடியை நோக்கி தள்ள முயற்சித்தேன். அவன் என்னை பிடித்து அமுக்கி விட்டான். நான் அவன் பிடியிலிருந்து நழுவி கீழே ஆழத்துக்கு சென்று அவனுக்கு பின்னால் வழியாக மேலே வந்து முதுகை பிடித்து முன்னால் தள்ளினேன். அதற்குள் மேலே இருந்த ஒரு நண்பன் கையை நீட்ட அவன் கையை இவன் பற்றிக்கொண்டு கரை ஏறினான். 


அதன் பின்னர் பல வருடங்களுக்கு பிறகு ஆற்றில் குளிக்கும் போது கண நொடியில் அடித்துச்செல்லப்படுவதில் இருந்து தப்பித்தேன். அன்றிரவு படுக்கையில் விழுந்து கண்ணை மூடியவுடன் நீரில் அடித்து இழுத்து செல்லப்படும் உணர்வு எழுந்தது. 3 நாட்கள் கழித்தே உடலும் மனமும் அதை மறந்தது.  


அதன் பின்னர் தண்ணீருக்கு பயப்படுகிறேன். தூத்துக்குடியில் இது வரை ஒரு முறை கூட கடல் நீரில் கால் வைத்தது இல்லை. இந்த வெள்ள நீரை சோதித்து பார்க்க மாட்டேன் என்பதை என் அப்பா உள்ளூர அறிந்திருப்பார். 


நான் desktop upsல் 10 நிமிடம் charge போட்டு phoneஐ எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று அப்பாவிற்கு call செய்தேன். பல முயற்சிகளுக்கு பிறகு connect ஆகி பல முறை இணைப்பு துண்டிக்கப்பட்டது. Private Network bestன்னு சொன்னாங்க இங்க ஒரு phone கூட போக மாட்டேங்கு என்று cell phoneல் tower காட்டுகிறதா இல்லையா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். 


BSNL சுத்தமாக அடி வாங்கிவிட்டது. Powerbank வாங்காமல் அதற்கு பதிலாக ஒரு basic model phone வாங்கி அதில் back up ஆக BSNL number போட்டு வைத்திருந்தேன் அதுவும் கைகொடுகவில்லை. 


நிலைமை தீவிரம் ஆவதாக உணர்ந்தேன். Phoneல் charge தீருவதற்குள் current வருமா என்று தெரியாது. Phone இல்லாமல் யாரிடம் எப்படி தொடர்பு கொண்டு உதவி கேட்பது? 


உள்ளிருந்து வெளியேயும் வெளியே இருந்து உள்ளேயும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையில் நமக்கு உதவி தேவை, சிக்கலில் இருக்கிறோம் என்பதை எப்படி வெளியே சொல்வது? Internet இருந்தால் whatsappல் " Save Us" என்று status வைக்கலாம். மின்சாரம், இணையம் இல்லாமல் 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்ட உணர்வை தந்த இந்த மழை நாட்களில் எப்படி நாம் இருக்கிறோம் என்பதை உலகுக்கு தெரிவிப்பது? 


19ம் தேதி கடைசியாக call connect ஆன போது phoneல charge எவ்வளவு நேரம் இருக்கும், இனி எப்போ signal கிடைக்கும்னு தெரியலை. என்கிட்ட இருந்து phone வருதோ இல்லையோ 21ம் தேதி சாயங்காலம் ஒரு Bolero இல்ல Sumo யாருகிட்டையாவது சொல்லி கொண்டு வந்திருங்க, இங்க இருந்து கிளம்பிடலாம் என்று சொல்லி முடிக்கும் போது call disconnect ஆகிவிட்டது. 

No comments:

Post a Comment