Sunday 17 July 2016

கடிதம் எழுதுவது எப்படி?!





இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. படித்து மனம் புண்பட்டால் எழுதியவர் பொறுப்பு அல்ல. கட்டுரை பிடித்திருந்தால் தாராளமாக பாராட்டலாம். காசு, பணம் குடுத்தாலும் சந்தோசம் தான். ;-) :-D :-P

'காதல் கடிதம் எழுதுவது எப்படி?!' அப்டின்னு தான் தலைப்பு வச்சேன். அப்புறம் Professor ஒருத்தன் Love Letter எழுத மாணவர்களுக்கு சொல்லிக்குடுக்கிறான்னு கலாச்சார காவலர்கள் கிளம்பி வந்து விடுவார்கள் என்று தான் தலைப்பை மாத்தி விட்டேன்.

இந்த கலாச்சார காவலர் புண்ணாக்குகள் தலைப்பை தாண்டி படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்.

எனக்கு 28 வயசு ஆச்சு.

இது வரை ஒருத்தருக்கு கூட காதல் கடிதம் என்ன, கடிதமே எழுதியது இல்லை.

பள்ளிகளில் கற்பனையில் உதித்த நண்பர்களுக்கு, சுற்றுலா குறித்து, கோடை விடுமுறை குறித்து கடிதம் எழுத சொல்லி பயிற்சி கொடுப்பார்கள். தேர்வில் எழுதி தேறுவதற்கு.

அப்புறம் விடுமுறை கேட்டு விண்ணப்பம், Englishல என்னன்னு கேட்கவா வேணும்?!?!

Email id தொடங்கிய பின்னர், எனது Professor ஒருவருக்கு அவ்வப்போது mail அனுப்பிக்கொண்டிருந்தேன். FB வந்த பிறகு அதிலே message அனுப்பி கேட்டு கொள்வது.

பள்ளியில் இருக்கும் போது வீட்டுக்கு எழுதுவது போல சொல்லி தந்த கடிதம் பெரும்பாலும் சுற்றுலா செல்வதற்கு பணம் கேட்டு எழுதியதாகவே இருக்கும்.

கல்லூரி சென்ற பிறகு free sms அப்புறம் காசு குடுத்து sms என்று காலம் ஓடியது. கடிதம் எழுத வேண்டிய தேவையே இல்லை.

சூழல் இப்படி இருக்கும் போது காதல் கடிதம் எழுத வேண்டிய தேவை என்ன?!!

அதற்கான பொறுமை யாருக்கு இருக்கிறது?!!

காதலிப்பவர்கள் மட்டும் அல்ல, கணவன்-மனைவி, பெற்றோர், பிள்ளைகள் என கொஞ்சம், இல்லை இல்லை ஒரு 15 முதல் 20 வருடத்துக்கு முன்பு வரை எல்லாரும் கடிதம் எழுதி கொண்டு தானே இருந்தோம்.

இந்த Whatsapp Instant Messenger யுகத்தில், யுவனும், யுவதியும் Smiley அனுப்பியே பேசி முடித்து விடுகிறார்கள்.

Phone பேசும் போது அப்புறம் அப்புறம் என்று பேச விசயமில்லாமல் முழிக்கிறார்கள்.

கடிதம் கொஞ்ச நேரம் எடுத்து பொறுமையாக எழுதி, அதை அனுப்பி அதற்கான பதிலுக்கு காத்திருப்பது என்பது ஒரு மாதிரி கலவையான உணர்ச்சி தான்.

நீங்கள் 5 பக்கம் உங்கள் மனதில் உள்ளதை கொட்டி காதல் கடிதம் எழுதி அதற்கு வெறும் K என்று பதில் வந்தால் அப்படி பையனையோ, பெண்ணை கண்டிப்பா காதலிக்கணுமா என்ன?!!

30, 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை முன்வைக்கும் ஒரேயொரு கேள்வி பொண்ணுக்கு எழுத படிக்க தெரியுமா என்பதாக தான் இருந்திருக்க வேண்டும்.

Land Line Phone கூட ஊருக்கு ஒன்று என்று இருந்த அந்த காலத்தில், வெளியூரில் வேலையில் இருக்கும் கணவர் மனைவியுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது கடிதம் மூலமே சாத்திய பட்டிருக்கும்.

மனைவிக்கு எழுத படிக்க தெரியாது என்றால் இவருடைய கடிதம் மற்றொருவர் படித்து மனைவியிடம் சொல்வது போல் ஆகிவிடும். அதே போல் மனைவியும் இன்னொருவர் உதவியுடன் கடிதம் எழுதி அனுப்ப வேண்டி வரும்.

காதலர் இடையில் காற்று நுழைவது கூட அவர்களுக்கு துன்பத்தை தரும் என்று சங்க கவிதை எல்லாம் இருக்கு. அப்டி இருக்கும் போது இந்த கடிதம் newspaper மாதிரி எல்லாரும் படிக்க போறாங்க அப்டீன்னா மனுஷன் எப்படி அன்பை, காதலை, ஏக்கத்தை, தவிப்பை வெளிப் படுத்துவான். இவர்கள் பேசுவது எல்லாமே புற வயமான விஷயமாக தான இருக்கும்.

அப்படி இருப்பது அகச்சிக்கல்களுக்கு இட்டு செல்லாத?!!

ஒவ்வொரு மனுசனுக்கும் கடிதம் எழுத ஒரு உறவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்டி எழுத யாரும் இல்லையென்றால் ஒவ்வொருவரும் கற்பனையாக ஒரு காதலன், காதலியை உருவாக்கி மனதில் உள்ளதை அந்த கடிதத்தில் இறக்கி வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

 (இங்கே மனுசன் என்பது ஆண், பெண் இருவரையும் சேர்த்து தான் (பெண்ணியவாதிகள் கிட்டயும் சண்டை போட்டு முடியாது, அதான் இந்த 'பொறுப்பு துறப்பு'))

அது ஏன் கற்பனை காதலன், காதலி என்று கேள்வி எழுந்தால், இங்கே தமிழ்ச்சமுகத்தில் உறவுகளுக்கும், நட்புக்கும் பஞ்சம் இல்லை. இந்த 4G யுகத்தில் சுற்றமும், நட்பும், அனைத்தையும் மொண்ணையான கண்ணோட்டத்தில் பார்க்க பழகிக்கொண்டிருக்கிறது. போக நம்ம call பண்ணும் போது attend பண்ணாம விட்டுட்டு பிறகு பார்த்து திருப்பி கூப்பிடாத பக்கிக நமக்காக கடிதம் எழுதுவாய்ங்க??!!ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆண், பெண் நட்பே குதிரை கொம்பு என்று ஆகும் போது, காதல் என்பது எல்லாருக்கும் எங்கே வாய்க்க போகிறது. காதலை பற்றி தெரிந்த பெற்றோர், ஆசிரியர் இல்லவே இல்லை என்றே நினைக்கிறேன்.

இந்த சூழலில் ஒரு பெண் ஒரு பையனிடம் பென்சில் கேட்டால் கூட பையன் காதலுக்கான அறிகுறி என்று கனவு காண ஆரம்பித்து விடுகிறான். Propose பண்ணி bulb வாங்குகிறான்.

ஒரு பெண்ணை, பையனை பிடித்து விட்டது என்றால் உங்கள் மனதில் உள்ளதை ஒரு கடிதமாக எழுதுங்கள். மிகை உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் எழுதுங்கள். யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக வையுங்கள். ஒரு 10 நாள் கழித்து எடுத்து மீண்டும் படியுங்கள். உங்கள் மனசை அலை பாய வைத்த விசயத்திற்கு விடை கிடைத்திருக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

எனது நண்பர்கள், resignation, grievance முதல் explanation letter வரை ஆங்கிலத்தில் எழுத என்னை அவ்வப்போது தொடர்பு கொள்வர்.

MBA, MA என்று படித்த நண்பர்களால் ஏன் ஒரு கடிதம் கூட எழுத முடியவில்லை என்ற கேள்வி எனக்குள் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மனப்பாடம் பண்ணி எழுத சொல்லி குடுத்த நேரத்தில் மனதில் உள்ளதை எழுதி படித்து பார்க்க சொல்லி கொடுத்திருந்தால் நாம் ஓர் சிந்திக்கும் சமூகமாக மாறி இருப்போம்.

கல்லூரியில் பின்னூட்டம் எழுதி வாங்கும் போது நூறில் ஒருவர் தான் மனதில் உள்ளதை உள்ள படி எழுதி கொடுக்கின்றனர். அந்த பின்னூட்டம் எழுதிய நபர் மிகவும் உறுதியானவர் என்பதை சொல்லும். அந்த கடிதம் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

Proposal வரும் போது (இதுக்கு நல்ல தமிழ் வார்த்தை இல்லையா?!) பையனோ, பெண்ணோ,  'உன் மனசில் உள்ளதை கடிதமா எழுதி கொண்டு வா, படிச்சுட்டு சொல்றேன்' என்று சொன்னால் போதும், தொல்லை தருபவர்கள் ஓடி விடுவார்கள்.

எழுதிக்கொண்டு வருபவரை பிடிக்காத பட்சத்தில் விவரமாக மறுப்பு கடிதம் எழுதி விசயத்தை முடித்து கொள்ளலாம்.

இதற்க்கு சில விதிகளை கடை பிடிக்கலாம்.

1. கடிதம் தங்கிலத்தில் இருந்தால் நிராகரிக்கலாம்.

2. இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை, சந்திப்பிழை இருந்தால் பிழைத்து போகட்டும் என்று மறுவாய்ப்பு தரலாம்.

3. கடிதம் நன்றாக இருந்தால் 10 நாள் அவகாசம் கேட்டு 10 நாளுக்கு பிறகும் பட்டாம்பூச்சி பறக்கிறதா என்று பார்க்கலாம்.

4. இப்படி கடுமையான வரைமுறைகளை கடைபிடிக்கும் போது தமிழில் எழுதுபவர்களுக்கு தான் காதலிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகும். இதனால் தமிழ் வாழும்.

5. இதயங்கள் இணைந்துவிட்டால் காதல் கடிதம் எழுத தனி நோட்டுப்புத்தகம் ஒன்றை போட்டு, தினசரி எழுதி பரிமாறிக்கொள்ளலாம். எப்படியும் தேவைக்கு அதிகமாக பள்ளி கல்லூரிகளில் நோட்டுப்புத்தகம் தருவார்கள். அதை ஏன் வீணாக்க வேண்டும்?!?!

6. இப்படி காதலித்தால் காந்திய பொருளாதார விதிகள் படி செலவு மிச்சமாகும்.

7. வகுப்பில் ஆசிரியர் விடும் கதை பிடிக்க வில்லை என்றால் நீங்கள் குறிப்பு எடுப்பது போல் கடிதம் எழுதுவதை தொடரலாம்.

8. ஊடல் வரும் போது பழைய கடிதங்களை படித்து பார்த்து மனம் திரும்பலாம்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இதுக்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை அதனால் இந்த கட்டுரை இதோடு நிறைவு பெறுகிறது. ;-)









2 comments:

  1. இதை படிக்கும் எந்த பெண்ணிற்கும் உங்கள் மேல் காதல் வந்தாலும் ஆச்சரியமில்லை..

    ReplyDelete
  2. Enjoyed reading the article.

    MBA, MA என்று படித்த நண்பர்களால் ஏன் ஒரு கடிதம் கூட எழுத முடியவில்லை என்ற கேள்வி எனக்குள் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. (Same experience)

    After reading the rules, the girl/boy will become a typical Tamil student in order to prove their love.

    Thank you for the tips given to overcome a boring class.

    ReplyDelete