Saturday, 30 July 2016

எங்கே எனது இடம்?!!


'திரைகடல் ஓடியும் திரவியம் தேட' வேண்டிய 24 வயதில் வீடு திரும்புவது என்று முடிவு எடுத்த போது அது மிக சரியான முடிவு என்று ஒரு உள்ளுணர்வு. 4 வருடங்களுக்கு பின்னர் அந்த முடிவு சரிதானா என்ற குழப்பம் என்னை ஆட்டுவிக்கிறது.

Hostel, வேலை செய்யும் போது தங்கிய இடங்களில் தான் மிக்க மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்தால் என்ன குறைந்து விடுவோம்?! என்றும், நம்ம சொந்த ஊரில் இருப்பவன் எல்லாம் மனுசன் இல்லையா?!, எதுக்கு வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியை வாடகைக்கு குடுக்க வேண்டும்?! என்று யோசித்து வீட்டுக்கு வந்து விட்டேன்.

இப்பொது சொந்த ஊரில் நண்பர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை. எல்லோரும் பொருள் தேடி பறந்து கொண்டிருக்கின்றனர். தீபாவளி, பொங்கல் என்று ஓரிரு நாள் வந்து விட்டு திரும்பி விடுகிறார்கள்.

கல்லூரி படிக்கும் போது நண்பர்கள் வீட்டில் அமர்ந்து மணிக்கணக்காக அரட்டை அடித்து மகிழ்ந்து இருந்தோம். இப்போது நண்பர்களின் வீட்டிற்கு போனால் அவர்களின் அம்மா, அப்பா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிவதில்லை.

 'தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா?', 'உனக்கு இப்போ சம்பளம் எவ்ளோ தாராங்க?', 'வேற வேலைக்கு முயற்சி பண்ணலையா?', 'சென்னை, கோவைன்னு வேலைக்கு try பண்ண வேண்டியது தான?' 'Professor வேலைக்கு 30 லட்சம் கேக்குறானமே?', இது எல்லாம் தெரிந்த பிறகு இறுதி கேள்வி 'உனக்கு கல்யாணம் எப்போ?'

இப்படி கேள்விகளுக்கு பெரும்பாலும் 'ஆமாம்', 'ஹா ஹா,' என்று சிரித்து சமாளித்து விட்டு வர வேண்டி இருக்கும். கல்யாணத்தை பத்தி கேட்பவர்கள் ஒரு 20 லட்சம் பணம் குடுத்து முதலில் வேலை ஒன்றை விலைக்கு வாங்க உதவினால் நல்லா இருக்கும். இவிங்க கேக்குறாங்க அப்டின்னு கல்யாணம் பண்ணா அப்புறம் நம்ம லட்சியம் என்ன ஆகுறது?!:-D

பணம் சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தண்ணி அடித்து கொண்டு பேசுவது தான் நல்லா இருக்கும் என்று bar பக்கம் வண்டியை விடுகின்றனர். என்னை போன்ற பச்சை மண்ணுகளெல்லாம் என்ன செய்வதென்று அறியாது விழி பிதுங்கி நிற்கிறோம்!!!

மெட்ராஸ், பெங்களூரு, கோவை, மதுரை போன்ற பெரிய ஊர்களில்,  கடற்கரை, பூங்கா, Mall என்று பொது இடங்கள் நிறைய இருக்கும். அங்கே உலாத்தி கொண்டே கதைக்கலாம். ஆனால் கோவில்பட்டி மாதிரி ஒரு ஊரில் பொது வெளி என்பதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருக்கும் ஒரு பூங்காவிலும் பாம்புகள் குடியேறி இருக்கும். பெருசுகள் கூடி காரசாரமாக மாலைமுரசு, தினத்தந்தி என்று அரசியல் பேசிக்கொண்டு இருபார்கள்.

கோவில்களில் உண்டியல்களின் எண்ணிக்கை தான் அதிகம் இருக்கிறது. சாமியை தேடத்தான் வேண்டும். இதையும் மீறிய பொது வெளி என்பது 'நவீன பார் வசதி' கொண்ட 'TASMAC' தான். சந்தேகம் இருந்தால் சாயங்காலம் உங்கள் ஊரை கிரிவலம் வாருங்கள். வண்டிகள் எங்கெங்கே அதிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று கவனியுங்கள்.

உறவினர் வீடுகளுக்கு போனாலும் இடைவிடாமல் தொலைக்காட்சி கதறிக்கொண்டிருக்கும். நல்ல நாள் அதுவுமா எல்லா வீட்டிலும் எல்லா பயபுள்ளைகளும் டிவியே கதின்னு தான் கிடக்கிறார்கள்.

படித்த கல்லூரிக்கு போலாம்னா அவிங்க வாசல்ல நிறுத்தி ஆயிரம் கேள்வி கேக்குறாய்ங்க. Alumni meet இருக்கு வான்னு கூப்பிடுவாங்க. வடிவேலுவ ஒரு பொடியன் திட்டி ஓட விட்டு kidneyய எடுத்திட்டு விட்டது கண் முன்னாடி வந்து போகும். பள்ளிக்கூடம் பக்கம் போனால் உடனே donation குடுங்க என்று ஓடி வருவார்கள்.

நண்பனுக்கு கல்யாணம் என்று நண்பர்கள் ஒண்ணு கூடினாலும் முதல் நாள் தண்ணி போட்டு விட்டு ஒரு அணி மல்லாந்து விடும். மண்டபத்தில் loud speaker கதறும். அட அமத்தி போடுங்கன்னா கேக்க மாட்டாய்ங்க. இதுக்கு மேல photo எடுத்து, Selfie எடுத்து FB, Whatsapp group என்று பதிவேற்றுவதில் நேரம் போகும்.

அட படிக்கும் போது அர்த்தமே இல்லாம பேசி அரட்டை அடிச்ச மாதிரி இனிமே நடக்காது போல அப்டின்னு நினைச்சுகிட்டு வீட்டுக்கு கிளம்பிட வேண்டியது தான்.

வீட்டுக்கு வந்தா டிவில அன்னைக்கு பரபரப்பான விசயம், அப்டி எதுவும் இல்லாட்டினாலும் இவிங்களே பரபரப்பா ஆக்கி ஊளை விட்டு, பாருங்க மக்களே பாருங்க என்று ஒப்பாரி வைத்து கொண்டு இருப்பார்கள்.

இந்த டிவிஇறைச்சல் இல்லாம இருக்கிற வீடு எங்கையாவது இருக்கா?!! அப்டி இருந்தா அந்த வீடு வேண்டாம் அது பக்கத்துல உள்ள வீடு வாடகைக்கு கிடைச்சா போதும்.

வேலை பாக்குற இடத்தில தினமும் சொம்பைகளை சமாளித்து விட்டு வீட்டுக்கு வந்தால் டிவியில் வரும் பைத்தியங்கள் போலியாக வியந்து, சிரித்து, கோபப்பட்டு, நெகிழ்ந்து என்று வெறுப்பு ஏத்துவார்கள்.

எதனால தமிழ் சமூகம் இப்படி இறைச்சல் மிகுந்த சமூகமா இருக்கு?!

இதிலிருந்து எப்படி தப்பிப்பது?!!

எதிர்பார்க்கும் அமைதி வீட்டில் இல்லாவிட்டால் வேறு எங்கே போவது?!

ஜெயகாந்தன் எழுதின ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் படித்தது இல்லை ஆனா தலைப்பு மட்டுமே போதுமானதா இருக்கு. இந்த வீட்டிற்குள் உள்ள உலகம் நம் விருப்பப்படி, கனவுப்படி இல்லை என்று தெரிந்த பிறகு வீடு அந்நியமாக ஆகி விடுகிறது.

கூட்டுக்குடும்பம் என்கிற கோட்பாடு, வாழ்க்கை முறை விவசாயம், தொழில் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏதாவது பொறுப்பு இருந்த போது செல்லுபடி ஆகி இருக்கலாம். அங்கே தனி மனிதன் என்பது இல்லை. குடும்பமாக இணைந்து தான் அனைத்தையும் செய்ய முடியும்.

ஆனால் இந்த 21ம் நூற்றாண்டில்... தனி மனிதன், அவனுடைய கொள்கைகள், லட்சியம், கனவு என்று திட்டமிடும் போது அது இயல்பாகவே குடும்பத்தில் முரண் பாடுகளை கொண்டு வருகிறது. கனவு கண்ட படி வாழ்க்கை வாழ சூழ்நிலை இடம் குடுக்க மறுக்கும் போது சமரசம் கசப்புகளை அளித்து வெறுமையால் உள்ளத்தை நிறப்புகிறது. பின்னர் கூட்டு குடும்பம் என்ன?! கணவன் மனைவி என்று சேர்ந்து வாழ்வதே பெரும்பாடாகி விடுகிறது.

இங்கே கனவு என்பது சிகப்பான மனைவி, குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட வீடு, கார் என்று செட்டில் ஆவது அல்ல.

எனக்கே எனக்கு என்று ஒரு அமைதியான இடம்!!! பக்கத்து வீட்டு டிவி சத்தம் கேக்காத, கோவில் திருவிழான்னு loud speaker கத்தாத, எனக்கு ஓட்டு போடுங்கன்னு சத்தமா பிச்சை கேக்காத, roadல போறவன் வாறவன் சும்மா horn அடிக்காத, பக்கத்துல நாலு மரம், செடின்னு உள்ள ஒரு அமைதியான இடம்.

நண்பர்கள் வந்தால் அமர்ந்து கதைப்பதற்கு, புத்தகம் படிப்பதற்கு, நல்ல திரைப்படத்தை பார்ப்பதற்கு, மென்மையான பாட்டு கேட்பதற்கு, நிம்மதியாக உறங்குவதற்கு, கொஞ்சம் சிந்திப்பதற்கு, கொஞ்சம் எழுதுவதற்கு, இதுக்கெல்லாம் ஒரு இடம்.

நான் கேட்பது அதிகப்பிரசங்கிதனமா இருக்கா?!

இந்த 21ம் நூற்றாண்டுல கூட ஒரு அமைதியான இடத்தை உருவாக்க வாய்ப்பு இல்லையா என்ன?!

எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும் என்று தாயுமானவர் சொன்னதாக ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, மற்றும் கடலுக்கு அப்பால் நாவலில் வரும் கதா பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன, அது உண்மை தான?!!

கீழ உள்ள மூணு வரி கவிதை மாதிரி தெரியுதா??!! நானே எழுதினேன். :-)

வழி தவறிய எறும்பை போல
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கே என் இடம் என்று!

பி.கு.

தேடுபவன் கண்டடைவான் அப்டின்னு ஜெயமோகன் சொல்லி இருக்கார்.

நல்லா படிங்க...

ஜெயகாந்தன் இல்ல ஜெயமோகன்... ;-)















Sunday, 17 July 2016

கடிதம் எழுதுவது எப்படி?!





இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. படித்து மனம் புண்பட்டால் எழுதியவர் பொறுப்பு அல்ல. கட்டுரை பிடித்திருந்தால் தாராளமாக பாராட்டலாம். காசு, பணம் குடுத்தாலும் சந்தோசம் தான். ;-) :-D :-P

'காதல் கடிதம் எழுதுவது எப்படி?!' அப்டின்னு தான் தலைப்பு வச்சேன். அப்புறம் Professor ஒருத்தன் Love Letter எழுத மாணவர்களுக்கு சொல்லிக்குடுக்கிறான்னு கலாச்சார காவலர்கள் கிளம்பி வந்து விடுவார்கள் என்று தான் தலைப்பை மாத்தி விட்டேன்.

இந்த கலாச்சார காவலர் புண்ணாக்குகள் தலைப்பை தாண்டி படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்.

எனக்கு 28 வயசு ஆச்சு.

இது வரை ஒருத்தருக்கு கூட காதல் கடிதம் என்ன, கடிதமே எழுதியது இல்லை.

பள்ளிகளில் கற்பனையில் உதித்த நண்பர்களுக்கு, சுற்றுலா குறித்து, கோடை விடுமுறை குறித்து கடிதம் எழுத சொல்லி பயிற்சி கொடுப்பார்கள். தேர்வில் எழுதி தேறுவதற்கு.

அப்புறம் விடுமுறை கேட்டு விண்ணப்பம், Englishல என்னன்னு கேட்கவா வேணும்?!?!

Email id தொடங்கிய பின்னர், எனது Professor ஒருவருக்கு அவ்வப்போது mail அனுப்பிக்கொண்டிருந்தேன். FB வந்த பிறகு அதிலே message அனுப்பி கேட்டு கொள்வது.

பள்ளியில் இருக்கும் போது வீட்டுக்கு எழுதுவது போல சொல்லி தந்த கடிதம் பெரும்பாலும் சுற்றுலா செல்வதற்கு பணம் கேட்டு எழுதியதாகவே இருக்கும்.

கல்லூரி சென்ற பிறகு free sms அப்புறம் காசு குடுத்து sms என்று காலம் ஓடியது. கடிதம் எழுத வேண்டிய தேவையே இல்லை.

சூழல் இப்படி இருக்கும் போது காதல் கடிதம் எழுத வேண்டிய தேவை என்ன?!!

அதற்கான பொறுமை யாருக்கு இருக்கிறது?!!

காதலிப்பவர்கள் மட்டும் அல்ல, கணவன்-மனைவி, பெற்றோர், பிள்ளைகள் என கொஞ்சம், இல்லை இல்லை ஒரு 15 முதல் 20 வருடத்துக்கு முன்பு வரை எல்லாரும் கடிதம் எழுதி கொண்டு தானே இருந்தோம்.

இந்த Whatsapp Instant Messenger யுகத்தில், யுவனும், யுவதியும் Smiley அனுப்பியே பேசி முடித்து விடுகிறார்கள்.

Phone பேசும் போது அப்புறம் அப்புறம் என்று பேச விசயமில்லாமல் முழிக்கிறார்கள்.

கடிதம் கொஞ்ச நேரம் எடுத்து பொறுமையாக எழுதி, அதை அனுப்பி அதற்கான பதிலுக்கு காத்திருப்பது என்பது ஒரு மாதிரி கலவையான உணர்ச்சி தான்.

நீங்கள் 5 பக்கம் உங்கள் மனதில் உள்ளதை கொட்டி காதல் கடிதம் எழுதி அதற்கு வெறும் K என்று பதில் வந்தால் அப்படி பையனையோ, பெண்ணை கண்டிப்பா காதலிக்கணுமா என்ன?!!

30, 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை முன்வைக்கும் ஒரேயொரு கேள்வி பொண்ணுக்கு எழுத படிக்க தெரியுமா என்பதாக தான் இருந்திருக்க வேண்டும்.

Land Line Phone கூட ஊருக்கு ஒன்று என்று இருந்த அந்த காலத்தில், வெளியூரில் வேலையில் இருக்கும் கணவர் மனைவியுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது கடிதம் மூலமே சாத்திய பட்டிருக்கும்.

மனைவிக்கு எழுத படிக்க தெரியாது என்றால் இவருடைய கடிதம் மற்றொருவர் படித்து மனைவியிடம் சொல்வது போல் ஆகிவிடும். அதே போல் மனைவியும் இன்னொருவர் உதவியுடன் கடிதம் எழுதி அனுப்ப வேண்டி வரும்.

காதலர் இடையில் காற்று நுழைவது கூட அவர்களுக்கு துன்பத்தை தரும் என்று சங்க கவிதை எல்லாம் இருக்கு. அப்டி இருக்கும் போது இந்த கடிதம் newspaper மாதிரி எல்லாரும் படிக்க போறாங்க அப்டீன்னா மனுஷன் எப்படி அன்பை, காதலை, ஏக்கத்தை, தவிப்பை வெளிப் படுத்துவான். இவர்கள் பேசுவது எல்லாமே புற வயமான விஷயமாக தான இருக்கும்.

அப்படி இருப்பது அகச்சிக்கல்களுக்கு இட்டு செல்லாத?!!

ஒவ்வொரு மனுசனுக்கும் கடிதம் எழுத ஒரு உறவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்டி எழுத யாரும் இல்லையென்றால் ஒவ்வொருவரும் கற்பனையாக ஒரு காதலன், காதலியை உருவாக்கி மனதில் உள்ளதை அந்த கடிதத்தில் இறக்கி வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

 (இங்கே மனுசன் என்பது ஆண், பெண் இருவரையும் சேர்த்து தான் (பெண்ணியவாதிகள் கிட்டயும் சண்டை போட்டு முடியாது, அதான் இந்த 'பொறுப்பு துறப்பு'))

அது ஏன் கற்பனை காதலன், காதலி என்று கேள்வி எழுந்தால், இங்கே தமிழ்ச்சமுகத்தில் உறவுகளுக்கும், நட்புக்கும் பஞ்சம் இல்லை. இந்த 4G யுகத்தில் சுற்றமும், நட்பும், அனைத்தையும் மொண்ணையான கண்ணோட்டத்தில் பார்க்க பழகிக்கொண்டிருக்கிறது. போக நம்ம call பண்ணும் போது attend பண்ணாம விட்டுட்டு பிறகு பார்த்து திருப்பி கூப்பிடாத பக்கிக நமக்காக கடிதம் எழுதுவாய்ங்க??!!ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆண், பெண் நட்பே குதிரை கொம்பு என்று ஆகும் போது, காதல் என்பது எல்லாருக்கும் எங்கே வாய்க்க போகிறது. காதலை பற்றி தெரிந்த பெற்றோர், ஆசிரியர் இல்லவே இல்லை என்றே நினைக்கிறேன்.

இந்த சூழலில் ஒரு பெண் ஒரு பையனிடம் பென்சில் கேட்டால் கூட பையன் காதலுக்கான அறிகுறி என்று கனவு காண ஆரம்பித்து விடுகிறான். Propose பண்ணி bulb வாங்குகிறான்.

ஒரு பெண்ணை, பையனை பிடித்து விட்டது என்றால் உங்கள் மனதில் உள்ளதை ஒரு கடிதமாக எழுதுங்கள். மிகை உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் எழுதுங்கள். யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக வையுங்கள். ஒரு 10 நாள் கழித்து எடுத்து மீண்டும் படியுங்கள். உங்கள் மனசை அலை பாய வைத்த விசயத்திற்கு விடை கிடைத்திருக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

எனது நண்பர்கள், resignation, grievance முதல் explanation letter வரை ஆங்கிலத்தில் எழுத என்னை அவ்வப்போது தொடர்பு கொள்வர்.

MBA, MA என்று படித்த நண்பர்களால் ஏன் ஒரு கடிதம் கூட எழுத முடியவில்லை என்ற கேள்வி எனக்குள் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மனப்பாடம் பண்ணி எழுத சொல்லி குடுத்த நேரத்தில் மனதில் உள்ளதை எழுதி படித்து பார்க்க சொல்லி கொடுத்திருந்தால் நாம் ஓர் சிந்திக்கும் சமூகமாக மாறி இருப்போம்.

கல்லூரியில் பின்னூட்டம் எழுதி வாங்கும் போது நூறில் ஒருவர் தான் மனதில் உள்ளதை உள்ள படி எழுதி கொடுக்கின்றனர். அந்த பின்னூட்டம் எழுதிய நபர் மிகவும் உறுதியானவர் என்பதை சொல்லும். அந்த கடிதம் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

Proposal வரும் போது (இதுக்கு நல்ல தமிழ் வார்த்தை இல்லையா?!) பையனோ, பெண்ணோ,  'உன் மனசில் உள்ளதை கடிதமா எழுதி கொண்டு வா, படிச்சுட்டு சொல்றேன்' என்று சொன்னால் போதும், தொல்லை தருபவர்கள் ஓடி விடுவார்கள்.

எழுதிக்கொண்டு வருபவரை பிடிக்காத பட்சத்தில் விவரமாக மறுப்பு கடிதம் எழுதி விசயத்தை முடித்து கொள்ளலாம்.

இதற்க்கு சில விதிகளை கடை பிடிக்கலாம்.

1. கடிதம் தங்கிலத்தில் இருந்தால் நிராகரிக்கலாம்.

2. இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை, சந்திப்பிழை இருந்தால் பிழைத்து போகட்டும் என்று மறுவாய்ப்பு தரலாம்.

3. கடிதம் நன்றாக இருந்தால் 10 நாள் அவகாசம் கேட்டு 10 நாளுக்கு பிறகும் பட்டாம்பூச்சி பறக்கிறதா என்று பார்க்கலாம்.

4. இப்படி கடுமையான வரைமுறைகளை கடைபிடிக்கும் போது தமிழில் எழுதுபவர்களுக்கு தான் காதலிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகும். இதனால் தமிழ் வாழும்.

5. இதயங்கள் இணைந்துவிட்டால் காதல் கடிதம் எழுத தனி நோட்டுப்புத்தகம் ஒன்றை போட்டு, தினசரி எழுதி பரிமாறிக்கொள்ளலாம். எப்படியும் தேவைக்கு அதிகமாக பள்ளி கல்லூரிகளில் நோட்டுப்புத்தகம் தருவார்கள். அதை ஏன் வீணாக்க வேண்டும்?!?!

6. இப்படி காதலித்தால் காந்திய பொருளாதார விதிகள் படி செலவு மிச்சமாகும்.

7. வகுப்பில் ஆசிரியர் விடும் கதை பிடிக்க வில்லை என்றால் நீங்கள் குறிப்பு எடுப்பது போல் கடிதம் எழுதுவதை தொடரலாம்.

8. ஊடல் வரும் போது பழைய கடிதங்களை படித்து பார்த்து மனம் திரும்பலாம்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இதுக்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை அதனால் இந்த கட்டுரை இதோடு நிறைவு பெறுகிறது. ;-)









Saturday, 2 July 2016

The Godfather கோவில்பட்டிக்கு வந்த கதை...



1999 அல்லது 1998ம் வருட Manorama Year Book. அது ஒரு குட்டி கலைக்களஞ்சியம். அதில் சுவாரசியமான பல செய்திகள் அங்கங்கே சின்ன பெட்டிகளில் குடுக்க பட்டிருக்கும். மற்ற கட்டுரைகள், தகவல்கள் படிக்கும் அளவுக்கு அப்போது மன முதிர்ச்சி இல்லை.

Greatest 10 films of Hollywood என்று ஒரு பெட்டி செய்தி.

அதில் Casablanca முதல் இடத்திலும், Citizen Kane 2வது இடத்திலும், The Godfather 3வது இடத்திலும் இருந்தது. Gone With the Wind, Lawrence of Arabia, The Wizard of Oz, The Graduate, On the Waterfront, Schindler's List Singing in the Rain ஆகியவை மற்ற படங்கள்.

The Godfather பேரை பார்த்த பிறகு, தலைப்பு நல்லா இருக்கே இது தான முதல் இடத்துல இருக்கணும், ஆனா Casablanca அப்டின்னு ஏதோ பேர் சரியில்லாத படம்ல இருக்குன்னு யோசிச்சேன்.

அந்த 10 வயதில் The Godfather அப்படிங்கிற தலைப்பு மீது அப்டி ஒரு ஈர்ப்பு. அந்த வயதில், தினத் தந்தியில் வரும் கன்னித்தீவு, தங்க மலர், வெள்ளி மலர் சினிமா செய்திகள் என்று நாள், வாரம் தவறாமல் படிப்பேன். அப்டி ஒரு நாள் படிக்கும் போது The Godfather பாதிப்பில் தான் நாயகன் படம் எடுக்க பட்டது என்று படித்தேன்.

அடடே நமக்கு தெரிஞ்ச படம் பார்த்து தான எடுத்திருக்காங்க என்று மனமெல்லாம் பெருமை. இத என் நண்பர்கள் கிட்ட சொல்லலாம்னா அவிங்க அப்போ தான் Cartoon ல இருந்து WWFக்கு முன்னேறிட்டு இருக்காங்க.

இதன் பிறகு கோடை விடுமுறைகளில் ஒன்று விட்ட அண்ணன், அவனுடைய எல்லாம் தெரிஞ்ச நண்பன் என்று அவர்களுடன் Onida TVயில் (Neighbour's envy Owner's Pride) Hollywood படங்கள் பார்க்க ஆரம்பித்தேன், Rocketeer, Judgement Day ஆகியவை முதன் முதலாக பார்த்த படங்கள். அப்போது subtitle எல்லாம் கிடையாது, அவிங்க கதைன்னு சொல்றத நம்பிட்டு visuals பாத்து மிரண்டு போய் உக்காந்து இருப்பேன்.

பிறகு teenageல Star Moviesல புரியுதோ புரியலையோ படங்கள் பார்ப்பது என்பது ஒரு பழக்கமாக ஆகி விட்டது. இடையிடையே வரும் காதல் காட்சிகள் முக்கிய காரணம் என்றாலும் action காட்சிகள் வரும் போது channelலை மாற்றியது இல்லை.

அப்போது தான் Misson Impossible II போன்ற படங்கள் dub செய்யப்பட்டு வெளியாகின. வீட்டுல இந்த மாதிரி படத்துக்கு எங்க கூட்டிட்டு போக போறாங்க?! அதனால படத்தின் poster பார்த்து மகிழ்ந்து கொள்வது.

பின்னர் ஒரு 2 வருடம் கழித்து Spider Man படம் வந்தது. அப்போ 9ம் வகுப்பில் இருந்தேன். (படிச்சேன்லாம் சொல்ல முடியாது)
15 ரூபாய் கட்டணம். இதற்கு முன்னாடி ஆளவந்தான் மாதிரி படங்களை அரை trouser அணிந்து சென்று பெண்கள் பகுதியில் ticket வாங்கி, தீபாவளி அன்று முதல் show பார்த்த சாகசங்கள் எல்லாம் செய்த அனுபவம்.

தனியாக கிளம்பி விட்டேன். Spider Man மிகவும் பிடித்திருந்தது, போக பயபுள்ள நமக்கு தெரிஞ்ச, புரிஞ்ச மொழியில் பேசுறானே. அப்புறம் தமிழ் சினிமாவில் சாத்தியம் இல்லாத கொஞ்சல் காட்சிகளும் உண்டே!!!

இதன் பிறகு 1 ரூபாய், 2 ரூபாய் என்று சேர்த்து வைத்து அத்தனை dubbing படங்களையும் பார்ப்பது. குறிப்பாக Jackie Chan, Jet Li படங்கள்.

இதற்கிடையில் The Godfather படம் பற்றி அவ்வப்போது கேள்வி பட்டும், படித்து கொண்டும் தான் இருக்கிறேன். Star Movies ல் போட்டாலும், Judgement Day, Jurassic Park, Godzilla, Shanghai Noon, Rush Hour, James Bond படங்கள் பார்க்க முடிந்த அளவுக்கு The Godfather படத்தை பார்க்க முடியவில்லை. புரியவில்லை. Santino Corleone தனது தங்கை கணவனை அடித்து நொறுக்கும் காட்சியை 2 முறை பார்த்ததாக நியாபகம்.

Higher Secondary படிக்கும் போது சினிமா செய்திகள் படிப்பது பாட புத்தகத்தை விட முக்கியமாக மாறி விட்டது. The Hindu Paper படிச்சா English Knowledge improve ஆகும்னு எங்க அப்பா வாங்கிட்டு வருவார். அதுல எப்பவுமே முதல்ல எந்த channelல எந்த படம்னு தான் பாக்கிறது. அப்புறம் Friday Reviewல உள்ள சினிமா செய்திகள்.

அப்போ Sliver, Species
 போன்ற படங்கள் எப்போ போடுறான் என்று wait பண்ணி night படிக்க போறேன் என்று சொல்லி விட்டு படம் பார்ப்பது, மறுநாள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

இயக்குனர் பாலா, செல்வ ராகவன், கவுதம் மேனன் என்று அவர்கள் படங்கள் வந்தால் theater போவோம் அப்படிங்கிற அளவுக்கு வந்தாச்சு. வளர்ந்தாச்சு.

2006ல், VCR, CD Player என்று எதுவுமே பயன்படுத்தி இருக்காத எங்கள் வீட்டில் ஒரு DVD player வாங்கினோம்.

அந்த மனோரமா புத்தகம் அப்போதும் என்னிடம் இருந்தது. அந்த 10 படங்கள் என் மனதில் இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பார்த்து கொண்டேன்.

கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு 100 கிலோமீட்டர் இருக்கும். ரயிலில் 15 ரூபாய் கட்டணம். 200 ரூபாய் இருந்தால் மதுரை கிளம்பி விடுவோம். ஒரு DVD 20 ரூபாய்.

மதுரை மீனாட்சி பஜாரில் DVD கடையில் The Godfather படத்தை வாங்கி விட்டேன். Godfather படம் மூன்று பகுதிகள் கொண்டது என்பது எனக்கு அப்போது தான்  தெரியும்.

Casablanca, Gone With The Wind, Singing in the Rain, Lawrence of Arabia, Schindler's List, The Sound of Music ஆகிய படங்களும் வாங்கினேன். இதில் The Sound of Music இன்னும் பார்த்து முடிக்கவில்லை.

வீட்டிற்கு வந்து ஆர்வமாக படத்தை DVD யில் போட்டேன். 'I believe in America'என்று படம் ஆரம்பித்தது.

இந்த முதல் காட்சியே நாயகன் படத்தில் எப்படி உருமாற்றம் பெற்றிருந்தது என்று கண்டு கொண்டேன்.

Vito Corleone பேசும் போது DVD யில் எதுவும் பிரச்சினையா என்று பயந்து விட்டேன். என்னடா பெரிய Don என்று பார்த்தால் குரல் சரியாக இல்லையே என்று வருத்தம்.

Marlon Brando பெரிய நடிகர், சிவாஜி அவரை சந்தித்து இருக்கிறார், 2 முறை Oscar வாங்கியிருக்கிறார், அதில் Godfatherக்கு ஒன்று என்று தினத் தந்தியில் படித்தோமே என்று மனசு ஓடிக்கொண்டிருந்தது.

நான் அப்போது BA ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவன், கல்லூரியில் பக்கா ஆங்கிலத்தில் வகுப்பு எடுக்கும் Professors அரை dozen பேர் இருந்ததார்கள், அவர்கள் ஆங்கிலம் பேசி கேட்டு பழகி இருந்ததாலும், subtitle இருந்ததாலும் படம் புரிவதில் ஒரு குழப்பமும் இல்லை.

Sollozo விடம் Don business பேசும் காட்சியை பார்த்த பிறகு, இது வரை நாம பார்த்த படங்கள், அதுல உள்ள நடிப்பு எல்லாம் ஒண்ணுமே இல்லை அப்டின்னு புரிஞ்சுட்டு. Marlon Brando ஏன் உலகம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருக்கிறார் என்பது படம் தொடங்கி 40 நிமிடத்தில் எனக்கு விளங்கி விட்டது.

அடுத்த 5 நிமிடத்தில் அவர் துப்பாக்கியால் சுடப்பட, என்னடா Climax அதுக்குள்ள வந்துட்டா என்று பார்த்தேன். பிறகு தான் தெரிந்தது படம் 3 மணி நேரம் என்று.

'It's my family kay, not me' என்று தனது குடும்பத்தின் இன்னொரு முகத்தை பற்றி காதலியிடம்  சொன்ன Mike Corleone, அப்பாவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து உடனே செயல் படுகிறான்.

என்ன தான் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்தாலும் அவர்களுக்கு என்று சில தர்மங்கள், அறங்களை கடை பிடிக்கும் கதாபாத்திரங்கள் Godfather ஏன் Gangster படங்களில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது.

நம்மூர்ல வில்லன் கதாநாயகன் கூட சண்டைனா நேர போய் நாயகனோட குடும்பத்தை தான் கை வைப்பான். ஆனா இங்க Civilian, part of the Family என்று பிரித்து பார்க்கும் விதத்தை கண்டு, அதுவும் சரி தான சம்பந்த பட்டவனை தான அடிக்கணும், அவன் பொண்டாட்டி, பிள்ளைகளை அடிக்கிறது என்ன நியாயம்ன்னு நினைச்சேன்.

 பின்னர் இதே Principle பற்றி பொல்லாதவன் படத்தில் செல்வம் பேசுவதை கண்டு தமிழ் சினிமா மேலோட்டமான காட்சிகள் தாண்டி பிறிதொரு ஆங்கில அல்லது வேற்று மொழி படத்தின் உள்ளடக்கத்தை பயன்படுத்தும்  அடுத்த கட்ட முயற்சிக்கு அடித்தளம் போட ஆர்மபிச்சாச்சு போல என்று நினைத்தேன்.

வேற வழியில்லாமல் Civilian Mike Corleone இந்த ஆட்டத்தில் இறங்குகிறான். அதன் மூலம் part of the Family ஆகிறான்.

 காதலியின் மீண்டும் எப்போது சந்திப்பது என்ற கேள்விக்கு ஒரு உறுதியான பதில் கூற முடியாமல் பிரிகிறான்.

இதன் பிறகு Mike Corleone இரண்டு பேரை கொலை செய்து விட்டு Sicily செல்வது அங்கே ஒரு பெண் மீது காதல் கொண்ட பிறகு அவளுடைய தகப்பனிடம் பேசி பெண் கேட்கும் காட்சியை அப்போதே மிகவும் ரசித்தேன். Rewind செய்து மறுபடியும் பார்த்தேன். அந்த பெண்ணுடைய பெயர் Apollonia. ஏதோ கிரேக்க கடவுள் பேர் போல இருக்கே என்று நினைத்தேன்.

மீண்டும் America வரும் Mike தனது தந்தை காயத்தாலும், உடல் நலக்குறைவால் இழந்த அதிகாரத்தை எப்படி மீட்டு தனதாக்கி கொள்கிறான் என்று படம் விவரிக்கிறது.

மீண்டு வரும் Mikeன் குரல், நடை, தலை அலங்காரம், பார்வை அவன் Familyயை பாதுகாக்க எதுக்கும் தயாராகி விட்டான் என்பதை உணர்த்துகிறது. War Veteran and Lover Boy Mikeஆக அறிமுகமாகி மெதுவாக Corleone Familyயின் Don ஆக பொறுப்பு எடுத்து கொள்கிறான்.

இதன் பின்னர் ஓய்விலிருக்கும் Vito Corleone மகன் Mike உடன் பேசும் காட்சி எப்படி தேவர் மகன் படத்தில் பயன்படுத்த பட்டிருந்தது என்று எளிதாக கண்டு கொள்ள முடிந்தது.

'I told you. I can handle it, I'll will handle it.'  என்று அதிகமாக கவலை கொள்ளும் தந்தையை சமாதானம் செய்கிறான் Mike. 'Santino, Fredo... but I never wanted you for this.' 'Senator Corleone, Governor Corleone' என்று Corleone Familyயை legitimate ஆக ஆக்குவதற்கான கனவை விட்டு செல்கிறார் Don Vito Corleone.

தந்தையின் மறைவுக்கு பின்னர் வரும் காட்சிகள் என்னற்ற தமிழ் மற்றும் பிற இந்திய மொழி படங்களில் அப்டியே பயன்படுத்த பட்டுள்ளன. அது Al Capone உத்தரவில் உண்மையில் அமெரிக்காவில் நடந்த St. Valentine's Day Massacre சம்பவத்தின் தழுவல்.

படம் நாவலை தழுவி எடுக்க பட்டது என்று அறிந்து நாவலை படிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். 2008ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே ஆங்கிலத்துறைக்கு இருந்த நூலகத்தை கண்டு நிச்சியம் The Godfather புத்தகம் அங்கே இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் Godfather எழுதிய Mario Puzoவின் மற்றொரு நாவலான Omerta இருந்தது, அதை வாசித்தேன். நம்மூர் R K Narayanனின் Malgudi போல இவருக்கு Sicily, Italian Mafia தான் கச்சா பொருள் என்று புரிந்து கொண்டேன்.

அதே வருடம் நடந்த புத்தக காட்சியில் The Godfather வாங்கி படித்தும் விட்டேன். ஒரே நாவல் The Godfather I & II என்று இரண்டு படங்கள் ஆகியிருப்பது கண்டு அசந்து விட்டேன்.

பொதுவாக படம் எப்போதுமே நாவல் போல இருப்பதில்லை. Life of Pi ஒரு உதாரணம். என்ன தான் graphics எல்லாம் இருந்தாலும் புத்தகம் படித்தவர்கள் படம் சுமார் தான் என்று சொல்லுவார்கள்.

ஆனால் The Godfather படம் நாவலை விட மிக கச்சிதமாக இருந்தது. அதற்கு Marlon Brando, Al Pacino என்ற ஆளுமைகளும், இயக்குனரின் இத்தாலியா பின்புலமும் காரணம் என்று நினைக்கிறேன்.

நான் The Godfather படம் முதல் முறை பார்த்து 10 வருடம் ஆக போகிறது. இந்த 28 வருட வாழ்க்கையை படம் பார்ப்பதற்கு முன், பார்த்த பின் என்று இரண்டாக பிரிக்கும் அளவுக்கு இப்படம் என்னை முற்றிலும் புதிய ஆளாக மாற்றி விட்டது.

கல்லூரி படிக்கும் போது Brando போலவும், Pacino போலவும் ஆங்கிலம் பேசி பார்ப்பேன். ஒரு செயல் வீரனாக இருக்க வேண்டும் என்று பொது பிரச்சினையில் தலையிட்டு வில்லங்கத்தை இழுத்து வருவேன். ஒரு குட்டி Don ஆக என்னை கற்பனை செய்து கொள்வேன். நட்பு வட்டாரமும் எனக்கு உறுதுணையாக இருந்தது.

அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் ஒரு வருடம் பொது செயலாளராக இருந்தேன். அது Election நடக்காமல் unopposed ஆக கிடைத்த பதவி. இதெல்லாம் The Godfather பார்த்தும், படித்தும் என் ஆளுமையில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த மாதிரி பொறுப்புகள் தேடி வரும் அளவுக்கு வளர்ந்தேன் என்பதில் எனக்கு சந்தேகமும் இல்லை.

இந்த ஆளுமை உருமாற்றத்தால் என்னை தேடி வருபவர்களுக்கு உதவி  செய்கிறேன் பேர் வழி என்று நானே பிரச்சினைகளை தலையில் தூக்கி வைத்து கொள்கிறேன். என்னை சுற்றி இருப்பவர்கள், எனக்கு நெளிவு, சுளிவு தெரியவில்லை, சூது வாது காணாது என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களில் யார் கூட்டத்தோடு ஆமாம் சாமி போடுவா, யார் விலகி நிப்பா என்பதை என் உள்ளுணர்வு சொல்லி விடும்.

அதாவது The Godfather போன்ற ஒரு படத்தை பார்த்து புரிந்து கொள்ள திராணி இல்லாதவர்கள். அதனால் தனக்கென ஒரு ஆளுமையை உருவாக்கி கொள்ள முடியாதவர்கள் தான் மந்தையாடு போல இருப்பார்கள்.

இன்று நூற்றுக்கணக்கான புத்தகங்கள் படித்து விட்டேன், ஆயிரக்கணக்கான சினிமாக்கள் பார்த்து விட்டேன், அத்தனைக்கும் அடித்தளம் நான் மதுரையில் 20 ரூபாய்க்கு வாங்கிய The Godfather DVD தான்.

ஆனால் அதற்கு முன்னால் 10 வயசு பையனுக்கு எதுக்கு Manorama Year Book என்று பெரிய மனுஷ தனமாக சிந்திக்காமல் அதை வாங்கி கொடுத்து என்னை அவையத்து முந்தியிருக்க செய்த எனது அப்பாவை நினைத்து பெருமை படுகிறேன்.

பின் குறிப்பு:

என் நண்பர்களை நான் எப்போதும் இரண்டாக பிரிக்கிறேன். The Godfather படம் பார்த்த நண்பர்கள், பார்க்காத நண்பர்கள். பார்த்த நண்பர்கள் நான் சொல்லும் விசயத்தை தெளிவாக புரிந்து கொள்வர். பார்க்காத நண்பர்கள் நான் ஏதோ நடைமுறை சாத்தியம் இல்லாத விசயத்தை பற்றி பேசிகிட்டு இருக்கேன் என்பார்கள்.

இப்போ நம்ம ஊர்ல யாருக்கிட்டாயவது Godfather படம் பாத்திருக்கியான்னு கேட்டா, 'அஜித் படம் வரலாறு, அத தான சொல்றீங்க' அப்டிம்பாங்க.

சந்தேகம்னா try பண்ணி பாருங்க. 

Monday, 20 June 2016

Submarino - Road to Redemption



ஒரு திரைப்படம் பற்றி எதுவுமே தெரியாமல் பார்ப்பது தான் ஒரு திரைப்படத்தை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் ரசிக்க சிறந்த வழி.

அதனால் படத்தை பார்த்து விட்டு இந்த பதிவை படிப்பது படம் பற்றிய உங்கள் புரிதல், அனுபவத்தோடு என்னுடைய புரிதல் இணைந்து கொள்ள வசதியாக இருக்கும்.

Submarino என்பதற்கு அர்த்தம் அறிய அத்திரைப்படத்தின் imdb பக்கத்தில் உள்ள trivia sectionல் பார்க்கவும்.

Formative Years என்று கருதப்படும் teenage பருவம் ஒருவர் வாழ்க்கையில் என்னவாக போகிறார் என்பதை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. Infact, முதல் 15 வருடங்களில் ஏற்படும் அனுபவங்கள் தான் அடுத்த 45 வருடங்கள் அந்த நபர் எப்படியான மனிதனாக இருக்க போகிறார் என்பதற்கு அடித்தளம் இடுகிறது.

சட்டென தமிழில் நாயகன், நந்தா, காதல் கொண்டேன் ஆகிய படங்கள், Hollywoodல் Clint Eastwood இயக்கிய Mystic River போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்படங்களில் teenage தொடங்கும் வயதில் இருக்கும் கதையின் நாயகனுக்கு ஏற்படும் அனுபவங்கள் அவன் ஏன் வாழ்க்கையில் அப்படி இருக்கிறான் என்பதற்கு பதிலாக இருக்கின்றன.

இங்கே Submarinoவில் அண்ணன், தம்பி, அவர்கள் தங்கள் குட்டி தம்பியை பார்த்து கொள்ள, பெயர் வைக்க, பசியாற்ற எடுக்கும் முயற்சிகள், போதையில் வரும் அம்மாவை சமாளிக்கும் விதம் என்று முதல் 10 நிமிடம் நகரும் படம் சட்டென பார்வையாளர்களை உறைய வைத்து கதையின் நாயகனின் 30+ வயது வாழ்க்கைக்கு வந்து விடுகிறது.

Scarred for life என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு, இங்கே Nick ஆகிய மூத்த சகோதரனுக்கு நடந்தது அது தான். அவன் தன்னை அறியாமல் செய்த ஒரு பிழைக்கு அவனை அவன் மன்னிக்க தயாராக இல்லை.

கெட்ட குடியே கெடும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக நகரும் திரைப்படத்தில், Nick சிறைக்கு சென்ற காரணம் கூட நினைவின்றி இருக்கிறான். உடற்பயிற்சி செய்வது, beer குடிப்பது, தொந்தரவு செய்யும் பக்கத்து அரை வாசியை மூர்க்கமாக தாக்குவது என்று ஒரு நோக்கமில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

படம் 45 நிமிடங்கள் கடந்த பிறகு தான் Nick ன் தம்பியும் அவனுடைய மகனும் வருகிறார்கள். இந்த திரைக்கதை அமைப்பு Babel படத்தை நினைவு படுத்துவதாக இருந்தது. நாவல்களில் இது போல கதை கூறும் முறை எனக்கு தெரிந்து Tolstoy காலத்திலேயே வந்து விட்டது.

Nick ன் தம்பி போதை அடிமையாக இருக்கிறான் அனால் மகனை விட்டு பிரிய மனமில்லாமல் இருக்கிறான். Social service அவனுக்கு வளர்ப்பு தந்தை, தாயை தர முன் வரும் போதும் தன்னால் மகனை பார்த்து கொள்ள முடியும் என்கிறான்.

இதன் பின்னர் அவன் போதை ஏற்றி விழுந்து கிடந்து, நினைவு திரும்பி மகனை வந்து பார்க்கும் காட்சிகள் எல்லாம் மனதை பிசைபவை.

குற்றவாளிகளின் உலகை ஜாலியாக, சாகசமாக காட்டும் Tarantino பாணியில் உலகமே படமெடுத்து கொண்டு இருக்கும் போது இங்கே Submarino அவர்கள் வாழ்க்கை செல்லும் திசையை எந்த தீர்ப்பும் சொல்லாமல், பரிதாப பட வைக்காமல் காட்சி படுத்துகிறது.

Nick ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்து தான் தனது சகோதரனை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறான், பின்னர் பேச முடியாமல் விரக்தியில் தனது கையை phone booth மீது குத்தி காயப்படுத்தி கொள்கிறான்.

 இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த மௌனம் சிறு வயதில் நடந்து விட்ட அசம்பாவிதத்தால் ஏற்பட்டது. இருவரும் அது குறித்து பேச தயாராக இல்லை. அதை ஏற்றுக்கொண்டு Nick ன் சகோதரன் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது Nickற்கு அது சாத்தியமாவில்லை. அவன் அதை கடந்து போக முடியாமல் தவிக்கிறான். Nick ன் மௌனம், விரக்தி, கோபம், எல்லாத்துக்கும் பின்னால் அந்த இளவயது சம்பவமே காரணமாக இருக்கிறது.

 Nick ன் சகோதரன் இனிமேல் Nickயை சந்திக்க போவதில்லை என்பது போல அந்த அசம்பாவிதம் Nickன் கவனக்குறைவால் ஏற்படவில்லை என்று சொல்லி விட்டு சொல்கிறான்.

Nick ன் மனதிலிருக்கும் ரணத்தை உணர்த்தும் விதமாக அவனது கையில் உள்ள காயம் ஆறாமல் இருக்கிறது. அவன் அதற்காக மருத்துவரிடம் செல்வதில்லை. மருத்துவர் வரும் போது காலம் கடந்து விடுகிறது.

Nick சிறுவர்கள் அருகில் இருக்கும் போது மென்மையானவாக மாறி விடுகிறான், தனது நண்பனிடம் தானும் குடும்பம், குழந்தை என்று வாழ வேண்டும் என்று ஆசை பட்டதையும் கூறுகிறான்.

தனது அம்மா இறந்த பின் வந்த பணத்தை பங்கு போடாமல் தனது தம்பியிடம் குடுத்து அவனுடைய மகனை நன்றாக வளர்க்க வைத்துகொள் என்று கொடுக்கிறான்.

நண்பன் ஒருவன் குற்றம் இழைத்து விட்டு தப்பித்து விட அதை ஏற்று கொண்டு சிறை செல்கிறான்.

தனியாக வாழும் முதியவர்கள், மகனை பிரிந்து வாழும் போதைக்கு அடிமையான Nick ன் தோழி, தனது தாயை 10 வருடத்தில் பார்த்தே இருக்காதா நண்பன் என்று படத்தில் வரும் கதா பாத்திரங்கள் வாழ்க்கையில் மீட்சி இருப்பதாக தெரியவில்லை.

எப்போதும் பெய்து கொண்டிருக்கும் பனி, Nickன் சிகரெட்டில் இருந்து எழும் புகை என்று காட்சிகளும் இருன்மையாகவே இருக்கின்றன.

Nick ன் தம்பியின் மகன் Martin, Zorrow பற்றி பேசுகிறான், அவர்கள் வீட்டில் Manhattan Skyline படம் இருக்கிறது, Junk food சாப்பிட்டு coke குடிக்கிறார்கள்,  super marketல் வாங்கி fridgeயை நிரப்புகிறார்கள். இதெல்லாம் எதுவும் குறியீடா என்று தெரியவில்லை.

தமிழ் நாட்டில் மது விலக்கு எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு தான் வளர்ந்த அல்லது அப்படி சொல்லி கொள்ளும் நாடுகளில் போதை மருந்து தடுப்பு சாத்தியம் போல.

Welfare State என்று அறியப்படும் Denmark ல் இருந்து இப்படி ஒரு சினிமா என்றால் Truth is stranger than fiction theory படி உண்மை நிலவரம் என்ன என்று தெரியவில்லை.

படத்தில் Nick சிறையில் இருக்கும் போது வக்கீல் அவனை சந்தித்து பேசும் விதம் போதும் அந்த நாட்டில் அரசின் பிரதிநிதிகள் மக்களை எப்படி அணுகுகிறார்கள் என்று அறிந்த கொள்ள, ஆனாலும் Nick போன்ற fallen angels எங்கேயும் இருக்கவே செய்வார்கள்.

படம் துன்பியல் யுகமாக நீண்ட பின்னர் ஒரு ray of hope உடனே நிறைவு பெறுகிறது.

ஒரு நல்ல திரைப்படம் என்பது ஒரு நாளாவது உங்கள் தூக்கத்தை கெடுக்க வேண்டும், உங்களை தொந்தரவு செய்ய வேண்டும் அதுவே உங்கள் ரசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். உங்களை பண்பட்டவர் ஆக்கும். Submarino பலருக்கும் அப்படி ஒரு அனுபவத்தை வழங்க கூடிய படமாக இருக்கும்.

இதே வருடத்தில் வெளியான Biutiful படமும் இதோடு இணைத்து பார்க்க வேண்டிய படமே. Redemption தான் இரண்டிற்கும் உள்ள பொதுவான மையம்.

Submarino இயக்குனரின் மற்றொரு படமான The Hunt சினிமா காதலர்கள் தவற விட கூடாத படம். The Hunt ஒரு மனிதனுக்கு benefit of doubt குடுக்க முடியாத அளவுக்கு ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது அவனுடைய சமூகம் அவனை எப்படி நடத்தும் என்று சொல்லும் படம்.

For More Details - http://www.imdb.com/title/tt1322385/?ref_=nv_sr_1

- Maruthu Pandian Prometheus

Friday, 17 July 2015

‘உனக்கு எவன்டா பாடம் சொல்லி கொடுத்தது?’

இந்த 27 வருசத்தில எனக்கு புரிஞ்சது என்னன்னா… பட்டப்படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்மந்தம் இல்லை.!!! இங்கே பகுத்தறிவு என்பதை common sense, civic sense என்ற பொருளில் புரிந்து கொள்ளவும்.

ஆகவே தமிழினமே!

இனிமேல் எவனையும் பார்த்து

‘படிச்சிருக்கீலே அறிவு இல்ல?’

‘படிச்சவனாயா நீ?’ என்றோ…

முக்கியமாக ‘உனக்கு எவன்டா பாடம் சொல்லி கொடுத்தது?’ என்ற கேள்வியை கேட்கவே கூடாது!!!

தலைக்கவசத்தை அணிந்து கொண்டு இரும்பு குதிரையை செலுத்தும்போது…

தலைக்கவசத்தை அணிந்து கொண்டு இரும்பு குதிரையை செலுத்தும்போது…

1. வலது பக்கம் விமானம் பறக்குற மாதிரி சத்தம் கேட்குது.

2. இடது பக்கம் ரெயில் வண்டி போற மாதிரி சத்தம் கேட்குது. (எங்க ஊர்ல காத்து காலம்)

3. மறந்து போய் ஏதாவது பாட்டு கீட்டு பாடிட்டா மண்டைக்குள்ளயே எதிரொலிக்குது!

4. பின்னாடி வர்ற மண் திருடுற லாரியோட ஆரன் சத்தம் பைக் சத்தம் மாதிரி கேட்குது. (சத்தம் இல்லாம தொழில் பண்றவங்க பாருங்க!!!)

5. என் வண்டி ஆரன் சத்தம் எனக்கே கேட்க மாட்டேங்கு. (இதுக்குள்ள எனக்கு காதுல ஏதோ பிரச்னைன்னு உங்களுக்கு தோணிருக்கணுமே?!)

6. வண்டிய உதைச்சு லேசா உறும விட்டாத்தான் வண்டிக்கு உயிர் வந்துச்சா இல்லையான்னு தெரியுது.

7. கவசத்தை கழட்டாம ஏதாவது கடைக்கு போனா கடைக்காரர் எனக்கு பிறவியிலேயே காது கேட்காது என்பது போல கத்தி பேசுகிறார்.

8. உடன் வேலை பார்ப்பவர்கள், பொண்டாட்டியிடம் தேங்காய்யை தட்டி பார்த்து வாங்கி வந்து சட்னி வைக்க படித்திருப்பதால் என்னுடைய தலைக்கவசத்தை தட்டி பார்க்கிறார்கள். (தேங்காய் மண்டையர்கள்)

9. பெண்கள் குழந்தைகளையும், தண்ணீர் குடத்தையும் இடுப்பில் லாவகமாக வைத்து கொண்டு செல்வது போல எங்கே போனாலும் கவசத்தை வைத்துக்கொண்டு அலைய வேண்டியிருக்கிறது.

10. கவசம் இல்லாமல் பின் இருக்கையில் அமர்பவர் காவல் துறையிடம் சிக்கினா அபராதம் நான் கட்டணுமா இல்லை அவர் கட்டணுமா என்று கேட்டு தெளிவு படுத்தி கொள்கிறார்.

11. ‘இணையத்தில் வாங்குனீங்களா?, எப்போ? இப்ப இதோட விலை ரெண்டு மடங்கு ஆயிருச்சு’ என்று இணையத்தை பயன் படுத்த தெரிந்திருந்தும் வாங்காமல் விட்ட ஒருவர் பெரு மூச்சு விடுகிறார்.

12. கலைஞ்ச தலைமுடிய எப்படி சீவினாலும் நாலு முடி புதுசா முளைச்ச புல்லு மாதிரி நேரா நிக்கிது.

13. வண்டில வர்ற நாய் புதுசா இருக்கேன்னு தெருவில் உள்ள நாயெல்லாம் லொள்ளுகின்றன.

14. எப்படியும் ஒரு வாரத்திற்குள் எல்லாம் பழையபடி திரும்பி விடும் என்று கவசம் வாங்காத ஒரு கூட்டம் இறுதிச்சிரிப்பு சிரிக்க காத்துக்கொண்டிருக்கிறது!!!

கிரிக்கெட்டும் இந்தியரும்

நான் கரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி 12 வருடங்களுக்கு மேலாகிறது. 2011 உலகக்கோப்பை போட்டியை அவ்வப்போது கவனித்ததோடு சரி. 2011ல் ஒவ்வொரு போட்டியை இந்தியா வென்ற போது சக மாணவர்கள் வெற்றியை கொண்டாடும் பொருட்டு செய்த கிறுக்கு தனங்கள் ஞாபகம் வருகின்றன. உச்ச கட்டமாக இறுதி போட்டியை பல்கலைக்கழக கலையரங்கத்தில் ஒளிபரப்ப நிர்வாகம் ஏற்பாடு செய்ய அன்று இந்தியா வென்றதால் கலையரங்கம் பிழைத்தது. ஆனாலும் செடி கொடிகளை சூரையாடி விட்டனர் நமது ரசிகர்கள்.

இலக்கியம், சினிமா என்று எனக்கு என்ன பிடிக்கும் என்ற ஒரு தெளிவு ஏற்பட கிரிக்கெட் ஒரு அபத்தமான விளையாட்டாக எனக்கு பட்டது. கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டையும் என்னால் ஒரு 10 நிமிடம் கூட பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நமது இன்றைய பேசு பொருள் கிரிக்கெட்டே. பேராசிரியராக ஆன பின் இந்த மூன்று வருடங்களில் கிரிக்கெட்டிற்கு எதிராக பேசிக்கொண்டே இருக்கிறேன். எனது மாணவர்களுக்கு நான் ஏன் இப்படி கிரிக்கெட்டை கரித்து கொட்டுகிறேன் என்ற கடுப்பு. ஏன் கிரிக்கெட் பார்கிறீர்கள் என்று கேட்டால் நான் ஆங்கில பேராசிரியராக இருப்பதால் எனது மாணவர்களுடைய பதில் “ கமெண்டரி கேட்டு என்னுடைய ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள” என்கிற ரீதியில் இருக்கும்.

“சரி, எங்க ஒரு ஓவருக்கு கமெண்டரி கொடு பார்ப்போம்”

“சார்?!!!”

“மூணு மணி நேரமோ ஒரு நாள் முழுக்கவோ கிரிக்கெட் பார்க்கேல?”

“ஆமா சார்” ஏதோ குற்றம் புரிந்தவன் போல இந்நேரம் உடல் மொழி மாறியிருக்கும்.

“சரி ‘ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள’ நான்  ஆங்கில படம் ஆங்கில சப்டைட்டிலோட தர்றேன் பாக்குறியா?”

“சார்?!!!” தலையை சொறிந்து கொண்டே “சார், தமிழ்ல அந்த படம் கிடைக்காதா சார்?”

இதாவது பரவாயில்லை. ஆங்கில இந்துவில் வெளியான கிரிக்கெட் பற்றிய கட்டுரையை படிக்க கொடுத்தால் பையன் நம்முடன் பேசுவதையே நிறுத்தி விடுவான்.

Time is money ன்னு போறவன் வாரவன்லாம் சொல்றான். ‘என் வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா’ - நல்லாத்தான் இருக்கு. ஆனா வருசத்தில ரெண்டு மாசம் IPL மாதிரி பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடத்த படும் போட்டிகள் நமது இளைஞர்களின் நேரத்தை திருடுவது நமது இளைஞர்களுக்கு புரியவில்லையா?

“யோ லீவுல மனுசன் வேற என்ன பண்ணுவான்?”

“டிவில ஃப்ரீயாதான பாக்கோம்!”

“சார் சென்னை நம்ம ஊரு டீம் சார்”

ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் நம் வாழ் நாளிலிருந்து குடுத்ததற்கு இந்த பெருமை தான் மிச்சம்!

ஒரு விசயத்தில் நாம் தொடர்ந்து ஈடுபடும் போது அது ஏதோ வகையில் நம்முடைய சிந்தனையை, ஆளுமையை கட்டமைக்கிறது. இளைஞர்கள் நிரம்பிய இந்த தேசத்தில் என்னை போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து கிரிக்கெட்டை வழிபடுபவர்கள் தான் அதிகம். இத்தனை பேர் இதில் இவ்வுளவு நேரம் செலவளித்து என்ன முன்னேற்றத்தை தங்கள் வாழ்கையில் கண்டார்கள்? சராசரி பின்னணியிலிருந்து வந்த சச்சின், தோனியெல்லாம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார்கள். எப்படி? கிரிக்கெட் விளையாடி, விளம்பர தூதராக இருந்து என்று கணக்கு வழக்கில்லாமல் பணம் சேர்ந்து விட்டது. கிரிக்கெட்டை மேல் சொன்ன வீரர்கள் விளையாடிய காலம் முழுதும் கண் அயராமல் பார்த்த நம் இளைஞர்களுக்கு என்ன கிடைத்தது?

நல்லா விளையாடட்டும், விளையாடியதற்கு சம்பளம் வாங்கட்டும். நல்லா இருக்கட்டும். ஆனா இந்த இந்திய திரு நாட்டுல வேறெதவாது விளையாட்டு விளையாடியோ, இல்ல வேறெதாவது நேர்மையான தொழில் செஞ்சோ இவ்வளவு பணம் சேர்க்க முடியுமா? Behind Every Great Fortune There is a Crime   அப்படினு பால்சாக் (Balzac) என்கிற எழுத்தாளர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

இந்தியர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று மட்டம் போட்டு மட்டை பந்து விளையாட்டை பார்த்து சில நூறு பணக்காரர்களை உருவாக்கியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியின் அக்கரைச்சீமையில் என்கிற கதையில் வரும் ராஜூ என்கிற கதாபாத்திரம் ‘என்னோட 25 வருச உழைப்பு வெள்ளைக்காரன் பாக்கெட்ல பணமா இருக்கு சார்’ என்று கதாசிரியரிடம் சொல்வதும் இங்கே மேற்கோள் காட்டப்படவேண்டிய வரியே. Time is Money என்பதன் விளக்கம் இப்போது புரிகிறதா? Time உங்களுடையது Money அவர்களுடையது! Cricket is a rich man's game என்றொரு கருத்தும் உண்டு. இங்கே கிரிக்கெட்டில் நிலவும் சாதி அரசியலை வைத்து சினிமாவும் எடுத்தாயிற்று.

வளர்ந்த நாடுகளில் உள்ள நடுத்தர குடும்பங்களின் வருமானமும் நமது நாட்டில் உள்ள உள்ள நடுத்தர குடும்பங்களின் வருமானமும் ஒன்று அல்ல. நம் குடும்பங்களிடமும் உள்ள சொத்து நம்முடைய நேரமே. அந்த நேரத்தில் ஊர் நாட்டுல வேற எந்த விசேசத்துக்கும் போகமல் வேலையே கதியென்று கிடந்து உழைத்து சேர்த்து பொருட்களை வாங்கி சேர்த்து நாம் வாழ்கையில் கரை சேர்ந்துவட்டதாக காட்டிக்கொள்கிறோம். இந்த கிரிக்கெட்டில் நாம் ஈடுபடுவதும் காட்டிக்கொள்வதற்காகவே.’ சென்னையில் இருப்பவர்களிடம் ஊர் நாட்டில் இருப்பவர்கள் ‘கடற்கரைக்கு போனியா?, மாலுக்கு போனியா?’ என்பதோடு இப்போது ‘IPL பார்க்க போனியா?’ என்று கேட்கிறார்கள். அதே சென்னையில் தான் கன்னிமாரா நூலகமும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் இருக்கிறது. பாவம் நம் இளைஞர்கள். அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லி தர ஆளில்லை. போக அங்கே சென்று தன்னை ஃபோட்டோ எடுத்து போட்டு கொள்வதில் கவர்ச்சி இல்லையே?!

நான் அடுக்கும் குறைகளுக்கு என்ன ஆதாரம்? சினிமாவில் இருந்தே உதாரணம் சொல்கிறேன். நம் இளைஞர்களுக்கு எல்லாமே எளிமையாக இருக்க வேண்டும். இங்கே நடிகர்களின் படங்கள் அடையும் வெற்றியில் பாதி கூட இயக்குனர்களின் படங்கள் அடைவதில்லை. அதாவது ரஜினி, விஜய், அஜீத், சல்மான், சாருக், அமீர் கான் பாணி படங்கள். அப்படங்களின் புரிந்து கொள்ள, விவாதிக்க எதுவுமேயில்லை. யார் இயக்கினாலும் அவர்களின் படங்களின் கதையிலோ எடுக்கப்பட்ட விதத்திலோ பெரிய வித்தியாசம் இருக்காது. மாற்றாக பாலா, மிஸ்கின், வெற்றிமாறன், அனுராக் கஸ்யப் போன்றவர்கள் எடுக்கும் படங்களை கேலி பேசுவதோடு ‘கிறுக்கன், சைக்கோ’ என்று பட்டப் பெயர் வைத்து கொண்டு இருப்போம். நம் இளைஞர்கள் கரும்பை சாறாக தான் குடிப்பார்கள். கடித்து திங்க திறானி காணாது. கடித்து தின்பது நேர விரயம் என்பார்கள். 5 நாள் போட்டியாக இருந்ததை குறைத்து, ஒரு நாளாக மாற்றி இப்போது 3 மணி நேரமாக சுருங்கி விட்டது. அதை விளையாடுபவருக்கும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.

எனது மாணவர்கள் பலருக்கு கிரிக்கெட் விளையாடுபவர்கள் தான் முன் மாதிரிகள். (Role Model) அப்துல் கலாமை முன் மாதிரியாக கொண்டு அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் நாலு நல்ல வார்த்தை சொல்லி பதில் போடுவார். அதை கிரிக்கெட் விளையாடுபவரிடம் எதிர்பார்க்கலாமா? உங்களை இளைஞனாக, மாணவராக காண்பவருக்கும், வெறும் விசிறியாக (fan) காண்பவருக்கும் வித்தியாசமில்லையா? பின்னர் நான் புரிந்து கொண்டது அவர்கள் முன்மாதிரி என்று சொல்வது அவருக்கு பிடித்த நபர் போல முடியை வெட்டிக் கொள்வது, உடையணிவது முடிந்தால் அவரை போல ஒரு உடல் மொழியை போலி செய்வது.

இந்த விளையாட்டை ஒரு 15 நாட்டுக்காரன தவிர வேறு யாராவது விளையாடுறானா? இதுக்கு உலக கோப்பை போட்டி நடத்துறத விட அபத்தமான விசயம் வேற ஏதாவது இருக்கா என்ன?

கிரிக்கெட் ரசிகனாக (பைத்தியமாக) இருப்பவர்கள் இதையே ஒரு தகுதியாக பெருமைக்குரிய விசயமாக நினைக்கிறார்கள். இவர்கள் யாரும் சச்சினின் சுயசரிதையையோ ராமச்சந்திரா குகா கிரிக்கெட் குறித்து எழுதிய புத்தகங்களையோ காசு குடுத்து வாங்க மாட்டார்கள் - வாங்கவே மாட்டார்கள் பிறகு எங்கு படிக்க?

சரி இவிங்கள திருத்தி எனக்கு என்ன ஆகப்போவுது. இந்த நாடும் நாட்டு மக்களும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

http://www.flipkart.com/corner-foreign-field-indian-history-british-sport-english/p/itmeymydvzzrmy9h?pid=9780670086351&ref=L%3A1437178811153338052&srno=p_8&query=ramachandra+guha&otracker=from-search

http://www.flipkart.com/picador-book-cricket-english/p/itmczz22rttxnhe7?pid=9780330396134&ref=L%3A1437178811153338052&srno=p_10&query=ramachandra+guha&otracker=from-search